ஒதுக்கப்பட்டவர்களின் கலையும் கலாச்சாரமும்
க. சிவா, ஆராய்ச்சியாளர், அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகவியல் துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்.
இந்தக் கட்டுரையானது தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றியோ சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியோ எழுதப்பட்ட ஆய்வு அல்ல. இது தாழ்த்தப்பட்டவர்களாலும், ஒடுக்கப்பட்டவர்களாலும் மற்றும் இந்தச் சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டவர்களைப் பற்றியது. ஆம், நம் சமூகத்தால் அறவாணிகள் என்றும், அரசால் திருநங்கைகள் என்றும், மத குருக்களால் அர்த்த நாரீஸ்வரர்கள் என்றும் அழைக்கப்படும் மக்களைப் பற்றியது. தங்கள் குடும்பத்தால் ஒதுக்கப்பட்டும், தங்கள் சமூகத்தால் ஒடுக்கப்பட்டும் வாழ்ந்துவரும் இவர்கள் அனைவரும் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து ஒரு இடத்தில் ஒன்று கூடித் தங்களுக்கு என்று ஒரு சமூகத்தை உருவாக்கி தங்களுக்குள் சாதி, மதம் என எவ்வித வேறுபாடுமின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் அரவணைத்தும் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தனது குடும்பத்தினராலும், சமூகத்தாலும், சமுதாயத்தாலும் புறம் தள்ளப்பட்டவர்கள் ஆவர்.
திருநங்கைகள் என்றாலே ஒரு மாதிரியாகவும், புது விதமாகவும் பார்க்கும் இந்த சமுதாயத்தில், திருநங்கைகள் என்றாலே கை தட்டி கடைகளில் பணம் வாங்குபவர்களாகவும் பார்க்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இல்லாமல் கலைஞர்களாகவும் சிலர் வலம் வருகின்றனர். இவர்களில் பலர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளும் பெற்றுள்ளனர். உதாரணமாக மார்ச் 2014- ல் தன்னார்வ சுகாதார சேவைகள் மையம் (Voluntary Health Service) நடத்திய கலை நிகழ்ச்சிகளில் 400- க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று 60 மணி நேரம் இடைவிடாது ஆடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர்.
சமீபத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள வள்ளி நகரில், திருநங்கைகளின் விழா ஒன்றினை காணச் சென்றிருந்தேன். அவ்விழாவில் ஆச்சரியப்படும் அளவுக்கு நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. அனைவரும் சிறப்பாக தங்களுக்குள் உள்ள உறவு முறைகளையும், அவர்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தினர். அவ்விழாவானது புதிதாக வரும் தங்கள் உறவை வரவேற்கும் விழாவாகும். அந்த விழாவில் மூத்த திருநங்கை புதிதாக வரும் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்பவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குள் ஒரு உறவுமுறை வைத்து புதிதாக வருபவர்களுக்கு சீர் செய்யும் முறை வழக்கமாக இருந்து வருகிறது.
அவர்கள் சீர் செய்யும் முறை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால், அவர்கள் சீர் செய்ய வரும் போது டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க வெடிச் சத்தங்கள் காதைக் கிழிக்க அவர்களின் நடனங்கள் பார்ப்பவர் கண்களைப் பறிக்க சிறப்பாக நடைபெறுகிறது. இது ஒரு புறம் இருக்க, அடுத்து அவர்கள் தத்தெடுக்கும் முன் நடக்கும் சம்பிரதயங்களைப் பார்க்கும் போது மேலும் வியப்பாக இருந்த்து. புதிதாக தத்தெடுப்பவர்களை தலையில் துணியால் முக்காடிட்டு அவர்களுக்கான இடத்தில் உட்கார வைத்து அவர்களின் மேல் மஞ்சள் நீர் ஊற்றுதல், சந்தனம் தேய்த்தல் போன்ற பாரம்பரிய நிகழ்வுகளை நிகழ்த்தினர். புதிதாக வரும் திருநங்கையை தத்தெடுப்பவர் தாய் என்று அழைக்கப்படுகிறார். அந்த தாயானவள் தன்னுடைய தத்தெடுப்பு மகளின் மேல் சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நோட்டுகளாக சேகரித்து பண அபிஷேகம் செய்தனர். உறவுக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் பங்கிற்கு சீர்களை செலுத்தி விழாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
இந்த நிகழ்வை ரீத் என்று அழைக்கின்றனர். ரீத் என்றால் தத்தெடுப்பு என்றும் இன்று முதல் அவர்கள் திருநங்கைகளாக அங்கீகரிக்கப்ட்டுவிட்டார்கள் என்பதும் பொருளாகும். மேலும் இந்த ரீத் செய்யப்பட்ட திருநங்கையின் அனைத்துத் தேவைகளும் தத்தெடுத்த தாயினையே சாரும், மேலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையாகவும், ஆதரவாகவும் இருந்து கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். மேலும் அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னரே ரீத் நிகழ்வானது நிகழ்கின்றது. ஒரு திருநங்கைக்கு ரீத் நிகழ்வானது அவர்கள் தாய் கழகத்திற்கு வந்த உடனே நடைபெறுவதில்லை. அவர்கள் புதிதாக வரும் திருநங்கையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த நிகழ்வினை நிகழ்த்துகின்றனர்.
தங்கள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்டவர்கள் தங்களுக்கென்றே ஒரு குடும்பம், சமூகம் மற்றும் சமுதாயம் அமைத்து வாழ்கின்றனர். அவர்களின் ஒற்றுமையான வாழ்க்கை முறையினைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இப்படி ஒரு வாழ்க்கை வாழும் மக்களை நம் சமுதாயம் ஏன் இப்படி வேடிக்கைப் பொருளாக்கி இரசிக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரிய செயலாகும்.