பாரினிலே பெரும் படைப்பாய் பரிணமித்த படைப்பு என்றால் பாங்கான பெண் படைப்பே ஆகும் எனக் கண்டிடலாம் அப்படைப்பை பிரம்ம தேவன் ஆக்கிவிட எடுத்த நாள் அப்பிரமன் படைப்பு அதற்கே அதிக சவால் ஆகிருக்கும் !
அழகாக முகம் அமைக்க அதிக நாள் ஆகிருக்கும் அன்பு பாசம் நேசம்வைக்க அதற்கும் நாள் எடுத்திருக்கும் பொறுமை எனும் நகையணிய வெகு நாளே வந்திருக்கும் பெண்மை அங்கே உருவாக பிரம்ம தேவன் களைத்திருப்பான் !
கருவறையை உள்ளே வைத்தான் கருணைதனை நிறைய வைத்தான் அருமை நிறை அன்னையென அவள் படைப்பை அளித்தானே வருகின்ற துயரம் எலாம் மனம் ஏற்க அவள்படைப்பை மாண்பு நிறை படைப்பாக படைத்து விட்டான் பிரமனவன் !
தங்கையென பெயர் பெறுவாள் தமக்கை என மாறிடுவாள் தன்னிகரே இல்லை எனும் தாயாக அவள் இருப்பாள் மங்கலமே அவள் ஆவாள் வருவோர்க்கு உணவு அளிப்பாள் எங்குமே அவள் தேவை எவர்க்கும் நிகர் இல்லையன்றோ !
பிள்ளைபெறும் பெரும் பொறுப்பை பிரம்ம தேவன் கொடுத்துள்ளான் பேணி அவள் வளர்த்துவிட பெரும் பாடு பட்டிடுவாள் வளரும் பிள்ளை வாழ்வளிக்கும் என்று அவள் வளர்ப்பதில்லை பிள்ளை வாழ்வு மனமெண்ணி பெருங் கனவே கண்டுநிற்பாள் !
கவலை எல்லாம் உள்வாங்கி கண் நீரால் கரைத்திடுவாள் கடும் பசியே வந்திடினும் காட்டாமல் அவள் இருப்பாள் சுடு சொற்கள் கேட்டாலும் சுகம் என்றே எடுத்துநிற்பாள் சொர்க்கம் என நினைத்தவளும் நரகமதை சுமந்து நிற்பாள் !
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.