தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு …
பவள சங்கரி
தலையங்கம்
அசாமில் சமீபத்தில் NRC – தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 1200 கோடி உரூபாய் செலவில், 5 ஆண்டுகள் உழைப்பில் இந்தக் கணக்கெடுப்பு எடுத்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அசாமின் மொத்த மக்கள் தொகையான 3,29,91,384 பேர்கள் இதற்குப் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 2,89,83,677 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 40,7707 விண்ணப்பங்கள் விடுபட்டுள்ளன. இவர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் தங்களுடைய குறைகளைக் கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தமது கருத்தாக மம்தா பானர்ஜி அவர்கள் இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாகக் கூறுகிறார். நமது உள்துறை அமைச்சர் இது விரைவில் சரி செய்யப்படும் என்றும் சமாதானம் கூறியுள்ளார். சுமாராக 15% பேர்கள் விடுபட்டுள்ளது சந்தேகம் ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஆம், 40 இலட்சம் பேர் விடுபட்டுள்ளது அரசியல் நோக்கர்களின் பார்வையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரு . அஜ்மால் மற்றும் அவருடைய சகோதரர் திரு. சிராஜூதின் அஜ்மால் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விடுபட்டு மீண்டும் இணைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.