க. பாலசுப்பிரமணியன்

 

நாம் யாரோடு போட்டிபோடலாம்?

கூட்டமைப்புக்களில் நாம் ஒன்றாக இருக்கும் பொழுதும் வேலைபார்க்கும் பொழுதும் நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கக்கூடிய காட்சி – ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டுப்பார்க்கும் மனப்பான்மை. இந்தச் செயல் ஒருவரை மற்றவரோடு போட்டி போடவும், காரண காரியங்களை அலசாமலும், கால நேரங்களின் மதிப்பீடுகளை மனதில் கொள்ளாமலும், சரி நிகரில்லாத இரு செயல்களையோ அல்லது மனிதர்களையோ ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒரு போக்கை வளர்க்கின்றது. இப்படிப்பட்ட ஒப்பீடுகளை மனதில் கொண்டு நாம் சில மனிதர்களையோ அல்லது அவர்களின் செயல்களையோ நியாயப்படுத்துவது மட்டுமின்றி மற்றவரை தாழ்த்தியோ அல்லது குறைத்து மதிப்பீடு செய்தோ ஒரு அசாதாரணமான நிலையை உருவாக்குகின்றோம். அது மட்டுமல்ல அதன் விளைவாக  சிலருக்கு மன அழுத்தம். மன உளைச்சல் மற்றும் தாழ்வு மனப்பான்மையே வளர்க்கின்றோம். இது ஒரு மிகவும் தவறான செயல். எந்த ஒரு குழந்தையையும், மனிதரையும். வேலையாட்களையும் மற்றவர்களோடு ஒப்பிடுவதைத் தவிர்த்தல் மிக அவசியம். இது அந்தத் தனி மனிதரின் மற்றும் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் உகந்ததல்ல.

குடும்பங்களும் நிறுவனங்களும் மற்றவர்களை பற்றிய மதிப்பீடுகளைக் கருத்தாக்கி வெளிப்படுத்துமுன் அவர்களின் தனிப்பட்ட சமுதாயப் பொருளாதார மற்றும் மனவளர்ச்சியின் சூழ்நிலைப் பரிமாணங்களை அறிதல் அவசியம். அந்தச் சூழ்நிலைகளின் பின்னணியிவ் தான் அவரை மதிப்பீடு செய்யவேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மட்டுமே அவர்களின் வளர்ச்சி மற்றும் செயல் பரிமாணங்கள் துல்லியமாக வெளிப்படும். அவ்வாறு இல்லாமல் மற்றவர்களோடு அவர்களை ஒப்பிடும் பொழுது பலவிதமான நிறை குறைகள் நிச்சயமாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

இப்படிப்பட்ட மதிப்பீடுகளின் காரணமாக அந்தக்கூட்டமைப்பில் உள்ளவர்களிடம் போட்டி மனப்பான்மைகள் எளிதில் உருவாகும். இப்படிப்பட்ட போட்டிகளில் சில நேரங்களில் நல்ல வளர்ச்சிக்கான ஆதாயங்கள் கிடைக்கலாம். அதே நேரத்தில் அது மனநலத்தை பாதிக்கக்கூடிய அளவில் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, கோபம். பொறாமை, வெறித்தனம் போன்ற பல ஆரோக்கியமில்லாத மன உணர்வுகளை விதைக்கவும், வளர்க்கவும், மற்றும் செயலாக்கம் செய்வதிலும் செய்யும். இது எந்தக் கூட்டமைப்பிற்கும், அது குடும்பமாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி காலப்போக்கில் விரும்பத்தகாத சூழ்நிலைகளை உருவாக்கும். பல கூட்டமைப்புக்களில் அதன் தலைவர் அல்லது மற்ற ஒருவரின் ஆதிக்க மனப்பான்மையும் மற்றவர்களுக்கு விருப்பமில்லாத சூழ்நிலைகளை உருவாக்கித் தாழ்வு மனப்பான்மைகளை உருவாக்க காரணமாக அமைகின்றது.

தற்காலச் சமுதாயத்தில் பல இடங்களில் இது போன்ற விரும்பத்தகாத போட்டிகள் குறைவின்றி காணக்கிடைக்கின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அதற்கு பலியானவர்கள் பல நேர்மையற்ற வழிகளையும் பண பலத்தையும் தரமற்ற தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தனிப்பட்ட மனநலம் கெடுவதுமட்டுமின்றி இது அந்தக் கூட்டமைப்பின் அடிப்படை அஸ்திவாரங்களை அசைக்கின்றது. மேலும் இந்தப் போட்டி மனப்பான்மையினால் நல்லுறவுகள் பாதிக்கப்பட்டு விவாதங்கள், வழக்குகள் மற்றும் சண்டைகள் உருவாகுகின்றன.

அது மட்டுமல்ல, இந்தப் போட்டிகளில் வெற்றி பெற முடியாதவர்களும், இந்தப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களும் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகி மனநல மருத்துவர்களை சந்திக்கும் நிலைகளுக்கு வந்து விடுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு அமைப்பினால் செய்யப்பட ஆராய்ச்சியில் இந்தத் தாழ்வு மனப்பான்மை தற்கால இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இது உண்மையிலேயே கவலைக்குரிய செய்தி.

காரணம்? பல குடும்பங்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு தேவையற்ற விருப்பமில்லாத மற்றும் உண்மைக்குப் புறம்பான பல இலக்குகளை நிர்ணயித்து விடுகின்றனர். மேலும், அதை அடைவதற்க்க்கான அழுத்தங்களை பல நிலைகளிலும் பல வழிகளிலும் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். இதனால் அந்த அடையமுடியாத இலக்குகளை நோக்கிப் பயணம் செய்பவர்களில் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தாழ்வு மனப்பான்மைகள் வளர்ந்து அவர்கள் தங்களைத்தாங்களே தோற்கடித்துக் கொள்கின்றனர்.

ஆகவே ஒருவரை எவ்வாறு ஒப்பிடவேண்டும்? யாரோடு ஒப்பிடவேண்டும்? என்ற வினாக்கள் பல நேரங்களில் எழுந்த பொழுது அதற்குக் கிடைத்த ஒரு சரியான பதில் – ஒரு மனிதனை அவனுடைய வளர்ச்சி மற்றும் கற்றல் பாதையில் முன்னால் எப்படி இருந்தான்? இப்பொழுது எப்படி இருக்கின்றான்? அவன் வளர்ச்சிப்பாதையில் செய்யப்பட சாதனைகளுக்கான குறியீடுகள் என்ன? அவன் உள்ளுணர்வுகள் எந்த நலத்தோடு இருக்கின்றன? – என்பவைகளே குறிப்பீடுகள். ஆகவே, ஒரு மனிதன் தன்னைத் தன்னோடு மட்டும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

ஒரு ஆங்கிலப் பேரறிஞர் எழுதுகின்றார் : “ Life is not a competition. Find the stuff that makes your soul sing and be your own uniquely beautiful self.”

வாழ்க்கை என்பது ஒரு போட்டியல்ல. நீ உன்னுடைய ஆன்மாவின் கீதத்தைக் கேட்கவேண்டும் மேலும் உன்னுடைய அழகான தனித்தன்மையோடு இருக்கவேண்டும்..”

நாமும் இந்த முயற்சியோடு வாழ்ந்து பார்க்கலாமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *