(எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா)

கடவுள்   பக்தி    தனையின்று
காசைக்  கொண்டு  பார்க்கின்றார்
கடவுள்   பக்தி   என்றுசொல்லி
கழுத்தை  அறுத்துக்  கொல்லுகின்றார்
கடவுள்  பக்தி எனும்பெயரால்
கற்பை  விலை  பேசுகிறார்
கடவுள்  பக்தி  எனுமுணர்வை
கருத்தில் கொள்ளா  இருக்கின்றார்  !

குரு  பக்தி   நாட்டிலிப்போ
குன்றிப்  போய்  இருக்கிறது
குரு   கூட   இப்போது
குறை  கொண்டே  உலவுகிறார்
நல்ல   குரு   வாய்த்துவிடின்
நம்  எண்ணம்  உயர்ந்துவிடும்
நல்ல  குரு  ஆசிபெற்று
நாம்  வாழ்வோம்  சிறப்புடனே  !

அன்னை  தந்தை பக்தியின்று
அருகி   வரப்   பார்க்கிறது
அன்னை  தந்தை  வார்த்தைக்கே
அர்த்தம்  இன்றிப்  போகிறது
அன்னை தந்தை எமக்கெல்லாம்
அதிக  சுமை  என்கின்றார்
அக்கருத்தை துடைத்து  விட்டு
அன்னை தந்தை தாழ்பணிவோம் !

நாட்டுப்   பக்தி   இப்போது
ஏட்டில்  மட்டும்  இருக்கிறது
நாட்டு  நலம்  எனுமெண்ணம்
நாவில் மட்டும்  இருக்கிறது
நாட்டைப்  பற்றி  நினையாதார்
வீட்டைப்  பற்றி  நினைக்காரே
நாட்டை  என்றும் தாயெனவே
நாம் பக்தி  செலித்திடுவோம் !

பக்தி  எனும்   போதினிலே
பக்குவம்தான்  முதன்மை பெறும்
பக்தி   என்று   எண்ணுகையில்
பரந்த  மனம்  எழவேண்டும்
பக்தி  எனும்  பாதையிலே
பண்பு  வந்து  நிற்கவேணும்
பக்தி  செய்து  நாமென்றும்
பார் சிறக்க  வாழ்ந்திடுவோம்  !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *