க.பாலசுப்பிரமணியன்

வெற்றிகள்ஒரு பார்வை 

ஒரு வெளிநாட்டில் உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்கான ஒரு நூறு மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் மூன்று இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இதில் ஒருவர் இளம் வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தன் கால்களை சற்றே இழுத்து நடந்து கொண்டிருந்தார். மற்றொருவர் நடக்க முடியாத காரணத்தால் ஊன்றுகோல்களை துணையாக்கி நடந்துகொண்டிருந்தார். மூன்றாமவர் ஒரு சக்கர வண்டியில் அமர்ந்து போட்டியில் கலந்து கொண்டிருந்தார். போட்டி துவங்கியதும் எதிர்பார்த்தபடி முதல் நபர் தன்னுடைய கால்களை சற்றே வேகமாக இழுத்துக்கொண்டு முன்னே சென்று கொண்டிருநதார். அவர் முன்னே செல்லும் பாதையில் சற்றே திரும்பி மற்றவர்கள் எந்த வேகத்தில் வந்துகொண்டிருக்கின்றனர்  என்று பார்த்தார். அந்த நேரத்தில் சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தவரின் சக்கரம் சற்றே பாதை தவறி அருகில் இருந்த வேலியில் சிக்குண்டது. இதனால் அந்த வண்டி அருகே  மெதுவாகக்  கவிழ்ந்து கீழே விழ அந்த நபரும் கீழே விழுந்து விட்டார். உடனே முதலில் சென்று கொண்டிருந்த போட்டியாளர் இலக்கை நோக்கிச் செல்லாமல் திரும்பி அந்த வண்டியை சரியாக நிறுத்தி அந்த மூன்றாம் நபரை எழுப்பி அந்த வண்டியில் சரியாக அமர வைத்து அந்த வண்டியை லேசாக தள்ளிவிட்டார்.அவர் தள்ளிய வேகத்தில் அந்த வண்டி முன்னே சென்று  இலக்கைத் தாண்டியது.

அந்தப் போட்டியில் பரிசு கொடுக்கும் நேரத்தில் மூன்றாவதாக வந்த முதல் போட்டியாளருக்குக் கிடைத்த வரவேற்பு  பிரமிக்கத் தக்கதாக இருந்தது. அவருடைய நறசெயல் அவருக்கு போட்டியில் இழப்பைத் தந்தாலும் அவருடைய  நற்பண்பு அவருக்குப் புகழையும் பெருமையையும் சேர்த்தது.

போட்டிகள் வெறும் வெற்றியை நிர்ணப்பதற்காக மட்டும் அல்ல. கூடி ஒரு செயலில் பங்கேற்கும் பொழுது தொய்ந்து போன உள்ளங்களுக்கும் இடரில் தவறிவிட்ட நட்புக்கும் ஆற்றலில் பின்தங்கிய தோழமைக்கும் கைகொடுப்பதற்காக அரங்கேறும் ஒரு செயல். வெற்றிகள் ஒருவரின் பண்பை நிர்ணயிப்பதில்லை.

வெற்றிகள் ஒரு திறனுக்கு மதிப்பீடு மட்டுமேயன்றி ஒருவரின் முழுத்தகுதிகளுக்குச் சான்றல்ல. வெற்றிகள் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில ஒரு செயலில் ஒருவரின் பங்கிற்குக் கிடைக்கும் ஒரு போற்றல். அதற்கு அப்பால் வெற்றிகள் ஒருவரின் வருங்காலத்தை நிர்ணயிப்பதில்லை. “வெற்றிகள் நம்மை ஊக்குவிக்கும் ஒரு மருந்து” என்பது உண்மைதான். அவை நம்மை மேலும் மேலும் சிறப்பாகச் செயலில் ஈடுபடுவதற்குத் துணை செய்யும் ஊக்கிதான்.

அதில்   சந்தேகமில்லை. ஆனால் அவைகள் பல நேரங்களில் முடிவுகளாக அமைவதில்லை. அவைகள் முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகளாக மட்டும் அமைகின்றன. ஆகவே, வெற்றிகளை முடிவுகளாகக் கருதி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுதல் தவறு. ஆனால் பலருக்கு இது புரிவதில்லை. தங்கள் மிகச்சிறிய   வெற்றிகளைத் தங்கள் வலிமைக்கும் நற்பண்பிற்கும் வாழ்க்கை வளத்திற்கும் முன்னுதாரணமாகக் காட்டி முரசு கொட்டிக்கொண்டு அலைகின்றார்கள். தங்கள் சாதாரணமான வெற்றிகளிக் கூடி மிகப்பெரிய சாதனைகளாகக் காட்டி மற்றவர்களைக் கவரவும் மற்றவர்களை தங்கள் வசம் ஆட்கொள்ளவும்  செய்கின்றார்கள். இதற்கு காரணம் வெற்றியின் மகிழ்ச்சி ஒரு போதையாக மாறி இவர்களை அடிமை கொள்ளுகின்றது. வெற்றியின் போதை ஒரு மனிதனின் அழிவுக்கு அறிகுறி. வெற்றியின் போதை ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல். வெற்றியின் போதை ஒரு மனிதனை சமுதாயத்திலிருந்து பிரித்து தனிப்படுத்துகின்றது. வெற்றியின் போதையில் அடிமையாகாதவர்கள் விவேகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. “Success is an event and a perception. Excellence is a journey; not a destination.“ வெற்றி என்பது ஒரு நிகழ்வு. அது ஒரு  பார்வை. சிறப்பு என்பது ஒரு பயணம்; அது இலக்கு அல்ல.”  இதை நாம் உணர வேண்டும். ஒரு வெற்றியை ஒரு நிகழ்வின் உரைகல்லில் மட்டும் உரசிப்பார்க்கவேண்டும். அதற்கு மேல் அதன் தாக்கங்களை எடுத்துச் சென்று நம் உள்ளத்தின் செயல்களின் உண்மைகளை மறைக்கவோ மூடவோ கூடாது. நாம் செய்யும் செயல்கள் மேலும் மேலும் சிறப்பிற்கு வழிவகுக்க வேண்டும். இந்தப்பயணத்தில் நமக்குப் பல புதிய உண்மைகள் வெளிப்படும். புதிய திறன்கள் சேரும். புதிய வெளிச்சங்கள் கிடைக்கும். புதிய பாதைகள் தென்படும். போட்டிகள் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை மதிப்பீடு செய்கின்றன.

வெற்றிகளையும் தோல்விகளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பலவித மனஅழுத்தங்களுக்கும் மனநோய்களுக்கும் இரையாகக்கூடும். அவைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மையையோ அல்லது உண்மையை விலக்கிய அயல்நோக்குகளையோ ஏற்படுத்தக்கூடும்.

வெற்றிகளையும்  தோல்விகளையும் மனதில் சுமப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் நிகழ்காலத்தை கடந்த காலத்திற்கு அடிமைப்படுத்தி நிகழ்கால சுகங்களை இழந்துவிடுகின்றனர்.. வெற்றிதோல்விகள் நம்மை ஒரு நிகழ்வின் பலன்களுக்கு அடிமைப்படுத்தி விடுகின்றன. இதனால் ஒரு செயலின் பொழுது நாம் நம்முடைய இலக்கின் வெற்றியில் மனத்தை ஈடுபடுத்தி செயலின் சுகத்தையும் திறனின் ஆழத்தையும் அனுபவிக்க மறந்து விடுகின்றனர். அல்லது மறுத்து விடுகின்றனர்.

கண்ணன் கீதையில் அர்ச்சுனனுக்குச் சொல்கின்றான் “நன் கடமையில் ஈடுபடு. செயலின் பலன்களை என்னிடம் அர்பணித்துவிடு.”

இதன் உட்கருத்தினை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  செயலில் நாம் முழு மனதுடன் ஈடுபட்டு அதில் நம்மை அர்பணித்துக்கொண்டு விட்டால் மகிழ்வும் மன நிறைவும் ஏற்படும்.

அப்படி நாமும் வாழ்ந்து பார்க்கலாமே !

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *