சங்க இலக்கியங்களில் எதிரொலி

1

 

செ. முத்துமாரி,முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ் உயராய்வு மையம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,

திருநெல்வேலி – 8.

முன்னுரை

மாறாத சுவையும் தோய்ந்த இன்பமும் அளவின்றிச் சுறப்பன சங்கப் பாடல்கள். அவை பழந்தமிழர் வாழ்வை படம் பிடித்தாற் போல் கண்ணெதிரில் நிறுத்தி காட்டும் காலக்கண்ணாடியாக அமைத்துள்ளது. உற்றுநோக்கி, அதன் சிறப்பை, ஆற்றலை, நுட்பமான நிகழ்வுகளைத் தம் இலக்கியங்களில்  பதிவு செய்தனர். சங்கப் புலவர்களின் கூர்மையான  கவனத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட ஒலி வகையுள் ஒன்றான எதிரொலிக்கும் மனித குரல் வழி எழும் எதிரொலி பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

எதிரொலி

echo  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில்

      எதிரொலி என்பது பொருளாகும் ஒருவர் எழுப்பும்

       ஒலியை ஒலி அதிர்வினால் மீண்டும் திரும்பக்

       கேட்பதே எதிரொலி ஆகும்1

“எதிரொலி என்ற பொருள் தரும் ‘சிலம்பு

      என்னும் சொல்லை சங்க இலக்கியங்களில்

      பரவலாகக் காணலாம் எதிரொலி செய்தலால்

      மலைக்குச் சிலம்பு என்ற பெயரும் உண்டு“ 2

குரல் ஒலி

குரல் ஒலித் தோற்றுவிப்பன மனிதனின் உடல் உறுப்புகளே அவற்றைப் பேச்சு உறுப்புகள் அல்லது ஒலிவுறுப்புகள் எனக் குறிப்பிடுவர். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுகுழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் குரல் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. குரல்ஒலியானது, முணுமுணுப்பு ஒலி கீச்சுகுரல் ஒலி, கிசுகிசு ஒலி, பேரொலி என ஒலிக்கும் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றது.

குரல் ஒலி மனிதர்கள் பேசும் சுழலமைவைப் பொருத்து மிகுந்தும் குறுகியும் ஒலிக்கும் மிகுந்து ஒலிக்கும் போது அவ்வொலி  எதிரொலியாகத் திரும்பக் கேட்பதும் உண்டு இவ்வெதிரொலி பற்றிய சான்றுகளைச் சங்கப் பாடல்களில் காணலாம்.

சங்க இலக்கியங்களில் எதிரொலிக் குறித்த செய்திகள் பரவலாக காணப்படிகின்றன. ஆயினும் மனிதக் குரல் ஒலி மூலமாக எழும் எதிரொலிகள் பற்றிய செய்திகள் ஒருசிலவே காணப்படுகின்றன அவை பின்வருமாறு அவை பின்வருமாறு

  1. அதட்டும் ஒலி
  2. அழைப்பொலி
  3. வாழ்த்தொலி
  4. மலைவாழ் மக்கள் எழுப்பும்
  5. அதட்டும் ஒலி

பெரியவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களையோ, விலங்குகளையோ, பறவைகளையோ அதட்டி தாம் கருதியதைச் செய்து முடிப்பது உண்டு. அவ்வாறு அதட்டும் ஓசையானது பேரொளியாக எழும்பி எதிரொலியாகக் கயமனார் என்னும் புலவர் அகநானூற்றில் அழகுற எடுத்தியம்பியுள்ளார்.

பாலை நிலத்தின் அரிய வழியில் சகடத்தை இழுத்துச் செல்லும்  எருதுகள் அவ்வழியில் போக முடியாமல் இடற்படுகின்றன. அவ்வெருதுகளை உப்புவணிகர் அதட்டி ஓட்டுவதால் அவரது அதட்டும் குரல்வொலியனது மலைப்பகுதிகளில் எதிரொலிக்கின்றது. இதனை,

“கொடுங் கோல் உமணர், பகடு தெழி தென் விளி

நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்”

(அகம்: 17:13-14)

எனும் பாடல்வரிகள் அறியலாம்.

  1. 2. அழைப்பொலி

ஒருவர் இன்னொருவரை  அழைக்கும் பொது அருகில் இருந்தால்  மெதுவாகவும், தொலைவில் இருந்தால் சத்தமாகவும் அழைப்பது வழக்கம். அவ்வாறு  சத்தமாக அழைக்கும் பொது இடத்தின் சூழலமைவைப் பொறுத்து அவ்வழைப்போலி எதிரொலியாகக் கேட்பதும் உண்டு. இதனை பரிபாடலில் காணலாம்.

பேதை பருவத்தில் உள்ள ஓர் இளம்பெண் தன் உறவினரை விட்டுப் பிரிந்ததால் மலைப்பகுதியில்  இட வேறுபாடு  காரணமாக எங்கு செல்ல வேண்டும் என்பது  கூடத் தெரியாமல் திகைக்கிறாள். பின் தன் உறவினரைச் ‘சிறந்தவரே! சிறந்தவரே!’ என்று அழைக்கிறார்.  அங்குள்ள குகைகள் அவள் அழைப்பை ஏற்காமல்  விளியின் இசையே மட்டும் ஏற்றுக்கொண்டு எதிரொலிக்கின்றன.  அப்பெண் குகையின் எதிரொலி என்பதறியாமல் உறவினரின் அழைப்பொலி என்று நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப அழைத்துக் கூவுவதை,

‘ஏஎ’ ஓஒ’ என விளி ஏற்பிக்க

ஏஎ’ ஓஒ’  என்று ஏலா அவ் விளி

அவ் இசை முழை ஏற்று அழைப்ப அழைத்துழிக்

செல்குவர் ஆங்குத்  தமர்க் காணாமை

மீட்சியும், கூவுக் கூஉ  மேவும் மடமைத்தே

வாழ்த்து உவப்பான் குன்றின் வகை’’ (பரி. 19;61-66)

எனும் பரிபாடல் வரிகளால்  அறியலாம்.  இப்பாடல் அவ்விடம் பெண்ணின் வழியாத்  துயரத்தை எதிரொலி மூலம் நுட்பமாக புலப்படுத்தி நிற்பது படித்து இன்புறத் தக்கதாகும்.

  1. வாழ்த்தொலி:

ஒருவரைப் பலர் கூடி வாழத்தும்  பொது மிகுந்த ஆரவாரத்துடன் வாழ்த்தி மகிழ்வது வழக்கம். திருமுருகாற்றுப்படை இத்தகைய வாழ்த்தொலி மூலம் எழும் எதிரொழி குறித்த செய்தியைப்  பதிவு செய்திருப்பது நோக்கத்தக்கது.

சூரர மகளிர் பலரும் ஒன்று கூடி விளாமரத்தின் தளிரை ஒருவர் மேல் ஒருவர் அத்தளிர் படும்படி விரலால் தெறிக்கச் செய்வர். அத்தளிர்  பட்டவுடன் ‘அசுரர்களை வென்று, அவர்களைக் கொன்றொழித்து அவ்வெற்றி குறித்துத்  தூக்கிய கோழிக்  கொடி வாழிய பெரிது’ என்று வாழ்த்திப் பலரும்  ஒன்றாக  கூடி ஆடிப்பாடும் ஆரவாரம் மலையெங்கும் எதிரொலிக்கின்றது. இதனை,

‘கோழி ஓங்கிய வென்றுஅடு விறற் கொடி

வாழிய  பெரிது! என்று ஏத்தி  பலர் உடன்

சீர்திகழ் சிலம்புஅகம்  சிலம்பப் பாடி

சூரர  மகளிர் ஆடும் சோலை” (தி.மு. 38-41)

எனும்  திருமுருகாற்றுப்படையின் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

  1. மலைவாழ் மக்கள் எழுப்பும் குரல் ஒலிகள்

பொதுவாக எதிரொலி மலைப்பகுதிகளில்  அதிகமாக எழுவது உண்டு. விலங்குகளின்  ஓசையும், இடி ஓசையும், மலைகளில்  பட்டு எதிரொலிப்பது வழக்கம். அவற்றோடு மலைவாழ் மக்கள்  எழுப்பும் குரல் ஒலிகளும் மலைகளில் பட்டு எதிரொலிக்கும் செய்தியைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான மலைபடுகடாம் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளது வியப்பிற்குரியதாகும்.  மலைபடுகடாம்  மலைவாழ் குறவர்கள் விலங்குகளைப் பிடிக்கும் போது எழுப்பும் ஒலி, தேன் எடுக்கும்  போது எழுப்பும் ஆரவார ஒலி, ஆகியவற்றின் எதிரொலிகளை எடுத்துரைக்கின்றன.

“விலங்கல், மீமிசைப் பணவைக் கானவர்

புலம்புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்”

(மலைப்படு 298-299)

எனும் பூசல் ஒலியும்,

“கலை கையற்ற  காண்பின் நெடுவரை,

நிலை பெய்திட்ட மால்பு நெறியாகப்,

பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை””

என்னும் தேன் எடுக்கும் போது எழும் ஒலியும் எதிரொலிகளை ஏற்படுத்துவதை இப்பாடல் வரிகள் வரிகள் எடுத்துரைக்கின்றன.

மேலும், மலைவாழ் பெண்களின் பாட்டொலி, கிளியோட்டும் ஒலி, சூரர மகளிரின் ஆரவார ஒலி, ஆகியனவும் அவற்றின் பாடலைப் படிப்பவர்க்குப் புதிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

‘கொடுவரி பாய்ந்தெனக்  தொழுநர் மார்பின்

நெடுவிசி விழுப்புண் தனிமார், காப்பென

 

அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் மாடல்’

(மலைபடு: 302-304)

‘தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்’ (மலைபடு:342)

எனும் பாட்டொலிகளும்,

‘ஒலிகழைத் தட்டை புடைநர் புனன்தொனும்,

கிளிகடி மகளிர் விளிபடுபூசல்’ (மலைபடு:328-329)

எனும் கிளியோட்டும் ஒலியும்,

‘அருவிருகளும் வான் அரமகளிர்

வருவிசைதவிராது வாங்குபு குடைதொறும்

தெரிஇமிழ்  கொண்டதும் இயம்போல் இன்னிசை’

(மலைபடு:294-296)

எனும் சூரர மகளிரின் ஆரவார ஒலியும்  மலைப்பகுதிகளில் பட்டு எதிரொலிப்பதை மலைபடுகடாம் அழகுற எடுத்துரைக்கிறது எனலாம்.

இவ்வொலிகள் தவிர மலைவாழ்மக்கள் எழுப்பும் குரலைக் கூத்தொலியும் (மலைபடு:322), காட்டுப்பசுக்கள் ஒன்றோடு ஓன்று போர் இடுவதைக் கண்டும் குறவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியும் (மலை 330-333), குறவச் சிறுவர்கள் எழுப்பும் ஓசையும் (மலை 336-339)  எதிரொலிகள் எழுப்புவதை மலைபடுகடாம் நுட்பமாக பாடிக் களிக்கிறது.

முடிவுரை

எதிரொலிகள் அறிவியல் நுட்பம் ஆகும். திரும்பக் கேட்டல் என்பது மனித மனதிற்கு இன்பம் விளைவிப்பது மலை பகுதிகளே பெரும்பாலும் எதிரொலிகளின் பிறப்பிடமாகும். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் குரல் ஒலிகளும் மலைபகுதிகளிலேயே பட்டுத் திரும்ப எதிரொலிக்கும் எதிரொலிகளாக அமைத்துள்ளன. பெரும்பாலும் மனித உணர்வுகளும் சூழல் அமைவுகளுமே எதிரொளிக்குக் காரணமாக அமைவதை இக்கட்டுரை உறுதிபடுத்துகிறது எனலாம்.

அடிக்குறிப்புகள்

  1. English Dictionary oxford P.No.54
  2. ச. பவானந்தம் பிள்ளை, தமிழ் சொல்லகராதி. ப .

துணைநூற்பட்டியல்

1.மறைமலை இலக்குவனார், சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கட்டுரை, 2010.

  1. இரா. குணசீலன், பழந்தமிழர் ஒலிச்சூழல், இந்திய பல்கலைகழகத் தமிழாசிரியர் மன்ற பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை, 2007.
  2. இரா. குணசீலன், சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, 2003.

4.மு.பூங்கோதை, மதுரைக்காஞ்சியில் ஒலிச்சூழலமைவு, முத்துக்கமலம், இணைய இலக்கிய இதழ்.

   

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சங்க இலக்கியங்களில் எதிரொலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *