இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (284)
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரத்தில் உங்களுடன் மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். காலத்தின் வேகம் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் போல அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. அன்றைய நாட்டின் நடப்புகள் இன்றைய நாட்டின் நடப்புக்கு ஏற்றதாகக் கருதப்படாததால் சமுதாய நிலைப்பாடுகளும் காலத்திற்கேற்பத் தமது போக்குகளை மாற்றிக் கொண்டே செல்கின்றன. இது நாட்டிற்கு நாடு அந்தந்த நாட்டின் கலாசார நிலைப்பாடுகளை ஒட்டி வேறுபடுகின்றதேயொழிய அடிப்படையில் அனைத்தும் காலத்தின் மாற்றங்களே!
இங்கிலாந்தில் இன்று அரசியல்களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கிலாந்தின் பிரதமர் தெரேசா மே அவர்கள் தமது பதவியில் நிலைத்து இருப்பாரா? எனும் கேள்வி பல அரசியல் அவதானிகள் மத்தியில் எழுப்பப்பட்டு அலசப்பட்டு வருகிறது. “ப்ரெக்ஸிட்” எனும் அந்தப் பூதம் மீண்டும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குவளையிலிருந்து மெதுவாக தலையை வெளியே நீட்டினாலும் அந்நிகழ்வு பூதாகரமான நிகழ்வாகவே நோக்கப்படுகிறது. இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றத்தின் பின்னால் எவ்வகையான வியாபார ஒப்பந்தத்தை எட்டப்போகின்றன என்பதே இன்றைய முக்கியமான விவாதமாக இருக்கின்றது.
இந்த ஒப்பந்தத்தை எட்ட இருக்கும் காலக்கெடுவானது அவசரமாகத் தனது எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும், பிரதமரும் அவசரம், அவசரமாக பல கருத்துப்பரிமாறல்களை ஜரோப்பிய ஒன்றியத்துடன் நிகழ்த்தினாலும் இன்னும் தீர்க்கப்படாத சில முக்கிய விவகாரங்கள் தலையிடியைக் கொடுக்காமலில்லை. இங்கிலாந்தின் பிரதமரின் வைராக்கியத்தைப் பாராட்டமலிருக்க முடியாது. ப்ரெக்ஸிட் வேண்டும் எனும் தீர்ப்பளித்த பெரும்பான்மை இங்கிலாந்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அரசின் ஜனநாயகக் கடமை என அதற்குச் சார்பான அரசியல்வாதிகள் ஒருபுறம், மக்கள் ஆதரவாக வாக்களித்தார்கள் எனும் ஒரே காரணத்திற்காக நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டாலும் பரவாயில்லை ப்ரெக்ஸிட்டை நிறைவேற்றுவோம் என்பதல்ல உண்மையான ஜனநாயகம் என்று வாதிடும் அரசியல்வாதிகள் ஒருபுறம், இந்த இக்கட்டான சூழலை உபயோகித்து அரசாங்கத்தைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலுக்கு வழிவகுத்தால் தமக்கு வெற்றியடைய ஒரு வாய்ப்பிருக்கும் என்று செயல்படும் எதிர்கட்சி ஒருபுறம், பிரதமரின் சூழலை உபயோகித்து பிரதமரை வீழ்த்தித் தாம் பிரதமராகலாம் எனும் எண்ணம் கொண்ட பிரதமரின் கட்சியைச் சார்ந்தோரின் முதுக்குப் பின்னால் விழும் கத்திக் குத்துகள் ஒருபுறம் என அனைத்தையும் சமாளித்துக் கொண்டு ஒரு பெண் என்று எண்ணி என்னை விழுத்தி விட முடியாது என்று செயற்படும் பிரதமரின் வைராக்யம் அலாதியானது.
பிரதமருக்கான இந்த பிரச்சனைகள் ஓரிடத்தில் இருந்து மட்டும் வந்து விடவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ப்ரபல்யமான அரசியல்வாதிகள் எனப்பலரும் இந்நிலைக்கு காரணகர்த்தாக்கள். இங்கே செயற்படும் எத்தனை பேர் நாட்டின் நன்மையை முன்வைத்து செயற்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே! இன்னும் இரண்டு தினங்களில் கூட இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் ஒரு முடிவும், உடன்படிக்கையும் எட்டப்படாவிட்டால் உடன்படிக்கையற்ற ஒரு விலகலையே இங்கிலாந்து எதிர்நோக்க வேண்டிவரும். அத்தகைய ஓர் முடிவினால் எத்தகைய பொருளாதாரப் பின்னடைவுக்கு இங்கிலாந்து முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது யாராலும் கூறமுடியாத ஒரு விடயமாகும். பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொண்டாலும்,ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவானவர்கள் இப்பின்னடைவு மிகவும் தற்காலிகமானது அதைத்தொடர்ந்து வரும் முன்னேற்றம் இப்பின்னடைவினை நியாயப்படுத்தும் என்கிறார்கள். ஆனால் ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்களோ இப்பின்னடைவு எமது பொருளாதாரத்தை ஒரு பத்து வருடங்களுக்கு மேலாகப் பின் தள்ளும் என்கிறார்கள். இத்தகைய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் படலத்தை இதுவரை எந்த ஒரு நாடுமோ மேற்கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்திலேயே இத்தகைய ஒரு நிகழ்வு இப்போதுதான் முதன்முறையாக நிகழ்கிறது.
பிரதமர் திரேஸா மே அவர்கள் நாட்டின் முன்னேற்ற்த்துக்கான உடன்படிக்கையை நிறைவேற்றித் தனது சங்கற்பத்தை நிறைவேற்றுவாரா? இல்லை பதவியைப் பறிகொடுப்பாரா? இங்கிலாந்தின் பொருளாதாரம் எவ்வகையில் பாதிக்கப்படப் போகிறது? இக்கேள்விகளுக்கெல்லாம் விடையை அடுத்த வாரம் பகன்று விடுமா? இல்லை இன்னும் ஏக்கத்தின் விளிம்பில் காத்திருக்க வேண்டுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்,
சக்தி சக்திதாசன்
16.10.2018