“தமிழ்நாடு” பெயர்சூட்டல் 50 ஆவது ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டம்

0

சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்று அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்டு, இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகின்றது. அதற்கான பொன்விழாக் கொண்டாட்டத்தில் இருக்கும் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை/பேச்சு/கவிதைப் போட்டிகள் 29.06.2018 காலை 9.00 மணி முதல் தொடங்கி சென்னை இராணி மேரி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த 80க்கும் மெற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தம் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வீதம் ஒண்பது மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாயினர். கவிதைப் போட்டிக்குத் “தமிழின் சக்தி” என்றும், கட்டுரைப் போட்டிக்கு “மொழிப்பற்றெங்கே விழிப்புற்றெழுக” என்றும் தலைப்புகள் கொடுக்கப்பட்டன. பேச்சுப் போட்டிக்கு தமிழ் மொழி வளர்ச்சி குறித்து விதவிதமான தலைப்புகள் அளிக்கப்பட்டன. இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறையுடன் தமிழக தமிழ்வளர்ச்சித் துறையின் சென்னை பிரிவும் சேர்ந்து நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது. மதியம் 2.00 மணி அளவில் நிறைவு விழாவாக பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்பெற்று தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர் திரு. கோ.விசயராகவன் அவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியும், பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் சிறப்புரை ஆற்றினார். இதே போட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரேநாளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 

படம்: பரிசுபெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் மாணவர்களுடன் தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர். துணை இயக்குநர், சிறப்பு இயக்குநர் மற்றும் இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *