எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

மகிழ் வோடு வாழுதற்கு
வழிகள் பல இருக்கிறது
அவை மனதில் எடுக்காமல்
அல்லல் பட்டு நிற்கின்றோம்
கோபம் எனும் குணமதனை
குறைத்து நாம் வாழ்ந்தாலே
குவலயத்தில் எம் வாழ்வு
குதுகலமாய் அமையும் அன்றோ !

கோபமது வந்து விடின்
குறை சொல்லத் தொடங்கிடுவோம்
கோபமது மேல் எழுந்தால்
கொலை கூடச் செய்திடுவோம்
கோபம் எனும் நெருப்பாலே
குடும்பம் கூட பொசுங்கிவிடும்
ஆதலினால் கோபம் அதை
அனைவருமே ஒதுக்கி வைப்போம் !

கோபம் அது வந்துவிடின்
குணம் யாவும் மாறிவிடும்
குழந்தை என்றும் பாராமல்
குரூரம் அங்கே அரங்கேறும்
பவமதை செய்க என்று
கோபமது தூண்டி நிற்கும்
ஆதலால் கோபம் அதை
அண்டாமல் செய்து நிற்போம் !

கோபமெனும் குணம் பெருகின்
குறைகள் பல உருவாகும்
சாபம் இட்டு மற்றவரை
சஞ்சலத்தில் ஆழ்த்தி நிற்போம்
பாவம் செய்யத் தூண்டுகின்ற
கோபம் அதை ஒழித்துவிடின்
பூதலத்தில் எம் வாழ்வு
பொலிவாக அமையும் அன்றோ !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *