திருமுருகாற்றுப்படையில் முருகனின் சிறப்பும் ஆறுபடை வீடுகளும்

0

அ.சரண்யா, முனைவர்பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,தமிழ்ப் பல்கலைக்கழகம்,

முனைவர் ச.கவிதா, பேராசிரியர்  & நெறியாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,தமிழ்ப் பல்கலைக்கழகம்,

முன்னுரை

பத்துப்பாட்டில் முதலாவதாகச் சிறப்பிக்கப்படுவது திருமுருகாற்றுப்படை. திருமுருகு என்ற சொல் முருகப்பெருமானை உணர்த்தும். முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம் எனப் பொருள் பல உண்டு. ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது அல்லது வழிகாட்டல் என்பர். முருகப்பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று அப்பெருமானின் அருள்பெற்ற பக்தன் முருகப் பெருமானின் அருள் வேண்டி நின்ற ஒருவனுக்கு வேலன் வீற்றிருக்கும் இடங்களைக் கூறி முருகனின் பேரருளினையும் அழகு திருமேனிப் பொலிவினைச் சிறப்பாக எடுத்துக் கூறி ஆற்றுப்படுத்தி வழிகாட்டுவதாக அமைந்த நூலே திருமுருகாற்றுப்டையாகும்.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு இந்நான்கும் செம்மையுற அமைந்தால்தான் ஒரு மனிதன் நிம்மதியான வளமான வாழ்வை வாழ முடியும். அவ்வாழ்வை நல்வழிப்படுத்துபவர் இறைவன் ஒருவரே. தன் அன்பர்கள் நன்மைகள் பல பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே இறைவன் ஞாயிறும் திங்களும் மாறி மாறித் தோன்றுவது போல எப்போதும் காட்சி தந்து காத்தரு வருகிறார்.

இவ்வுலகில் புகழ் ஒன்றைத் தவிர நிலைத்த பொருள் எதுவுமில்லை. ஒருவன் வீடுபேற்றை அடைந்து நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இறைவனின் தாள்களைச் சரணடைதல் வேண்டும். அந்த வகையில் முருகப் பெருமானின் சிறப்பையும் அவ்விறைவனின் அருட்கொடையினையும் திருமுருகாற்றுப்படையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.

தமிழர்களின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் திருமுருகாற்றுப்படைக்குத் தனியே இலக்கணம் காணப்படுகின்றது. பத்துப்பாட்டில் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படை நூல்களாகும். அவை பழங்காலத்தில் அரசர்கள், புலவர்கள், வள்ளல்கள் முதலானவர்களைப் பாராட்டுவதற்காக அமைந்தவை. ஆற்றுப்படை என்றால் ஆற்றுவித்தல் என்று பொருள்.

இதனைத் தொல்காப்பியர்

கூத்தரும் பாணரும் பொருநாறும் விறலியும்

                        ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

                        பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

                        சென்று பயன்எதிர் சொன்ன பக்கமும்.”                              (தொல்காப்பியம்?)

என்று கூறுகிறார்.

கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோர் தாம் பெற்ற பெரும் செல்வத்தினைப் பெறாதவர்களுக்கு எடுத்துக்கூறி ஆற்றுவிப்பது ஆற்றுப்படையாகும். தன்னை யார் வழிப்படுத்துகிறார்களோ அவர்களின் பெயரால் வழங்கப்படுவது ஆற்றுப்படை ஆனால் திருமுருகாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தியவர்களின் பெயர் இடம்பெறாமல் பாட்டுடைத் தலைவனாகிய முருகனின் பெயரால் வழங்கப்படுகின்றன.

தன்னுடைய அனுகிரகங்களும் இறைவனின் செயல்களினால் தான் நடைபெறுகின்றன என்பதால் முதற் பாட்டு இறைவனின் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முருகப் பெருமானின் சிறப்புகள் மற்றும் அவர்தம் அருட்சிறப்புகளை வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமையப்பெறுகின்றது.

உலகம் என்ற சொல்

திருமுருகாற்றுப்படிடயின் முதற்பாவில் ‘உலகம்’ என்ற சொல் காணப்படுகிறது. பலர் எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போடுவதைப் போன்று முற்காலத்தில் இவ்வழக்கம் இடம்பெற்றுள்ளது.

உலகம் என்பது இறைவனால் படைக்கப்பட்டது. நாம் எந்தச் செயலைத் தொடங்கினாலும் இறைவனை மனத்தில் எண்ணித் தொடங்கினால் தொய்வின்றி வெற்றியடையும் என்பதால் சங்க காலத்திலும் உலகம் என்ற சொல்லைக் கையாண்டுள்ளனர்.

                        “உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு”                      (திருமுருகாற்றுப்படை, 1)

                        “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்”                     (கம்பராமாணயம், 1)

                        ‘உலகெலாம் உணர்ந்து”                                                      (பெரியபுராணம், 1)

சங்க இலக்கியம், கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற நூல்கள் உலகம் என்ற சொல்லிலேயே தொடங்கப்பட்டுள்ளன. இவ்வுலகம் எல்லா வளமும் நலமும்பெற்று வாழ வழிவகுப்பவர் இறைவன் ஒருவரே. அவரை எண்ணித் தொடங்கினால் நாம் எண்ணியவாறே வெற்றியடையும் என்பதை இங்கு அறியலாகிறது.

தோற்றப் பொலிவு

அழகு என்ற சொல்லிற்கு முருகன் என்று பொருள். பவளம் போன்ற மேனியையும் செம்மையான ஆடையையும் அணிந்து காண்போரின் உள்ளங்களைக் கவரக்கூடிய பேரழகு வாய்ந்த தோற்றப் பொலிவுடன் முருகன் இருக்கிறார். கையில் வேலும் சேவற் கொடியும் மயிலை வாகனமாகவும்கொண்டு பேரழகுடன் பக்தர்களுக்கு அருள்புரிகின்றார். மேலும்

                        “பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு

                        ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி”      (திருமுருகாற்றுப்படை, 2-3)

குன்றுகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டு திகழ்பவர் முருகப்பெருமான். விடியற்காலையில் சூரியன் அடிவானத்தில் கடற்பரப்பின் மேல் ஒளிப்பிழம்பாய் உலகிற்குக் காட்சியளிப்பது போல நெடுந்தொலைவில் உள்ள மலையில் வளமாக எழுந்து பற்பல சமயத்தவரும் புகழ்ந்து போற்றும் முருகப்பெருமான் அக இருளையும் புற இருளையும் நீக்கி மெய்ப்பொருளைத் தெரிந்துணர்த்தும் பேரொளியாகத் திகழ்கின்றார்.

மேலும் தன் அடியவர்களுக்கு அருள் புரிவதற்காக அவர்கள் இருக்கும் இடம் தேடி நெருங்கிவருவார். அப்படி வருவதால் மக்களின் துன்பங்களையும் அறியாமையையும் நீக்கி இன்பமாக வாழ வழிவிடுபவர் முருகப்பெருமான் ஒருவரே என்பது இங்குப் புலனாகிறது.

வடிவங்கள்

இறைவன் ஒவ்வொருவருக்கும் பல வடிவமாகத் திகழ்கின்றான். விநாயகரின் திருவடிகள் 32 என்றும் மகேஸ்வரனின் வடிவங்கள் 25 என்றும் முருகப்பெருமாரினன் திருவடிகள் 16 என்றும் பேராசிரியர் க.பெருமாள் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

முருகப்பெருமான் பாலனாகவும் வெற்றி வீரனைப் போன்ற தோற்றத்தனாகவும் திருமணக்கோலத்தில் இருதேவியருடன் நின்ற வடிவிலும் பல ஆயுதங்களைக் கொண்டு பகைவர்களை அச்சுறுத்துகின்ற கோலத்திலும் பன்னிரு திருக்கைகளால் அள்ளி அள்ளிப் பக்தர்களுக்கு அளித்த அருள் வள்ளல் கோவணத்துடன் தண்டூன்றி ஆண்டியாய் நிற்கின்ற வடிவிலும் பல வடிவங்கள் கொண்டு தன் அன்பர்களுக்கு அருள் புரிவதை

“எல்லாம் தந்தாண்டி – ஆனால்

ஆண்டியும் ஆனாண்டி.”                                                        (இன்பவௌ;ளம்)

என்பதன்வழி அறிய முடிகின்றது.

தாளின் சிறப்பு

இறைவன் எல்லாச் சக்திகளையும் பெற்று இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு இயக்கி வருகின்றான். அவரைப் பற்றுவது என்பது மிகக் கடினமானதாகும். அடியவர்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பது அவனுடைய தாள்களே என்பதை

“கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை”                                                    (திருக்குறள், 758)

என்பதன்வழி அறிய முடிகிறது.

வள்ளுவர் பெருந்தகை, பெரும் புலவர் அவரே இறைவனின் திருமேனியில் அவரின் தாள்களைப் பற்றுவதே சிறந்தது என்று தன் குறளில் தெளிவுபட விளக்கியுள்ளார். மேலும் திருமுருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் தாள்களைப் பற்றுவதே மேலானது என்பதை

“நின்னிற் சிறந்த நின்தாளினையே” (பரிபாடல்)

“உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்”         (திருமுருகாற்றுப்படை, 4)

என்பவற்றின்வழி அறிய முடிகின்றது.

கடம்பமாலை புரளும் மார்பினன்

முருகப்பெருமானின் அருளினால் நல்ல மழை பொழிந்து பார்க்கும் இடமெங்கும் பசுமையான தோற்றத்துடன் காணப்படுகின்றன. பசுமையான சோலைகளில் தழைத்துப் பூத்து அழகுற வளர்ந்துள்ள கடம்ப மரத்தின் மலர்கள் வட்ட வடிவில் மாலை மாலையாகப் பூத்து நிற்கும். அம்மலர்களை மாலையாகச் சேர்த்து அணிந்திருப்பார். அக் கடம்ப மாலையை அணிந்திருக்கும்போது இன்னும் பேரழகுடன் காட்சியளிப்பார். அம்மாலை அவரின் மார்பில் புரளும்போது மாலையும் பேரழகுடன் இருக்கும். இதனைத் திருமுருகாற்றுப்படையின்

“தலைப்பெயல் தலைஇய தண்ற்றுங்கானத்து

இருள்படப் பொதுளிய பராசுரை மராஅத்து

உருள்பூந்தாண்டார் புரளும் மார்பினை”       (திருமுருகாற்றுப்படை, 9-10)

என்கிற அடிகள் விளக்குகின்றன.

இவ்வாறு முருகன் கடம்பமாலை புரளும் மார்பினை உடையவன் என்றும் மேலும் மரமேறும் தொழில் வல்லமையுடைய மந்தியும் ஏற முடியாத உயரத்தினையுடைய மரங்கள் நெருங்கி நிறைந்த பக்க மலையில் வண்டுகள் மொய்த்தலில்லாத தெய்வத் தன்மை வாய்ந்த நெருப்பு போல் செங்காந்தள் மலரின் பெரிய குளிர்ந்த கண்ணியை விரும்பிச் சூடிய திருமுடியை உடையவன் திருமுருகன் என்றும் முருகன் விரும்பி அணியும் அடையாளப் பூமாலை காந்தாளம் பூ என்பதையும் திருமேனிச் சிறப்பையும் மேற்கண்ட பாடலின்வழி அறியமுடிகின்றது.

வேலவனும் வேலும்

முருகனின் திருக்கைகளில் காணப்பெறும் கருவிகளாக வேல், அங்குசம், கிடுகு எனத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இவற்றில் முக்கியமான ஆய்தம் வேல். முருகன் தனது ஆயுதத்தால் சூரபதுமன் சிங்கமுகன், தாரகன் ஆகிய மூன்று அரக்கர்களையும் அழித்தார். அரக்கர் முவரையும் கொன்று மும்மலத்தையும் நீக்கினான் எனப் பொருள் கொள்வர் பெரியோர்.

“குன்றம் எறிந்ததும் குன்றப்போர் செய்ததுவும்

அன்றங் கமரிடர் தீர்த்ததுவும் – அன்றென்னைக்

கைவிட நின்றதுவும் காற்போதும் பின்காத்ததுவும்

மெய்விடா வீரன்கை வேல்”                    (திருமுருகாற்றுப்படை, 2 வெண்பா)

சூரபதுமன் என்னும் ஆணவமலத்தையும் சிங்கமுகன்  என்னும் கன்மமலத்தையும் தாரகன் என்னும் மாயை மலத்தையும் கொன்று இறைவன் நீக்கியதால் ‘சூரசம்ஹாரம்’ விழா கொண்டாடப்படுகிறது என்பர்.

                        “வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும்

(திருமுருகாற்றுப்படை, 6 வெண்பா)

அன்பர்களை ஆபத்தில் இருந்து காக்கவும் அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களை முற்றிலும் அழிக்கவும் ஆறுமுகன் வேலைத் தாங்கியுள்ளான் என்பதை நக்கீரர் ஆழம்படி எடுத்தியம்பியுள்ளார்.

முருகனின் வாகனம்

                        “அல்லல் இல் அனலன்தன் மெய்யில் பிரித்துச்

                        செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து

                        வளம்கெழு செல்வன் தன் மெய்யில் பிரித்துத்

                        திகழ்பொதிப் பீலி அணிமயில் கொடுத்தோன்

                        திருந்துகோல் ஞமன்மெய்யில் பிரித்து     

                        இருங்கள் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்”                         (பரிபாடல்)

முருகனின் வாகனமாக ஆடு இமயவனால் கொடுக்கப்பட்டது. அக்கினி பகவான் ஆறுமாமுருகனுக்குசு ஆனை ஈந்ததும் இந்திரன் இனிமையாக இன்பமயில் வழங்கியுள்ளார்கள் என்பதைப் பரிபாடலின்வழி அறிய முடிகின்றது.

சரஸ்வதியின் வாகனம் அன்னம். விஷ்ணுவின் வாகனம் கருடன், சனீஸ்வரனின் வாகனம் காக்கை, மன்மதனின் வாகனம் கிளி, முருகனின் வாகனம் மயில் என்பர்.  பறவை வாகனங்களில் பார்க்க அழகுடையது மயிலே. அதன் தோற்றம் ஓரழகு, நடை ஓரழகு, அதன் சாயல் எனப் பல வகையான வண்ணப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. அழகு மயில் பறப்பது ஓரழகு, தோகை விரித்தாடும்போது காண்போர் எல்லாம் மெய்மறந்து மகிழும் அளவுக்குப் பேரழகு கொண்டு விளங்குவது முருகனின் மயில் வாகனமாகும்.

மயிலின் வேறு பெயர்கள்

அழகு மயிலுக்கு மயில், மஞ்ஞை, மயூரம், தோகை, கேயகம், கேதாரம், சிகண்டி, சிகி, பிணிமுகம் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.

மயிலை வாகனமாகக் கொண்டுள்ள முருகப்பெருமானுக்கு மஞ்ஞையன், மயிலோன், மயில்வாகனன், மயில்சாமி, மயூரேசன், சிகிவாகனன் என்றும் பெயர்கள் உள. முருகனுடன் சார்ந்து மயிலுக்கும் உயர்வு தருகின்ற பெயராகும் எனத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறியுள்ளார்.

                        “தரகன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம்….”    (திருமுருகாற்றுப்படை, 210)

முருகன் மயிலை வாகனமாகக் கொண்டதற்குக் காரணம் சூரபதுமன் முருகனுடன் முரண்பட்டுப் பல மாய முறைகளில் முனைப்புடன் முயன்று போரிட்டு அவனை வெல்ல முடியாமல் திகைத்து நின்று முடிவில் ஒரு மாமரமாக நின்றான். அப்போது முருகன் தன் வேலால் அம் மரத்தை இருகூறுகளாகப் பிளந்தான். அதன் ஒரு கூறுதான் மயிலாயிற்று. இவனே மயில் வாகனன். மற்றொரு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தி நிற்கின்றான். சேவற்கொடியோன் என்றும் முருகன் அழைக்கப்பட்டான்.

அறுபடை வீடும் முருகப்பெருமானும்

முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்களில் முக்கியமானவை ஆறுதலங்களாகும். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினங்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் தங்கித் தன்பால் வருபவர்களுக்கு அருள் செய்து பக்தர்களுக்கு இறையின்பம் தருபவர் முருகப்பெருமான். ஆறு தலங்கள் ஆறுபடை வீடுகளாகும். முதல் படைவீடு திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றம்

மதுரையில் இருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இக்கோயில் மலை அடிவாரத்தில் உள்ளது. மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பங்கள் அழகுறத் திகழ்கின்றன. இங்கு முருகன் வடக்கு நோக்கி அமைந்த வண்ணம் காட்சியளிக்கின்றான். இங்ஙனம் வழிபடுபவர்க்கு அருள்வதற்காகத் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கிறார். இத்திருப்பரங்குன்றம் நீர்வளமும் நில வளமும் நிறைந்தது. இங்குள்ள மக்கள் முருகப் பெருமானின் அருளால் எல்லா வளமும் பெற்றுச் செழிப்புற இன்பமுற வாழ்கின்றனர் என்பதை நக்கீரர் வண்டுகளை உவமையாகத் தாமரைப் பூவில் துயில்கின்ற வைகறையில் நெய்தல் பூவிலுள்ள தேனையருந்திப் பகலவன் தோன்றியபின் சுனைமலரின்கண் ஆரவாரிக்கும் என நிலவளத்தின் பெருமையை இங்குத் திறம்பட விளக்கியுள்ளார்.

திருச்சீரலைவாய்

திருநெல்வேலியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் அமையப்பெற்றுள்ளது. இதன் பழமையான பெயர் செந்தில் ஆலைவாய் என்பர்.

                        “சீரலைவாய் உறைசெந்தில் நாதன்”                           (திருமுருகாற்றுப்படை)

ஓங்கி உயர்ந்த மலையின்மேல் ஆறுமுகங்களோடும் பன்னிரு கரங்களோடும் முருகன் வீற்றிருக்கின்றார். ஆறு முகனின் தோற்றத்தைத் திருமுருகாற்றுப்படையில் அழகுற விளக்குகிறார். இவ்வுலகம் அறியாமை என்னும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அதனை ஒளியுடையதாக ஆக்க வேண்டும் என்ற அருளால் குமரனின் ஒருமுகம் அறிவாகிய ஒளிக்கதிர்களைப் பரப்பி அந்த ஒளியின் எல்லைக்குள் வந்தவர்கள் அறியாமை என்னும் பேரிருளிலிருந்து விலகி ஞான ஒளியை அடைவார்கள் என்பதை நக்கீரர்

                        “மாயிருள் ஞானம் மறுவின்றி விளங்கப்

                        பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்”                     (திருமுருகாற்றுப்படை, 91-92)

என்றும்

மேலும்

                        “ஆர்வலர் ஏத்த அமர்த்தினிது ஒழுகிக்

                        காதலின் உவந்து வரம்கொடுத்தன்று”         (திருமுருகாற்றுப்படை, 94-95)

முருகப்பெருமானிடம் அன்பர்கள் எவ்வளவு அன்புடன் ஈடுபாட்டுடன் திகழ்கின்றார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு எல்லா வளங்களையும் அருளுகின்றான் என்பதை நக்கீரரின்வழி திருமுருகாற்றுப்படையில் காணமுடிகின்றது.

திருவாவினன்குடி

திருவாவினன்குடியும் பழனியும் வெவ்வேறான அடுத்தடுத்த இரண்டு தலங்களாகும். பழனி மலையின் அடிவாரத்தில் இருப்பது திருவாவினன்குடி. மிகப் பழமை வாய்ந்த தலம். இக்கோயிலை வேள்குலத்தில் தோன்றிய ஆவி என்பவன் அரசாண்டான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட எல்லா ஊரும் திருஆவினன்குடி. இப்பெயர் ஆவினன்குடி என்று மாறியது. பழனியைச் சுற்றி இருக்கின்ற பகுதியைத் திருஆவினன்குடி என்று அழைப்பர்.

திரு-ஆ-இனன்-கு-டி என்று பிரித்துத் திருமகள்-காமதேனும்-ஞாயிறும்-நிலம்-தீக்கடவுள் என அனைவரும் வழிபட்ட தலம் என்று புராணங்களும் சான்றோர்களும் குறிப்பிடுகின்றனர். ஆவினன்குடியில் முருகனைக் காண அடியவர்கள் மட்டும் வரவில்லை. முனிவர், தேவர்கள், திருமால், சிவபெருமான், இந்திரன் போன்றோர்களும் காண வந்தார்கள் என்றும் குறையிருந்தவர்களுக்கு அருளுவதற்காகத் தெய்வானையுடன் திருவாவினன்குடியில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார்.

திருவேரகம்

முருகனின் நான்காம் படைவீடு மிக அழகுடைய ஊர் ஏரகம். ஏரகம் என்பது எந்தத் திருத்தலம் என்பதில் கருத்து வேறுபாடு அனைவருக்கும் உண்டு. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று, ஏரகம் நீங்கா இறைவன் என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

                        “சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று

                        ஏரகமும் நீங்கா இறைவன்”                                                                     (சிலம்பு)

“ஏரக வெற்பனும் அற்புத மிக்க சுவாமிமலைப்பகுதி”

என்பது அருணகிரிநாதரின் அருள்வாக்கு. அந்த அருள்வாக்கினால் சுவாமிமலை என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. சிவபெருமான் பிரணவ மந்திரப் பொருளைக் கேட்க முருகன் தந்தைக்கு உபதேசம் செய்து குருவாகவும் தகப்பன் சாமியாகவும் சுவாமிநாதனாகக் காட்சியளிப்பது சுவாமிமைலை எனும் திருவேரகமாகும் என்று அருணகிரியார்

                        “அருணதள பாத பத்மம் அனுநிதமுமே துதிக்க

                        அரியதமிழ் தானளித்த மயில்வீரா

                        அதிசமய் அநேகமுற்ற பழநிமலை மீதுதித்த

                        அழகு திருவேரகத்தின் முருகோனே”                                       (அருணகிரியார்)

முருகப் பெருமானின் பெருமைகளைப் பாடுகிறார். மேலும் இறைவனை எவ்வாறெல்லாம் வழிபட வேண்டும் என்பதை நக்கீரர்

                        “ஆறெழுத்தடங்கிய அருமறைக் கேள்வி

                        நாஇயல் மருங்கில் நவிலப்பாடி”                  (திருமுருகாற்றுப்படை, 186-187)

சரவணபவநம, குமாராய என்ற ஆறெழுத்து மந்திரங்களை அந்தணர்கள் ஓதுகின்றனர். நாஇயல் மருங்கில் நாவில்பாடும் ஓதும்போது பிறரின் காதில்விழாதபடி மெதுவாக ஓத வேண்டும். இறைவனை நாம் வணங்கும்போது இறைவனிடம் மனம் உருகி வழிபடுவோம். அவை மற்றவர்கள் காதில் விழும்போது அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காக நக்கீரர் தன்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

குன்றுதோறாடல்

குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். குன்றுகள் அனைத்தும் அவன் வீற்றிருக்கும் தலங்களாகும். அவ்விடங்களில் குறவர்கள் அதிகமாக வாழ்ந்தனர். குறவர்கள் முருகனை வேலன் என்று அழைத்தனர். ஒவ்வொரு குன்றிலும் வாழ்பவர்கள் குரவைக்கூத்தாடி மகிழ்வார்கள். அங்கு வேலை வைத்து ஆடுகின்ற பூசாரியும் இருப்பான். அப்பூசாரி வேலன் என அழைக்கப்படுவான். அவ்வேலன் தலையில் கண்ணி அணிந்துள்ளான். அக்கண்ணி பச்சிலைமாலைக்குள் சாதிக்காயையும் தாக்கோல காயையும் காட்டு மல்லிகை மலர்களையும் வெண்மையான கூதாள மலர்களையும் சேர்த்துக் கட்டிய தலை மாலையை அணிந்து மக்களுக்குக் காட்சியளிக்கின்றான்.

பழமுதிர் சோலை

பழமுதிர் சோலை முருகனின் ஆறாம்படை வீடாகும். இங்கு உயரமான மலைகளிலும் பசுமையான செறிந்த சோலைகள், காடுகள் போன்றவற்றில் முருகன் விரும்பி வீற்றிருக்கின்றான். வழிபாட்டிற்கு என்று இடங்கள் ஒன்றும் இல்லை. மனம் உருகி நாம் எங்கு இறைவனை நினைக்கின்றோமோ அங்கெல்லாம் காட்சியளிப்பான் என்று நக்கீரர் குறிப்பிடுகிறார்.

வழிபாட்டிடங்களால் ஏற்றத்தாழ்வு ஒன்றுமில்லை. அன்பொன்றே வேண்டப்படுகிறது. அடியவர் இருக்கும் இடம் தேடிவந்து முன்னின்று அருள்புரிவான் என்று அவனுடைய எளிமையை விளக்குவதாகப் பழமுதிர்சோலை அமைந்துள்ளது. குறிஞ்சி நிலப்பகுதியில் அமைந்த முருகன் குன்று தோறாடல் ஐந்தாம் படைவீடாகும். குறிஞ்சி, முல்லை நிலப் பகுதியில் மரம், செடி, கொடிகள் செறிந்த சோலைகளில் அமைந்த முருகன் கோயில் பழமுதிர்சோலை என்ற ஆறாம் படைவீடாகக் காட்சியளிக்கிறது.

முடிவுரை

திருமுருகாற்றுப்படையில் முருகனின் தோற்றம், திருவடிப்பெருமை, திருமேனியின் பெருமை, வேலனும் வேலும் வாகனம், மயிலின் வேறு பெயர்கள், அதன் சிறப்புகள் மற்றும் முருகனின் ஆறுபடை வீடுகளும் அவை அமைந்துள்ள இடங்களையும் விவரித்துரைப்பதாய் இவ்வாய்வுக் கட்டுரை அமையப்பெற்றது.

துணைநூற்பட்டியல்

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன்

  1. இலக்கியங்களில் முருகன் – டாக்டர் டி. செல்வராஜ்
  2. கந்தபுராணம் – கி.வா.ஜ அவர்களால் கந்தவேள் கதையமுதம் எனும் தலைப்பில் எழுதப்பெற்ற இந்நூலின் முதற் பதிப்பு
  3. சங்க இலக்கியம் எட்டுத்தொகையின் மூலம் உரையும் – ச.வே.சுப்பிரமணியன்
  4. திருக்குறள் – நாமக்கல் கவிஞர் உரை.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *