செம்பதிப்பு வரிசையில் ஐங்குறுநூறு

0

கல்பனா சேக்கிழார்

உதவிப்பேராசிரியர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

காலத்தை வென்று நிற்பவை சங்கப் பனுவல்கள். அவை தமிழ் மொழியின் அடையாளமாய், பண்பாட்டுக் கருவூலமாய்த் திகழ்வதால் காலம் தோறும் வெவ்வேறு வாசிப்புக்கு உட்பட்டுள்ளன. சுவடியில் இருந்தவை, அச்சு ஊடக வருகைக்குப் பிறகு மூலமாகவும், உரையோடு இணைத்தும் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இருப்பினும்  செம்பதிப்பு (மூலப்பாடத் திறனாய்வு) அடிப்படையில் பதிப்பிக்கும் நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திட்டத்தினை வகுத்து, தமிழ் அறிஞர் பெருமக்களிடம் அப்பணியை ஒப்படைத்தது. அந்த வரிசையில் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு, பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியம் அவர்களைப் பதிப்பாசியராகக் கொண்டு வெளிவந்துள்ளது.

இப் பதிப்பு தொகுத்தோர், தொகுப்பித்தோன், ஐங்குறுநூறு – பதிப்பும் உரையும், மூலம், பாடத் தேர்வு, சுவடி விளக்கம், பதிப்பு விளக்கம், பாடல் – சிதைவும் முறிவும், கூற்றுகள் – சிதைவும் முறிவும், பாடல்கள் – சுவடித் திறப்பு, கூற்றுகள் – சுவடித் திறப்பு, பாடல்கள் – பிழைப்பாடப் பட்டியல், கூற்றுகள் – பிழைப்பாடப் பட்டியல், சங்க இலக்கியம் தொடரொப்புமை, பிற பதிப்புகள் – ஒப்பீடு, சொல்லடைவு, தொடரடைவு, கலைச் சொற்கள், கூற்றுகள் – பாடல் தொகை, பழைய உரை இடம் பெறாத பாடல்கள், மெய்ப்பாடுகளும் பயன்களும், தொல்காப்பிய இயைபுகள், மன்னர்களும் நாடுகளும் என்னும் தலைப்புகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுப்பிலும் அதற்கான தரவுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

இவற்றுள் பாடத்தேர்வு என்னும் பகுதி அரிதின் முயன்று பல்வேறு சுவடிகளுடனும், கையெழுத்துப் பிரதிகளுடனும் ஒப்பிட்டு, பாடவேறுபாட்டில் எப்பாடம் சரியானது எனத் தேர்ந்து சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. சான்றாக ஐங்குறுநூற்றின் பதினோராவது பாடலின் முதலடியில் ‘மனைநடு’ ‘மனைநெடு’ என இரு வேறுபட்ட பாடம் உள்ளது. இப்படத்தினை எடுத்துக்காட்டி, மனைநடு வயல் என்பது மனைக்கண் நடப்பெற்ற வயலைக் கொடி என்னும் பொருளுடையது. சங்க இலக்கியங்களில் பதினோரு இடங்களில் வயலை இடம்பெறுகிறது. இஃது இல்லத்தில் நட்டு வளர்க்கப்படும் கொடியாகும். வேலியிலும் பந்தரிலும் படர்வது. மேற்கண்ட நூல்களில் இல்லெழு வயலை, மனைநெடு வயலை, மனைநடு வயலை என்றே பாடங்கள் உள்ளன. தழையாடையகச் சுற்றிக் கொள்ளுவதற்குரிய இக்கொடி தலைவியால் இல்லத்தில் நடப்பெற்று வளர்க்கப்பெறுவது. இங்கு நெடுமைப் பொருளினும், நடு வயலை என்னும் வினைப் பொருண்மையே, செய்யுளில் உள்ளுறை அமையப் பொருந்தும். மனையின்கண் நட்ட வயலை புறத்தே சென்று வேழக் கரும்பைச் சுற்றினாற் போல மனைக்கு உரியனாகிய தலைவன் பரத்தையரைச் சார்ந்தான் என்ற உள்ளுறையை, நடு வயலை என்னும் பாடமே அளித்தலின் இதுவே ஏற்புடையது எனத் தரவுகளின் வழியாகவும் இலக்கண குறிப்பு அடிப்படையிலும், வாழ்வியலோடு இயைத்துப் பார்த்தும் இது சரியானப் பாடம் என நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்களைக் கொண்டுள்ள ஐங்குறுநூற்றிணை, திணைவாரியாக ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஐந்து நூலாகப்  பதிப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு நூலும் 700 பக்க அளவில் அமைந்துள்ளன. ஆய்வு நிலையில் இப்பதிப்பு ஆகச் சிறந்த பல்வேறு  பதிப்பு நுட்பங்களை உள்வாங்கியப் பதிப்பாக அமைந்துள்ளது.

ஐந்து தொகுதிகள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

எண் 40, நூறடிச் சாலை, தரமணி

சென்னை – 600113

2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *