பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (173)

  1. யானை – சிறுவர் பாடல்

    வேலை செஞ்சு களைச்சிப்போயி வேழமொண்ணு வருகுது
    காலைச்சுற்றிக் கட்டிப்போட்ட கஸ்டத்தோட வருகுது.
    ஆளுக்கொரு பக்கம் நிண்ணு அங்குசத்தால் குத்தியும்
    அதையும் தாங்கித் துன்பத்தோடு அமைதி காத்து வருகுது.

    மாகரத்த யானை தன்றன் வலியறிந்தும் குறுக்கிடும்
    சூகரத்தைப் போகவிட்டுத் தூரமாக விலகிடும்
    பாகர்செய்யும் துன்பந்தன்னைப் பலமிருந்தும் பொறுத்திடும்
    வேகமுற்று மூர்க்கம்கொண்டால் மட்டுமே அதஞ்செய்யும்

    பூதலத்தில் பொறுமை காக்கும் புனிதர்கூட அற்பரின்
    பொய்புரட்டை வஞ்சச்சூதை புன்மையைப் பொறுப்பதும்
    ஆதரித்து அன்பு செய்து அவரை ஏற்றுக் கொள்வதும்
    ஆனை காட்டும் நற்குணத்திற் கீடு என்பர் மாந்தரே.

    (சூகரம் – பன்றி)

  2. யானையொரு அதிசயம்.!
    =======================

    உருவில் பெருத்த உயரிய விலங்கு
    இருபுறம் கட்டிய இரும்புச் சங்கிலி.!
    பிணைக்கப் பட்டது பிழைசெய் ததாலா.?
    இணையாய் வந்த இருவரும் யாரோ.?
    மாவிலங் கதனை மாதங்க மென்பார்
    கோவில் வாசலில் கண்டும் தொழுவார்.!
    அகல வாயினால் அனைத்தும் உண்ண
    சகலமும் வயிற்றில் செரிக்கும் அதிசயம்.!
    பிளிரும் சத்தமோ பெரிதாய்க் கேட்கும்
    களிரின் சினமோ காட்டையே அழிக்கும்.!
    தன்கைப் பிறரின் தலையிலே வைத்து
    தன்னல மின்றித் தரும்நல் லாசியை.!
    விலங்கென் றாலும் விதிவி லக்காய்
    நலம் செய்யும் நல்ல பிராணியே.!
    பதமாய் மனிதருடன் பழகும் ஆனால்
    மதம் கொண்டால் முதல்பலி பாகனாம்.!
    மண்ணில் பிறந்த மாவிலங்(கு) யானை
    கண்ணுக் கின்னும் காட்சிப் பொருளே.!
    அச்சம் உண்டு அருகில் செல்லவும்
    பிச்சை எடுக்கப் பழக்கியது குற்றமே.!

    =========================
    நிலை மண்டில ஆசிரியப்பா
    =========================

  3. வேண்டாமே…

    காட்டில் பெரிய விலங்கதனைக்
    கட்டுப் படுத்தி சாதுவாக்கி,
    நாட்டில் நல்ல வேலைசெய்ய
    நன்றாய்ப் பழக்கி நலம்பெற்றும்,
    கோட்டை விட்டு விடுகின்றீர்
    குணமது கெட்ட மானிடரே,
    காட்டிப் பிழைத்தது போதுமய்யா
    கையால் பிச்சை வேண்டாமே…!

    செண்பக ஜெகதீசன்…

  4. யானை அழிவின் காட்சி………………….

    வனத் தாயின் கருவறையிலோ சுதந்திரமாக …..
    வாழ்விழந்து நிற்கிறேன் பரதேசியாக …………
    மரக்கிளை ஒடித்த கரங்களில்………..
    என் கிளை(உறவு)யிழந்த சோர்வு…..
    சுதந்திர காற்றில் மகிழ்வாக காட்டின் வாசம்
    சங்கிலியின் பிணைப்பிலோ கைதியின் வாசம்
    குழி தோண்டி குழிதோண்டியே
    குறுக்கு வழியில் கைது செய்வீர் !
    பாசமெனும் பெயரிலே பாசாங்கு செய்குவீர் !
    நேசம் காட்டி வீழ்த்தும் கலையினை
    நேற்று இன்றா கற்றுள்ளீர் !
    ‘களிறு’ என்ற கர்வம் அகற்ற
    ‘பிடி’ யின் உறவில் பிணைந்திடாமல் இருக்க
    மலை போன்ற உருவத்தினை
    மண்டியிட வைத்தீர் !
    அடிமை செய்யும் தொழிலை
    கற்றுத் தெளிந்த மானிடமே !
    பொய்வித்தை காட்டி விந்தை புரியும் ஆறறிவாளனே !
    எம்அறிவு குறைபாடு உமக்கு ஆதாயமானது
    எங்கு கற்றீர் போலி வித்தை காட்ட

    கலையெனும் பெயரில் ஒப்பனை செய்தீர் !
    கண்ணுறக்கம் தொலைக்க நிம்மதி கெடுத்தீர்
    விலங்கு என்ற ஏளனமா
    மடிந்து போகாமலும் உயிர் வாழ விடாமலும் துயரம் தந்து
    மதம் பிடித்ததாய் புகார் சொல்வீர் !
    மதம் பிடித்த மானிடமே …..

    எம் இன அழிவில்
    உங்கள் சுயநலச் சாயம் தெரிகிறதே ….
    எமை விலை பேசும் மானிடமே !
    நகர்வலத்தில் வீதியுலா வருகையிலே
    வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு
    என் கண்ணின் ஈரம் புரிகிறதா
    யானை அழிவின் காட்சி தெரிகிறதா…………..

Leave a Reply to பெருவை பார்த்தசாரதி

Your email address will not be published. Required fields are marked *