திருநெல்வேலி அல்வாவும் பல கோடிப் பணமும்!!

1

வித்யாசாகர்
ள்ளியில் கட்டுரைப் போட்டியிலோ ஓவியப் போட்டியிலோ கலந்து கொள்ளும் ஒரு மாணவனை அழைத்து ‘இந்தா, நீ உலகத்தின் முதல் பரிசினைப் பெற்றாய்’ என்று கையில் கொடுத்தால் அந்த மாணவனின் முகத்தில் எத்தனை வெளிச்சங்கள் சிரிப்பாய்ப் பிரகாசிக்குமோ அப்படித் தான் பிரகாசித்தான் இனியன். ‘தமிழினியன்’ அவன் முழுப் பெயரென்றாலும் இனியனென்றே நண்பர்கள் அழைத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினார்கள்.

இனியனுக்கு வாழ்வின் அத்தனை வெற்றிகளும் உள்ளங்கையில் விழுந்து கிடப்பதாய் ஒரு சந்தோஷம், வானத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்க்கிறான், எதை விலைக்கு வாங்குவது? வானத்தையா பூமியையா!! என்று சிந்தித்திருப்பான் போலும். அப்படி ஒரு துணிவு, துடிப்பு, துள்ளல், அவனுக்குள் இன்று.

“வா.. வா… எல்லோரும் வாங்க.., இன்னைக்கு எல்லாருக்கும் விருந்து இருக்கு.., அதும் எங்க தெரியுமா?  ஐந்து நட்சத்திர விடுதியில விருந்து” சத்தம் போட்டுக் கத்தினான் இனியன்.

‘அப்படி என்ன தான் நிகழ்ந்து விட்டது இவனுக்கென்று’ திகைத்துப் போய் பார்க்கிறார்கள் அவனுடைய நண்பர்களெல்லாம். இனியனொன்றும்  அத்தனை சாதாரணமானவன் அல்ல. வீண் பேச்சுப் பேசியோ வெட்டியாக அரட்டை அடித்தோ திரிபவனல்ல. இக்கால இளைஞர்களுக்கு முன்மாதிரி இளைஞன். சுருக்கமாகச் சொன்னால் திரைப்படங்களில் நடித்திடாத ‘வாழும் கதாநாயகன் என்று சொல்லலாம் இனியனை.

“இனியா.. இனியா.. சொல்லுடா.. என்னடா ஆச்சு அப்படி, (இ)தோ பார்.. இனியும் நீ சொல்லலைன்னா நாங்க எல்லாம் திரும்பிப் போய்டுவோம். அப்புறம் நீதான் எங்களை தேடித் தேடி வந்து சொல்லணும்”

“சொல்லக் கூடாதுன்னு இல்லடா, சொன்னா நம்புவீங்களா, நான் ஒரு பெரிய கோடீஸ்வரன் ஆகப் போறேன் ரவி, என்னால இனி எதையும் அப்படிச் சொடுக்கினா வாங்கிட முடியும்”

நண்பர்கள் திகைத்தார்கள். என்ன ஆச்சு இவனுக்கு. ஏதேனும் கனவு கினவு காண்பதாக நினைத்து பெனாத்துகிறானா அல்லது லாட்டரி கீட்டரி ஏதாவது… “ஹா..ங்………… எனக்கு தெரிஞ்சிப் போச்சு………..”

“இனியா எனக்கு தெரிஞ்சிப் போச்சு”

“என்ன தெரிஞ்சிப் போச்சு மலர்?”

“உனக்கு நம்மூரு பம்பர் லாட்டரி அடிச்சுப் போச்சி……..”

“அடப்போடா… அதலாம் எப்பவோ நிறுத்தியாச்சி தெரியாதா”

“அப்போ..,  இன்னைக்கு ஏப்ரல் பூல்…..”

“ச்ச ச்ச.. நான் சொல்வது சத்தியம், இன்னும் இரண்டே நாள்ல நான்தான் நம்ம ஊர்லையே, ஏன் தமிழகத்துலையே, இந்தியாவிலேயே பேசப்படப் போற முதல் ஆளாகப் போறேன்”

“டேய்.. ரவி.. மலர்.. வாசு.. வாங்க போலாம். இவனுக்கு ஏதோ ஆயிடுச்சி..டா”

“நில்லு மணி, இங்க பார்.. ஐம்பது மில்லியன்.., ஐம்பது மில்லியன் டாலர்.., நம்மூரு பணம் எவ்வளவு தெரியுமா ‘இருநூற்றி இருபத்தொன்பது கோடியே, எழுபத்தொன்பது லட்சத்து, தொன்னூற்றியொன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து ஐம்பத்து நாலு ரூபா இருபத்தியிரண்டு பைசா..”

இனியன் நீட்டிச் சொல்லி மூச்சு விடுவதற்குள் வாய் பிளந்து ஓடி வந்தார்கள் நண்பர்களெல்லாம். படக்கென அந்தத் தாளை மடக்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான் இனியன்.

“நான் சொல்றதைக் கவனமா கேளுங்க. இது, என்னோட பணம் மட்டுமில்ல, உங்களோட பணமும் கூட”

“என்னடா இனியா, உனக்கு ஒன்னும் ஆயிடலியே என்னென்னவோ சொல்ற, ஏதேதோ காட்டுற,  எங்களால நம்பவே முடியலேயேடா”

“முதல்ல நானும் நம்பலடா ரவி, பொய்யின்னு தான் விட்டுட்டேன், பிறகு தான்…. ‘இங்க பார் என்னோட பேர்ல செக்கு, வங்கியில போட்டு எடுக்க சிபாரிசு கடிதம்ன்னு எல்லாம் அனுப்பினாங்க,  அதனாலதாண்டா நானே நம்பினேன்..”

“எங்கயிருந்து வந்திருக்கு, யார் அனுப்பினா, எதையுமே விவரமா சொல்ல மாட்டேன்றியேடா  இனியா, சரியா சொன்னா நாங்களும் அதை யார் கிட்டையாவது கேட்டு உறுதிப் படுத்துவோம்ல”

“அதலாம் விடு மணி.. ஒரு கனவு போல இருக்கு தெரியுமா. ஒரு புத்தகம் வாங்க, கல்லூரி கட்டணம் அடைக்கன்னு…. எவ்வளவு எல்லாம் கஷ்டப் பட்டிருப்போம்; அதுக்கெல்லாம் ஒரு விடிவுடா இது. எப்படின்னெல்லாம் கேட்காதிங்க, உடனடியா எனக்கு பணம் வேணும், ‘ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரம் வேணும்’ யாராவது ஏற்பாடு பண்ணுவீங்களா”

“ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரமா?????” நண்பர்கள் வாய் பிளந்து நின்றார்கள். மணி, மலர், ரவி, அழகன், இனியன் எல்லோரும் கல்லூரி முடித்து வேலை தேடி அலைந்து, ஏதும் சரியாகக் கிடைக்காததால் பகுதி நேர ஊழியர்களாகக் கிடைக்கும் இடங்களில், கிடைக்கும் வேலைகளை செய்து வரும் லட்சிய இளைஞர்கள்.

இவர்களில் இனியன் எப்போதுமே சமூகம் பற்றியும் தன் பெற்றோர் பற்றியும் சிந்தித்து எதையேனும் வாழ்வின் கடைசி நாளிற்குள் சாதித்தே ஆக வேண்டுமென லட்சியக் கனவுகளோடு வாழ்பவன். அப்படிப்பட்ட இனியனின் சொல்வதை யாராலும் நிராகரிக்க முடியாமல் பணம் திரட்டுவதற்கான வழியை யோசிக்கிறார்கள்.

“இனியா நான் எப்படின்னா அப்பா கிட்ட பேசி தங்கச்சி கல்யாணத்துக்கு வைத்திருக்கிற பணத்துல ஒரு ஐம்பதாயிரத்தை வாங்கித் தரேன்”

“நான் கூட எங்க வீட்ல பேசி ஒரு இருபதாயிரம் வாங்கிக் கொடுப்பேண்டா இனியா” மற்றொருவன் பதினைந்தும், மீதம் ஐம்பதாயிரத்தை மட்டும் இனியன் தயார் படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுத்தார்கள்.

“மச்சி இங்க பாருடா.. உன் மேல நம்பிக்கை இல்லாமலெல்லாம் இல்லடா, நீ என்ன சொன்னாலும் செய்வோம். ஆனா என்ன பண்ண போற, எப்படி இதல்லாம் நடக்கும்னு சொல்வியா?” ரவி கேட்டான்.

இனியன் ஒரு நொடியும் தாமதிக்கவில்லை. தன் கைப்பையில் வைத்திருந்த கோப்புகளை எல்லாம் எடுத்துக் காட்டினான். எல்லோரும் கையெழுத்திட்டு அங்கீகரிக்கப் பட்ட காசோலை மற்றும் இதர படிவங்களையும் மின்னஞ்சல் மடல்களையும் எடுத்து அவர்கள் முன் போட்டு, ஏதோ இணைய லாட்டரியில் பணம் அடித்திருப்பதாகவும், அந்த தொகை மிகப் பெரிய தொகை என்பதால் பேங்காக் வங்கியில் வந்து எடுத்துக் கொள்ள சொல்லி பேங்காக் வங்கியிலிருந்து அழைத்துப் பேசியதாகவும், பேங்காக் போக இனியனுக்கு கடவுச்சீட்டு அதாவது பாஸ்போர்ட் இல்லாததால் அவர்களே ஒரு உலக வர்த்தக மையம் ஒன்றினை தொடர்பு கொண்டு பணம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பதாகவும், தற்போது அந்த உலக வர்த்தக மையத்தின் மூலம் பரிந்துரைக்கப் பட்ட வக்கீல் ஒருவர் இவனை பலமுறை அழைத்துப் பேசி அநேகமாக நாளைக்கே பணம் இவனுடைய இந்திய வங்கிக் கணக்கிற்கு மாறி விடும் என்று சொன்னதாகவும், அதற்கு முன் இவ்வளவு முன்தொகை இட வேண்டுமென்றும் தவிர இதர செலவெல்லாம் சேர்த்து இரண்டு லட்சம் வரை கட்ட வேண்டுமென்றும், அவன் முடிந்தவரை தயார் செய்து விட்டதாகவும் மீதம் இவ்வளவு பணம் தேவைப்படுகிறதென்றும் சொல்லி முடிக்க நண்பர்கள் எல்லோரும் அமைதியாக அவனையே பார்த்தார்கள்.

“ஏண்டா… யோசிக்கிறீங்க, எந்த பணமா இருந்தாலும் பரவாயில்லைடா, கொண்டு வாங்க, இன்னும் இரண்டே நாள், இரண்டே நாள்ல திருப்பிடலாம், இந்த பணம் மட்டும் கிடச்சுட்டா நாமெல்லோருமே கோடீஸ்வரன்களாயிடுவோம்..”

“இதப் பாரு மச்சி, உனக்கு உதவி செய்ய எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் கிடையாதுடா, ஆனா இரண்டு லட்சம்!!! யோசி, நன்றாக யோசித்துப் பார், வெறும் இரண்டு லட்சம் வாங்கிக் கொண்டு இவ்வளவு பெரிய தொகை தருவது சாத்தியமா?” ரவி கேட்க

“ஆமாண்டா இனியா, இணையத்துல இப்படி எல்லாம் நிறைய திருட்டுத் தனம் நடக்குதுடா, உண்மையான சான்றிதழ் மாதிரியே கல்லூரி சான்றிதழ் முதற் கொண்டு அச்சடிச்சி தராங்கடா.., எதுக்கும் வேற யாரையாவது நல்லா தெரிந்தவங்களை கேட்டுக்கடா” மலர் கெஞ்சினான்

“நீங்கல்லாம் எதிர்மறையாவே யோசிக்கிறீங்கடா, நான் அதுக்கெல்லாம் தயாரில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கு, வெள்ளைக்காரன் ஆங்கிலத்தில் பேசினான், ஜெனுன் பிரின்ட் சான்றிதழ் வந்திருக்கு, இன்னும் என்னடா வேணும், நம்பினாத்தாண்டா வாழ்க்கை.  எனக்கு இதுல நம்பிக்கை இருக்கு ரவி, முழு நம்பிக்கை இருக்கு. இது மட்டும் நடந்துட்டா, இதை வைத்து எத்தனை பேரோட கண்ணீரைத் துடைப்பேன் தெரியுமா? மொத்த ஏழ்மை இளைஞர்களையும் தத்தெடுத்துக்குவேண்டா, பெரிய பெரிய ஆளா ஆக்குவேன். நூறு இளைஞர்களை சுயமா அவுங்க கால்ல நின்னு உழைக்கிற அளவுக்கு உருவாக்கி அவர்கள் மூலமா ஆயிரம் ஆயிரம் பேருக்கு என்னால வேலை கொடுக்க முடியும்டா ரவி.”

“எனக்கு ஒரு பெரிய கனவு இருக்குடா.. யாரும் ஏழ்மையா இருக்கக் கூடாது. சாப்பாடுக்காக பொய் சொல்லக் கூடாது. துணிக்காக பொருளுக்காக ஆசைப்பட்டு அடுத்தவன் பொருளை திருடக் கூடாது. என்னால அவனை மாதிரி இருக்க முடியலையேன்னு பொறாமைப் பட்டு வஞ்சம் வளர்த்து கொலை வரை ஒருவனை ஏழ்மை கொண்டு போயி விட்டுடக் கூடாது. எரியுற ஏழ்மை நெருப்பு, தணல் விட்டு வீட்டின் கூரைவரை எரியறதாலதான் இன்னைக்கு யாரைப் பார்த்தாலும் கிடைக்கிறதச் சுருட்ட தயாராயிட்டாங்க. அதலாம் ஒழிக்கனும்னா, அவர்களுக்கு உழைப்பை கொடுக்கணும்டா, உழைத்து சுயமா சம்பாரித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கனும். கட்டுக் கட்டா பணத்தை சுயமா சம்பாரித்துப் பார்த்துட்டா பிறகு பிறர் பொருள் மேல ஆசை வருமா? நம்மால் முடிந்த ஆயிரம் பேரை அப்படி உருவாக்குவோம், அந்த ஆயிரம் பேர் கிட்டயும் அவர்கள் மூலமா அதுபோல யாரேனும் ஒரு ஏழை மாணவனையாவது படிக்க வைக்க, பெரியாளாக்கி விட வாக்குறுதி வாங்கிக்குவோம், அதே கணக்குல ஒரு ஐம்பது; நூறு; வருடம் தாண்டிப் பாரு, அடுத்த தலைமுறைக்கு பசி இருக்குமா??  பஞ்சம் இருக்குமா?? அதுக்கு இந்த தொகை வேணும்டா.. வேணும் கண்டிப்பா வேணும்”

எல்லோர் வாயையும் தன் கனவுகளால் அடைத்தான் இனியன். நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை ஈடு செய்யத் தக்க பாதையும் தேவை என்பதை மட்டும் சிந்திக்க அவகாசமின்றி போனது இனியனுக்கு. அவரவர் அவரவரால் இயன்றதை சேகரித்துக் கொடுத்தார்கள். இனியன் கடைசியாக தன் அம்மாவிடம் கெஞ்சி கேட்க, அவள் வார வட்டிவிடும் கந்துவட்டி கடையில் பேசி என் மகன் தொழில் துவங்கப் போகிறானென்று சொல்லி ஐம்பதாயிரம் வாங்கித் தருகிறாள்.

மொத்தப் பணமும் சேர்த்து இரண்டு லட்சம் அவர்கள் சொன்ன பேங்காக் வங்கி முகவரிக்கு அனுப்பப் படுகிறது. இனியனுக்கு ஏக சந்தோஷம். எப்படியும் இரண்டு நாளில் பணம் கைக்கு வந்து விடும். எப்படியும் பத்திரிகைகளுக்கெல்லாம் தெரிந்து பேட்டியெல்லாம் எடுப்பார்கள். ஒரு பாதித் தொகையை ‘பொதுச்சேவை மையங்களுக்குத் தருவதாகவும் மீதித் தொகையை வைத்து முழுக்க முழுக்க படித்து வேலை தேடும் இளைஞர்களை வைத்து தொழில் துவங்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லலாம்.

“மச்சான் பணம் வந்த உடனே ஒரு பெரிய கார் வாங்கி அதுல ஒரு சீட்டு முழுக்க பீரா வாங்கி அடுக்குறோம்டா.. ஒரு ஒரு வாரத்திற்கு சலிக்கிற வரையும் குடிக்கிறோம், ஆட்டம் போடுறோம்,  குடிக்கிறோம் ஆட்டம் போடுறோம்.. என்ன மச்சி சொல்ற..” அழகன் இனியனிடம் சொல்லி விட்டு திரும்பி ரவியைக் கேட்க..

“அதுலையே இருக்காதடா அழகா, உன் பணத்துல குடிச்சாலே எனக்குப் பிடிக்காது, இதுல நான் வேற வாங்கித் தருவேனா.. ஆசை தான் உனக்கு. இந்தப் பணத்துல ஒரு காசு கூட நமக்கு சுயதேவைக்காக எடுக்கப் போறதில்ல”

“நீ எடுக்காத.., எங்களுக்குக் கொடு.. அதலாம் நாங்க பார்த்துக்குறோம்”

“நீங்க வேற நான் வேறையா? அதில்லடா அழகா,  நான் சொல்வது அப்படியில்லை, இந்த பணம் நாம் சம்பாரித்த பணமில்லைதானே. நமக்குக் கிடைக்கப் போற பணம்தானே, அதுல பிறருக்குக் கொடுக்க உரிமை இருக்கே தவிர,  நமக்கு அனுபவிக்க எந்த உரிமையும் கிடையாது. வேணும்னா இதை வைத்து நாமும் சம்பாதிப்போம், நம்மளால பிறரையும் சம்பாதிக்க வைப்போம், அதுக்கப்புறம் உன் பணத்துல நீ ஆட்டம் போடு நானும் கூட சேர்ந்து போடுவேன்..”

கனவுகள் சுகமாயினும், கனவுகள் நல்லதாயினும், கனவுகள் கனவுகள் தானே. இனியன் மிக நல்ல கனவு கண்டான். பணம் அனுப்பியதிலிருந்து ஒவ்வொரு நொடியும் கனவுகளோடு வாழ்வினை வெல்லும் பொழுதிற்காய் காத்திருந்தான். என்னதான் நாமாக ஆயிரம் கற்பனை லட்சியமென கோட்டைகளைக் கட்டிக் கொண்டாலும் ‘எது நடக்க இருக்கிறதோ அதுவே நடத்தப் படுகிறது. அந்த நியதியின் படி ஏற்பட்ட தாமதம் இனியனுக்கு மெல்ல மெல்ல பயத்தை தந்தது.  தாமதிக்கும் ஒவ்வொரு நொடி காத்திருப்பும் வலித்தது இனியனுக்கு. நடக்கும் என்பதை தவிர வேறொன்றுமே நினைக்கத் தயாராகயில்லை என்றாலும் ஒரு பயம் மனதை கவ்வியது.

வாழ்வில் பொதுவாக நாம் எல்லோருமே என்னதான் திடமான நம்பிக்கை வைத்திருந்தாலும் அது சரியான நம்பிக்கையாகவும் இருத்தல் வேண்டும். இதை இனியன் சிந்திக்கத் தவறி விட்டான். நாட்கள் ஒன்றாய் இரண்டாய் நகர ஆரம்பித்தது. பணம் பெற்ற இடத்திலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. ஒரு நாளைக்கு ஆயிரம் முறை அழைத்தவன், இப்போது ஒரு முறை கூட அழைக்கவில்லை. நண்பர்கள் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார்கள். அலசி ஆராய்ந்து ‘சில இணையதளம் தரும் வசதி மூலம் தமிழகத்திலிருந்து உலகத்திற்கு எங்கு வேண்டுமாயினும் குறைந்த கட்டணத்தில் அழைக்கவும், அங்ஙனம் அழைக்கையில் பக்கத்து வீட்டு நபருக்கு அழைத்தாலும் வெளிநாட்டு அழைப்பு போலத் தான் அலைபேசியில் காட்டும், அழைப்பவரின் தொடர்பு எண்ணினைக் காட்டாது என்பதையும் கண்டு கொண்டார்கள். தகவல் அறிந்து அம்மா பதறிப் போனாள், பயந்தாள். ஒரு லட்சம் தங்கையின் கல்யாணப் பணத்தை வாங்கித் தந்த நண்பனின் அப்பா வீடுவரை வந்து சத்தம் போட்டுவிட்டுப் போனார். ‘காவலில் தெரியப் படுத்துங்களில்லையேல் நான் தெரிவிப்பேன்’ என்று எச்சரிக்கை செய்தார்.

இனியனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எத்தனையோ மின்னஞ்சல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தும் பதிலில்லை. அவர்கள் அழைத்த தொடர்பு எண்ணில் அழைக்க முயன்றாலும் அத்தனை எண்களுமே தற்காலிகமாக அணைத்து வைக்கப் பட்டிருப்பதாக தகவல் வந்தது.

கனவெல்லாம் கண்முன் வந்து தன்னைச் சுட்டு எரித்தாலும் நம்பிக்கை கொண்டான் இனியன். இன்னும் சற்று அவகாசம் கொள்ள வேண்டும் போல் எண்ணினான். எப்படியும் பணம் வந்துவிடுமென்றே நம்பினான். நடக்காது என்பதை மட்டும் அவனால் நினைக்கவே முடியவில்லை. நடந்தேயாக வேண்டுமெனும் ஒரு தீவிர சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுப் போனான். அவன் நம்பிக்கை ஒருவிதத்தில் மட்டும் வீண் போகவில்லை. மூன்று நாள் நான்காகி, நான்கு ஐந்தாகி, ஐந்து ஒரு வாரமாகக் கடந்த பின், வாரம் இரண்டு மூன்றாக நகர்ந்த பின் ஒரு மின்னஞ்சல் வந்தது அவர்களிடமிருந்து.

தான் அனுப்பிய பணம் கிடைத்ததாகவும், மிக்க மகிழ்வென்றும், பணத்தை பேங்காக் வங்கியிலிருந்து அந்த உலக வர்த்தக மையம் எடுத்து விட்டதாகவும், இன்னும் ஒரே நாளில் மொத்த தொகையையும் இவன் கணக்கிற்கு மாற்றி விடுவதாகவும், உடனடியாக அதைச் செய்வதற்கான சம்பளமாக ரூ பத்து லட்சம் அனுப்பிவைக்க வேண்டுமென்றும் அனுப்பா விட்டால் அனுப்பிய பணத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை என்றும் அந்த மின்னஞ்சல் கூறி முடிய, கணினியை எடுத்து உடைத்துப் போடவேண்டும் போல் இருந்தது இனியனுக்கு.

உடனடியாக அந்த மின்னஞ்சலோடு குறிப்பிடப் பட்டிருந்த தொலைபேசி எண்ணினை கையில் குறித்துக் கொண்டு ஓடினான். ஓடி ஒரு தொலைத்தொடர்பு கடைக்குள்  நுழைந்து, அவசரம் அவசரமாக அழைத்தான். எதிர்முனையில் யாரோ தொலைபேசியை எடுத்து ‘ஹலோ…. திருநெல்வேலி அல்வா கடையிலிருந்து பேசுறோம் யார் வேணும்?’ என்றார்கள். பகீரென்றானது இனியனுக்கு.

“என்னங்க இது பேங்காக் இல்லையா?!!!”

“பேங்காக்கா??????!! ஏம்ப்பா இது பேக்கரிப்பா, திருநெல்வேலி அல்வா விக்கிற பேக்கரி, தொடர்பு எண்ணை ஒழுங்காப் பாரு, போனை வைய்யீ………”

இனியனின் கையிலிருந்த தொலைபேசி அனிச்சையாக தவறிக் கீழே விழுந்து விட்டது!

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருநெல்வேலி அல்வாவும் பல கோடிப் பணமும்!!

  1. ஆசை காட்டி, மோசம் செய்வது என்பது இதுதான். மீண்டும் விழிப்புணர்வூட்டும் நல்ல சிறுகதை. இனியேனும் ’இனியன்’ போன்றவர்கள் விழிக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *