கடவுள் பக்தி தனையின்று காசைக் கொண்டு பார்க்கின்றார் கடவுள் பக்தி என்றுசொல்லி கழுத்தை அறுத்துக் கொல்லுகின்றார் கடவுள் பக்தி எனும்பெயரால் கற்பை விலை பேசுகிறார் கடவுள் பக்தி எனுமுணர்வை கருத்தில் கொள்ளா இருக்கின்றார் !
குரு பக்தி நாட்டிலிப்போ குன்றிப் போய் இருக்கிறது குரு கூட இப்போது குறை கொண்டே உலவுகிறார் நல்ல குரு வாய்த்துவிடின் நம் எண்ணம் உயர்ந்துவிடும் நல்ல குரு ஆசிபெற்று நாம் வாழ்வோம் சிறப்புடனே !
அன்னை தந்தை பக்தியின்று அருகி வரப் பார்க்கிறது அன்னை தந்தை வார்த்தைக்கே அர்த்தம் இன்றிப் போகிறது அன்னை தந்தை எமக்கெல்லாம் அதிக சுமை என்கின்றார் அக்கருத்தை துடைத்து விட்டு அன்னை தந்தை தாழ்பணிவோம் !
நாட்டுப் பக்தி இப்போது ஏட்டில் மட்டும் இருக்கிறது நாட்டு நலம் எனுமெண்ணம் நாவில் மட்டும் இருக்கிறது நாட்டைப் பற்றி நினையாதார் வீட்டைப் பற்றி நினைக்காரே நாட்டை என்றும் தாயெனவே நாம் பக்தி செலித்திடுவோம் !
பக்தி எனும் போதினிலே பக்குவம்தான் முதன்மை பெறும் பக்தி என்று எண்ணுகையில் பரந்த மனம் எழவேண்டும் பக்தி எனும் பாதையிலே பண்பு வந்து நிற்கவேணும் பக்தி செய்து நாமென்றும் பார் சிறக்க வாழ்ந்திடுவோம் !
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.