ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் ’பிக்பாஸ்’

0

-கே. சுரேஷ் குருபாய்

தமிழகத்தின் ஈரோடு வேங்கட ராமசாமி என்ற பகுத்தறிவாதியை, பிரெஞ்ச் தத்துவ அறிஞர் லக்காகானுடன் இணைத்து ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளேன்.  இதற்கான, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்  “பிக்பாஸ்” நிகழ்ச்சியை  ஓர் தளமாகக் கொண்டுள்ளேன்.

*ஆய்வுக் கட்டுரையை படிப்பதற்கு முன் கீழே கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களை படிக்கவும். இதன் மூலம், ஆய்வுக்கான ஆதாரக் கூறுகளை புரிந்துகொள்ள முடியும்.

1)ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் ஏன், எதற்காக முக்கியம்?

ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் முக்கியமானது என கருதுகிறேன். ஏனெனில், பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ்ச் சமூகம் எதனைப் பேச வேண்டும் என்பதை விட, எதையாவது பேச வேண்டும்  என்பதே பிரதானமாக உள்ளது. பேச்சு இல்லை என்றால், தனது சுயத்தை இழந்ததாக கருதும் நிலைக்கு ஆளாகும். இதற்கு தமிழக பழமொழிகள், சொல்லாடல்கள் முன்னுதாரணமாக உள்ளது. அதனால், தமிழ்ச் சமூகத்தில் பேச்சு பிரதானமாக உள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் சம  காலத்தில் பேசுகின்றதே தவிர, எதனை முன்னிறுத்த அனைத்து தொலைக்காட்சிகளும் பேசுகின்றது என்பது புதிராகவே உள்ளது. இந்த நிலையில், வெங்காயம் கருத்தாக்கம் இங்கு பயன்படும். அதாவது, வெங்காயம் உரிக்க,  உரிக்க ஒன்றும் இருக்காது என்ற தனித்துவத்தை அடிப்படையாக கொண்டு ஈ.வே.ரா பேசினார். அதன் அடிப்படையில், நெடுந்தொடர்கள் எதனைப் பேசுகின்றது என ஆராய்ந்தால், நெடுந்தொடர்கள் பேசியவற்றையே,  பேசுகின்றன, தொடர்ந்து பேசுகின்றன. மக்கள் இதனையே தொடர்ந்து பார்க்கின்றனர். ஆனால், பார்த்தவற்றையே பார்க்கின்றனர் என்பது புலப்படும். இதன் மூலம், நெடுந்தொடரில் தேடி, தேடி பார்த்தாலும் பேச்சைத் தவிர  தனித்துவம் ஒன்றும் இருக்காது என்பது வெங்காயம் உரிக்க, உரிக்க வெங்காயத்தை தவிர ஒன்றும் இருக்காது என அறியலாம். இதற்காகவே, இந்த கருத்தாக்கம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

 2) ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கம் அவரது பேச்சில் / எழுத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொல். அப்படி இருக்க, கருத்தாக்க/கோட்பாடு அளவில் எவ்வாறு அணுக முடியும் ?

பிரெஞ்ச் தத்துவ அறிஞர் துளுஸ் உருளைகிழங்கு (Rhizome) கோட்பாட்டை ஆரம்பம், முடிவு இல்லாத, ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லாத நிலையை வரையறுத்து கூறியுள்ளார். அதுபோல, தமிழகப் பகுத்தறிவாளர் ஈரோடு ராமசாமி வெங்காயம் (Onion) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், உரிக்க, உரிக்க ஒன்றும் இல்லை, தேடி, தேடி பார்த்தாலும் ஒன்றும் இல்லை என்ற வரையறையைப் பல மேடைப் பேச்சுக்களில், அன்றாட பேச்சு வழிகளில் பெரும்பாலும் முன்னிறுத்தியவர். இதன் காரணமாக, ஈரோடு,  ராமசாமியின் சொல், எழுத்து வடிவிலான கருத்தாக்கத்தையும் ஆய்வு கருத்தாக்கமாக அணுக முடியும். உதாரணமாக, சங்ககால புலவர் கணியன்  பூங்குன்றன், புறநானூறு  192வது பாடலில் “தீதும் நன்றும் பிறர்தர வாரா ” என்றார். அதாவது, “நமக்குக் கிட்டும் நன்மையும், தீமையும் நம்மில் இருந்தே தொடங்குகிறது” என்பது. இதேபோல், பிரெஞ்ச் உளவியல் பகுப்பாய்வாளர் லக்கான் “மற்றமையே நம்மை கட்டமைக்கிறது ” என்கிறார். அதாவது, நமது  பேச்சைக் கேட்கும் இடம் எதுவோ, அதுதான் நம்மை அங்கீகரிக்கும் இடம். எனவே, மற்றமையானது பேசுபவனுக்கு வெளியே மொழியின் இடமாக இருக்கிறது, அதேசமயம் பேசுபவனுக்கு அகத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது  என்கிறார். இதன் மூலம், இருவரும் ஒரே விசயத்திற்கு வேறு, வேறு சிந்தாந்தங்களை கொண்டிருந்தாலும், இரண்டும் ஒரு தனி கருத்தாக்கத்தை உண்டு செய்கிறது. சங்ககாலத்தில் புலவர் என்ற பெயரும், சமகாலத்தில் ஆய்வாளர் என்ற பெயரும் குறிக்கிறதே  தவிர இருவரும் கருத்தாக்கத்தையே முன்னிறுத்துகின்றனர். அதனால், பகுத்தறிவாளர் ஈரோடு, ராமசாமியின் பேச்சில், எழுத்தில் பயன்படுத்தும் சொல்லும், அவரது மனதில் வெங்காயம் என்பதற்கான  பெயரும் அதன்  கருத்துருவில் ஓர் கருதாக்கத்தையே கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலே, வெங்காயம் என்பதை கருத்தாக்கமாகவே இங்கு அணுகியுள்ளேன்.

3) “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் வணிகத் தன்மையில், யதார்த்த உலகின் எச்சங்களை, அந்த மாந்தர்களின் வார்த்தைகளிலும், செயல்களிலும் பார்ப்பது எந்த அளவில் சரியாக இருக்கும்?

பிக்பாஸ் நிகழ்ச்சி வணிகத் தன்மை அடிப்படையில் உண்டாக்கப்படுகிறது என்பது உண்மை. அதே அளவில், ரியாலிட்டி நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி நடைபெறுவதால், யதார்த்த உலகில் மக்கள் பேசும் பேச்சுகளே அங்கேயும் பேசுகின்றனர். யதார்த்த உலகில் இருவேறு சமூக மக்கள் ஒருவர் பேசுவதை, அவர்கள் வாழ்வியல் சார்ந்து, எவ்வாறு புரிந்துகொள்ளப்படவில்லையோ, ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் புரிந்து கொள்ளப்படுகிறதோ, அதனைப் போன்றே, இந்நிகழ்ச்சியிலும் இருவேறு சமூக மக்கள் மற்றவர்களுடனான பேச்சுகளை அவர்களின் வாழ்வியல் சார்ந்து புரிந்து கொள்ளவில்லை. ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்களைக் கொள்கின்றனர். இதன் அடிப்படையிலேயே, விஜய் தொலைக்காட்சியின் “பிக் பாஸ்” ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பதாலே, அதனை ஆய்வுத் தளமாக கொண்டேன். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில போட்டிகள் வைக்கப்படும், அதில் அவர்கள் அவர்களாகவே அதனை அணுக வேண்டும். அதன் அடிப்படையிலேயே இவர்களை யதார்த்த உலகின் மனிதர்களாகக் கொண்டேன்.

குறிச்சொல் : ஈ.வே.ரா, லக்கான், வெங்காயம், பிக்பாஸ், சொல்

*இப்போது ஆய்வுக் கட்டுரையை படிக்கலாம்…

ஈ.வே.ரா.  “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ்

தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுவரும் உண்மை ஒத்த நிகழ்ச்சிகளில் (ரியாலிட்டி ஷோ) தற்போது பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், பன்வகைப்பட்ட மக்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, நடிகர்கள் பொன்னம்பலம், சென்ராயன், பாலாஜி, டேனியல் ஆகியோரும், நடிகைகள் ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா, யாசிகா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். பல்வகைபட்ட பண்பாட்டு வாழ்வியல் சூழல் சார் மக்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளதால், ஒருவரின் அன்றாட செயல்பாடுகள் மற்றவருக்கு புதுமாதிரியாகவும், ஒப்புக்கொள்ள ஏற்றதாக அமையாமலும் இருக்கும் சூழல் இருந்து வருகிறது. ( முதல் இரண்டு மாதம் உரையாடல்கள் இக்கட்டுரையின் மாதிரிகளாகக் கொள்ளப்பட்டுள்ளது). இதனை அடிப்படையாக கொண்டே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டது.

மனிதன் பிறந்தது முதல் தனது தேவையை நிறைவேற்ற அழத்தொடங்கினான், அதனைத் தொடர்ந்து, கோரிக்கையை நிறைவேற்ற பேசத் தொடங்கினான்,  கோரிக்கை நிறைவேறாமல் மங்கிய நிலையில் ஆசை உருவாகும் (உளவியல் பகுப்பாய்வாளர், லக்கான்). அதனால், மனிதன் தேவையை, கோரிக்கையை, ஆசையை நிறைவேற்ற பேச்சுடன், செயல்படத் தொடங்கினான். அதன் வரையறைபடி, ஒருவர் மற்றொருவருடன் தங்களின் எண்ண ஓட்டங்களை, உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிப்படுத்தப் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் உள்ளனர் எனில், அவர்கள் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே மாதிரியான பேச்சின், ஒரே மாதிரியான ஒலி எழுப்பும் விதம் கொண்டு, அனைவரது வாழ்வியல் ஒரே மாதிரியாக இருந்தால், அவர்கள் பேசும் பேச்சின் ஒலியும், அதன் அர்த்தமும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரே இடத்தில், பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில், ஒருவர் மற்றவர்களிடம் தங்களின் தேவை, கோரிக்கை, ஆசை நிறைவேற்றப் பேச்சு வழக்காற்றில் சிக்கல்கள் எழும்.

“குறிப்பானுக்கும், குறியீடுக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உண்டு. ஆனால், குறிப்பானின் மொழிக்கும் (ஒலிக்கும்), அதற்கான பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) சம்பந்தம் இல்லை” என்ற ஆய்வாளர் சசூர் (தொடர்பியல் அறிஞர்) கருத்தாக்கத்தின்படி, ஒருவர் பேசும் பேச்சு அவர் நினைக்கும் அர்த்தத்தையே, அந்தப் பேச்சை கேட்கும் நபரும் புரிந்து கொள்வார் எனச் சொல்ல முடியாது. பேச்சைக் கேட்பவர் வேறு அர்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் கற்பிக்கப்படலாம் என்கிறார். இதன் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சியில், சென்ராயன், டேனியல் பேசும் பேச்சு மும்தாஜ், ஐஸ்வர்யா போன்றவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனுடன், சென்ராயன் பேசும்போது, உரத்த குரலில் பேசுவதை மும்தாஜ், ஐஸ்வர்யா குற்றமாக கருதி, இதனை சென்ராயன் மாற்றிக் கொள்ள வேண்டும், இது, சரியான பழக்கம் இல்லை என்கிறார்கள். ஆனால், நான் இயல்பாகத்தான் பேசுகிறேன். எனது பேச்சே அப்படித்தான் என சென்ராயன் பதில் அளிக்கிறார். இதன் மூலம், ஒருவர் பேசும் பேச்சின் அர்த்தம், அதன் ஒலியின் மாறுபாடு போன்றவை வித்தியாசப்பட்டு இருந்தாலும், அவர்கள், தமது மனதில் ஒன்று நினைத்து, அதனையே சொல்லி இருக்கலாம், ஆனால், அதனைக் கேட்பவர்கள் புரிந்து கொண்டது வேறு விதமாக இருக்கும். இதற்குக் காரணம், குறிப்பான் கொண்டிருக்கும் பேச்சின் மொழிக்கும் (ஒலி),  குறியீடு கொண்டிருக்கும் பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) பல்வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது என்பதை சரூரின் கருத்தாக்கம் உணர்த்துகிறது.

இதில், சென்ராயன் தனது பேச்சை மாற்ற வேண்டும் என மும்தாஜ், ஐஸ்வர்யா சொல்வது ஆய்வாளர் லக்கான் பார்வையின்படி ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில், “ஒருவரின் மொழியும் (ஒலி, பேச்சு), அவர்களின் வார்த்தையில் இருக்கும் பொருளின் அர்த்தமும் அவர்களின் வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஏற்க வேண்டும் (லக்கான்)” என்கிறார். அதனால், தமது வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றை கொண்டு மற்றவர்களது இயல்புகளை அளவீடு செய்ய முடியாது என்கிறார். இதன் அடிப்படையில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரும், தாய்மொழி தமிழ் அற்றவருமான மும்தாஜ், பெங்காலி மொழியை அடிப்படையாகவும், வடநாட்டை வாழ்விடமாக கொண்ட  ஐஸ்வர்யா ஆகியோர்,  சென்ராயன் போன்ற பிற மொழி (தமிழ்) பேசுபவர்களின் இயல்புகளை அளவீடு செய்வதே முடியாது என்பதுடன், அதனை மாற்ற வேண்டும் என்று கூறியதும் தவறு என்பது லக்கான் கருத்தாக்கத்தின்படி அறியப்படுகிறது.

மனிதனில், தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றைக் கொண்டே பேச்சு இருக்கிறது என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதன் போட்டியாளர்களின் பேச்சு தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை சுற்றி, சுற்றி வருகிறதே தவிர, இதில் புதியதாக கண்டறிவதற்கு ஏதும் இருக்காது என்பது அறிய முடிகிறது. இது, ஈ.வே.ரா என்ற பகுத்தறிவாதி அடிக்கடி சொல்லும் “வெங்காயம்” என்ற வார்த்தைக் கோட்பாடு இதற்கு ஒத்துப்போகிறது. அதாவது, “வெங்காயம் உரிக்க, உரிக்க ஒன்றும் இருக்காது” அதுபோலவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உணவுக்கான தேவைக்குப் பிரச்சனை நிகழும்போது, தனது தேவை நிறைவேறாத நிலையில் கோரிக்கையாக மாறும். அப்போது கோரிக்கை நிறைவேறாத நிலையில் பிரச்சனையாக மாறும். பின்னர், கோரிக்கை நிறைவேறாமல் மங்கிப் போன நிலையில் ஆசையாக மாறும். ஆசை தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பிரச்சனை எழும். இதற்கான உந்துதலுக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளப் பேச்சு ஊடகமாக மொழி இருக்கும். அதில், ஒரு வார்த்தை மற்றவருக்கு ஒரே அர்த்தத்தை கொடுக்க இயலாத காரணத்தால், சசூரின் கருத்தாக்கம்படி, பிரச்சனை நிகழும். இவர்களின் உரையாடல் இதனையே சுற்றி, சுற்றி வரும். வேறு புதிய பரிணாமம் உருவாகாத நிலையில் தொடர்பு முறைகள் வெங்காயம் போன்று இருக்கும்.

ஓர் இடத்தில் பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் நிலையில், அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதே இயல்பாக இருக்க முடியும். ஒருவர் தங்களது வாழ்வியலை படிமமாக கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து குறியீடு மூலம் உணர்த்தப்படும் அர்த்தம், வேறு வாழ்வியலின் படிமம் அடங்கிய குறிப்பானுக்கு அர்த்தம் புரியாது. அதேபோல், வேறு ஓர் இயல்பான வாழ்வியலுடன் கொண்ட படிமம் கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து, குறியீடு மூலம் உணர்த்தப்படுவது ஒரே மாதிரியான அர்த்தம் என்றும் உருவாகாது. ஒரு குறியீட்டுக்குப் பல அர்த்தம் உண்டு (குறியீட்டியல் அறிஞர், தெரிதா) என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு, மற்றவர்களை பார்க்க வேண்டும்.

இந்தியா பல்வேறு பண்பாடு கொண்ட ஒரு நாடு இதனை ஒரே நாடு என்ற வார்த்தையில் எப்போதும் அடக்க இயலாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி, ஓர் உணவு, ஒரு பண்பாடு, ஒரு வாழ்வியல் உள்ளது. இதனை ஒரு மாநிலத்துடன், மற்ற மாநிலத்தை எந்த வகையிலும் ஒப்பீடு செய்ய இயலாது. அந்தந்த மாநிலத்தின் பழக்க வழக்கத்தை அந்த, அந்த மாநிலத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே காண வேண்டும். நமது படிமத்துடன் மற்ற மாநிலத்தை படிமத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், ஈ.வே.ராமசாமியின் வெங்காயம் கோட்பாடுபடி, பார்வையின் முடிவில் ஒரு சரியான நிலைக்கு வர முடியாமல் போகலாம். அதனால் தொடர்ந்து பிரச்சனை எழுந்தே தீரும். இதனை வேறு வழியில் ஆராய்ந்தால், தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதன், நிறைவாக “வெங்காயம்” என்ற கோட்பாட்டின் காலம், நேரம் கடந்த ஒரு செயலாக மட்டும் இருக்குமே தவிர, ஒரு விசயமும் புலப்படாமல் இருக்கும்.

அதுபோல, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இருக்கும் தமிழ் மொழி வழக்கு வித்தியாசப்பட்டு இருக்கும். இதனை அந்தந்த வட்டாரத்திற்கு ஏற்ப, அந்த வார்த்தையை உச்சரிக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்து அதனைப் பொருள்கொள்ள வேண்டும். மாறாக, தமது படிமத்தின் அடிப்படையில் குறியீடாகக் கொண்டு, அர்த்தம் கொள்வதாயின் பிரச்சனைகள் உருவாகும். அதாவது சரியான புரிதல் உண்டாகாது. உதாரணத்திற்கு, (எதுக்கு, ஏனுங், ஏன்லே, ஏய்ன், என்னயா, ஏன்பா). இதில், ஒரு சில வார்த்தைகள் ஒருவருக்கு இயல்பாகவும், மற்றவருக்கு இயல்பு மாறியும் இருக்கலாம். இதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்பது, ஈவேராவின் வெங்காயத்தை மீண்டும் ஞாபகப்படுத்தும்.

சென்னையைப் பொறுத்தவரையில், வட சென்னை வட்டாரச் சொல் பழக்கம் அப்பகுதி மக்களுக்கு இயல்பாக இருக்கும். ஆனால், தென் சென்னை வட்டாரச் சொல் பழக்கம் வேறுமாதிரியாக இருக்கும். இதனால், ஒருவரின் சொல்லிற்கான அர்த்தம் வேறாக புரிந்துகொள்ளப்படும். இது, சசூரின் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தும், ஆனால், லக்கானின் கருத்தாக்கத்தை புரிந்துக் கொண்டால், ஒருவரை ஒருவர் பழிப்பது வெகுவாகக் குறையும் எனலாம். நிறைவாக, படிமத்தால் ஆன, குறிப்பான்கள் நாம். வாழ்வியல் சார் குறியீடு மாறி இருப்பதற்கு ஒருவரை ஒருவர் மாற்ற நினைப்பதே தவறு என்பதை உணர்ந்து, அவர்களது வாழ்வியலை அடிப்படையாக கொண்டு, பேச்சின், அர்த்தங்களை உணர முயன்று அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு.

இதன்படியே, விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களின் படிமத்தால் ஏற்பட்ட மாறுபாடுகளால், ஒருவரது பேச்சை மற்றவர் புரிந்துக் கொள்ள இயலாமல், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை வெளிப்படுத்தும் தொடர்பியல் குறியீடுகள், வாழ்வியல் படிமக் குறியீடுகளின் வேறுபாடுகளால், ஒரே மாதிரியான அர்த்தத்தை அறிய முடியாமல் போவதே, மனங்களின் ஒருமித்த அர்த்தங்கள் உருவாகாமல் இருப்பதற்கு அடிப்படையாக உள்ளது. ஆகவே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும், ஒரு பிரச்சனையுடன் நகர்ந்து வருவதற்கான காரணத்தின் அடிப்படையாக உள்ளது.  இது, 100 வாரங்கள் அல்ல, 1000 வாரங்கள் கடந்தாலும் ஒருமித்த புரிதல் எட்டப்படாமலே இருக்கும். இறுதியில், ஈ.வே.ராவின் வெங்காயம் கோட்பாட்டின், சாரம்சம் மட்டுமே தெரியவரும். இதற்கு, சசூர், லக்கான், தெரிதா போன்ற ஆய்வாளர்களின் கருத்தாக்கங்கள் உறுதுணையாக இருக்கும்.

*****

ஆய்வு நூல்:

சுரேஷ் எம்.ஜி. பின் நவீன சிந்தனையாளர் வரிசை 3 : லக்கான், 2007.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவர்
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
எண் : 9003091162
மின் அஞ்சல் : sureshguruboy@gmail.com

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *