-மேகலா இராமமூர்த்தி

திரு. ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

பச்சைப்பசும் வயல்வெளியின் நடுவே தென்படும் இந்த மண் பாதையைக் கண்டவுடன் இது மன்பதைக்கு நல்லதா தீயதா என்றொரு பதைபதைப்பு நம்முள் தோன்றத் தொடங்கிவிடுகின்றது!  எட்டுவழிச் சாலைத் திட்டம் ஏற்படுத்திய உளவியல் தாக்கமிது!

இந்தக் காட்சிக்குப் பொருத்தமாய்க் கவியெழுதக்  கவிவலாரைக் கனிவோடு அழைக்கின்றேன்.

*****

பச்சைவயல் பக்கத்திலே வரப்போகும் அகலப் பாதை, தமக்கு அகலாத் துன்பத்தைத் தந்திடுமோ என்று அஞ்சும் விவசாயிகளின் உள்ளக் குமுறலைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

பாதிப்பு…

பச்சை வயல்கள் நடுவினிலே
பாதை போட்டான் விவசாயி,
நிச்சயம் உதவும் தனக்கென்றும்
நன்றாய்த் தொழிலை மேம்படுத்த,
அச்சம் வந்ததே இப்போது
அகலப் படுத்தும் பாதையிலே
நிச்சயம் வந்திடும் பாதிப்பு
நம்பி யிருக்கும் பாமரர்க்கே…!

*****

சிந்தனைக்கு விருந்தான கவிதையைப் படைத்தளித்திருக்கும் கவிஞர் திரு. செண்பக ஜெகதீசனுக்கு என் பாராட்டு!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

வினை விதைப்பார்…விளை நிலமழிப்பார்…!

விளைநி லமெலாம் விலைநிலங்கள்
………………..விளைந்த தெல்லாம் கட்டிடங்கள்..!
வளைத்துப் போட்டார் வயலனைத்தும்
………………..வகையாய் விற்று நிலமழித்தார்..!
இளைத்து விட்ட பசுமைவயல்
………………..இதன் நடுவே நெடுஞ்சாலை..!
களைத்து விட்டான் விவசாயி
………………..கத்திக் கத்தி ஓய்ந்துவிட்டான்..!

சாலை போடச் சதித்திட்டம்
………………..ஜாலம் செய்த மாயவலை..!
ஆலைக் கழிவைக் கொட்டுவார்கள்
……………….. அதன் பிறகு பழிசொல்வார்..!
வேலை இல்லை நிரந்தரமாய்
……………….. விதியும் இல்லை வழிசொல்ல..!
மேலை நாட்டுக் கலாசாரம்
………………..மேன்மை அடைய வைக்காது..!

விளை நிலங்களையெல்லாம் விலை நிலங்களாக்கிவிட்டோம்; காட்டு வளத்தையும் கழனி வளத்தையும் அழித்து நாட்டுநலத்துக்குத் திட்டம் வகுக்கின்றோம். மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தேனும் அகலப்பாதை அமைப்பதென்பது பேதைமையே என்று இக்கவிதையில் உரைக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி, தன்னுடைய இன்னொரு கவிதையில் சாலை விரிவாக்கத்தால் மண்ணின் இயற்கை அழகு மடியும்; மாசு எங்கும் படியும் என்ற தன் நியாயமான வருத்தத்தையும் பதிவுசெய்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *