நிறம் உதிர்க்கும் பட்டாம் பூச்சிகள்

2

முனைவர் பா. ஜெய்கணேஷ்

“முடிதான் இப்ப உன் பிரச்சனையா? வயசு முப்பது ஆயாச்சு. படிக்கிறேன்ற பேர்ல காலத்த ஓட்டிட்டு இப்ப வந்து நின்னுகிட்டு மாப்ள அப்படி வேணும் இப்படி வேணும்னு கேட்டா நாங்க என்ன பண்றது? இத்தோட ஐஞ்சி ஆறு பாத்தாச்சு. வரவன் மூஞ்சிய பாத்தா பரவால்ல. அவன் மண்டையதான் பாப்பன். அதுவும் டி.ஆர். மாதிரி முடி வேணும்னு சொல்ற. உங்க அப்பா கூடதான் கல்யாணத்துக்கு முன்னடி மண்ட முழுக்க முடி வச்சி இருந்தார். இப்ப பாரு பின்னடி இருந்து வழிச்சு விட்டாதான் முன்னடி வந்து நாலு விழுது. நான்லாம் குடும்பம் நடத்தல. அதுக்காக விட்டுட்டா போயிட்டன்னு” கலா சத்தமா பேசிக்கிட்டு இருந்தா.

“அம்மா நிறுத்தும்மா. சும்மா ஏன் இப்படி கத்துற. நான் என்ன சொத்துபத்து வேணும், கார் வேணும், நல்ல வேல வேணும்னா கேட்டன். மண்டையில முடி இருக்கறவனாதான் கேட்டன். ஒன்னு முன் மண்ட வழுக்க, இன்னொன்னு பின் மண்ட வழுக்க, அப்புறம் ஒன்னு கூட்டிட்டு வந்தீங்களே அதுக்கு ரெண்டு பக்கம் பட்டயான்னு ஏறிக்கிட்டு கிடக்கு. அதல்லாம் கூட பரவா இல்ல இப்ப வந்துச்சே அது வழுக்க இல்ல மொட்ட. இப்படியா கூட்டிட்டு வந்து நிறுத்தி கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன்” அப்படின்னு கோபத்துல கொப்பளிச்சா நிலா.

“ஆவோன்னா அப்பா கல்யாணத்துக்கு முன்னடி எப்படி இருந்தாரு, இப்ப எப்படி இருக்காரு, பாரு பாருன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன். அவர் என் அப்பா. அவர் மண்டையில முடி இருந்தாலும் இல்லனாலும் பிரச்சன இல்ல. ஆனா நான் கட்டிக்கப்போறவன் மண்டையில நிச்சயமா முடி இருந்தே ஆகணும்.

அதுவும் என் தலைவர் டி.ராஜேந்தர் மாதிரி இருந்தே ஆகணும். ஏன்னா அப்பதான் கல்யாணம் ஆயி, புள்ள பெத்து, வயசான கிழவியானாலும் அவருக்கு முடிகொட்டாது. நீ அப்பா தலைய சரியாப் பாக்கல. ஆனா நான் ரொம்ப விவரம்ல. முடி முன்னடி வந்து சரியணும். அப்படி இருக்கற மாப்பள எவன்னா இருந்தா கூட்டிக்கிட்டு வாங்க. இல்லனா  போய் வேலய பாருங்க”.

 “இது என்னடா வம்பா இருக்கு. ஊருல அந்தந்த அம்மாக்கு ஆயிரம் பிரச்சினைனா ஏன் பிரச்சன முடி பிரச்சனையா இருக்கே. ஊருல இருந்து சென்னைக்கு வர மாப்பிளலாம் முடியோடதான் வரானுங்க. ஆனா இங்கு வந்து உப்பு தண்ணியில குளிச்சாலே முடிலாம் தண்ணியோட வழிஞ்சி வழிஞ்சி ஓடிருதாம். இவ ஊரு பக்கம் எவனாவதுன்னு சொன்னா வேணாம்னு சொல்றா. சென்னை செட்டில்னா இந்தப் பிரச்சன.

“முப்பத்தைஞ்சி வயசுக்காரன் கூட இருபத்தைஞ்சி, இருபத்தெட்டுனா சொல்லுங்க. அதுக்கு மேல வயசான பொண்ணுலாம் வேணாம்னு சொல்றானுங்கன்னு இந்த புரோக்கர் சொல்லிட்டுப் போறாரு. எனக்கே என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறன். போன மாசம் கூட நியூஸ்ல படிச்சன் ஒரு பையன் முடி வளக்கறன்னு போயி தப்பான சிகிச்சையால செத்துப்போனத. பாவம் இந்தப் பசங்க மட்டும் என்ன பண்ணுவானுங்க. முடிவளக்கறதுக்காக உயிரயே விட்டுடறானுங்கன்னு” புலம்பிக்கிட்டே பாத்திரங்கள கழுவி அடுக்கிவைச்சுக்கிட்டு இருந்தா கலா.

“நீ என்ன வேணா சொல்லு. ஆனா நான் சொல்றதுதான் நடக்கணும்… சரிசரி நீ ஏதாவது தனியாப் பேசிக்கிட்டே இரு. நான் புவனா வீட்டுவரைக்கும் போயிட்டு வந்துடறன்”னு தன்னோட வண்டிய தள்ளிக்கிட்டு கிளம்பினா நிலா.

இரு பக்கங்களிலும் சீராக நின்றிருக்கிற புளியமரங்களின் இடையே ஓடும் சாலையைக் கடந்து புவனா வீட்டு வாசலில் போய் நின்ற வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு முன்வாசல் வழியாக நிலா உள்ளே நுழைந்த போதே “என்னடி நிலா எங்க ஆளயே காணோம். ஊருக்கு வந்து நாளுநாள் ஆச்சாம். பாக்கவே முடியல” என்றாள் புவனா.

“அத ஏண்டி கேக்கற எங்க அப்பாவும் அம்மாவும் மாப்ள பாக்கறன்ர பேர்ல உயிர எடுக்கறாங்க. மண்டையில முடி இல்லாதவங்களா கூட்டிக்கிட்டு வந்து நிறுத்தினா? நான் என்ன பண்ணுவன். அதான் வந்ததுல இருந்து ஒரே சண்ட. சண்ட போடவே நேரம் சரியாப் போச்சுடி” என்று சொல்லியபடியே அருகிலிருந்த சோபாவின் மீது அமர்ந்தாள்.

“ஏண்டி மண்டையில முடி இருக்கறவனதான் கட்டிக்குவன்னு அடம்பிடிக்கற. முடிலாம் ஒரு பிரச்சனையா.அதான் உன் உயிர் நண்பன்னு ஒன்னு இருந்துச்சே அதுக்கு மட்டும் என்ன மண்டையில முடியா இருந்துச்சு. அததான ஆறு வருஷமா கட்டிக்கிட்டு அழுத.

ஆமாம் இப்ப எங்கடி அவன ஆளயே காணோம். போன்ல கூட பேசறதா தெரியலயே. நான்லாம் உனக்கு பேருக்குத்தான் பிரெண்டு” என்று புவனா தொடங்கும்போதே,

“இப்ப உனக்கு பேசறதுக்கு வேற எதுவுமே இல்லயா?” என்று எரிச்சலுடன் கேட்டாள் நிலா.

“இல்ல எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். உங்களுக்குள்ள என்னதான் பிரச்சன. அந்த கதைய எனக்கு நீ முழுசா இதுவரை சொன்னதே இல்ல” என்று புவனா கேட்டுக்கிட்டே ஒரு ஆப்பிளை இரண்டு துண்டாக நறுக்கிவைத்தாள்.

“ ஏண்டி ஆப்பிள். இன்ட்ரெஸ்டிங்கா திங்க நொறுக்குத்தீனி வேற எதுவுமே இல்லையா” என்று நிலா கேட்க கொஞ்சம் சலிப்புடன் “ஆப்பிள்தான் இருக்கு. அதயே தின்னு. இன்ட்ரெஸ்டிங்கா நீ உன் ‘நட்புக்காக’ கதையச் சொல்லு” என்றாள் புவனா.

“அத இங்க சொன்னா யாருக்குமே புரியாதுடி. காலேஜ்ல நான் எம்.பில். படிச்ச சமயம். ஒருநாள் காலேஜோட பின்பக்கம் ஒரு அணில் அடிபட்டு கிடந்துச்சு. நான் பாத்துட்டு பதறியடிச்சு ஓடிப்போய் தூக்கிப் பாத்தான். மூச்சுவிடமுடியாம உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல அது செத்தும் போயிருச்சு. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்ப அங்க ஒல்லியா கருப்பா ஒரு உருவம் வந்து நின்னு இங்கதாங்கன்னு வாங்கி அத பத்தரமா பள்ளம் தோண்டி பொதச்சு மனுசங்களுக்கு சடங்கு பண்ற மாதிரியே பண்ணுச்சு.

எங்கயோ அந்த அணில் நிம்மதியா தூங்குன உணர்வு கிடச்சி அது இறந்த உணர்வே இல்லாம ஆயிருச்சு எனக்கு. அப்புறம்தான் விசாரிச்சன் அது யாருன்னு. எம்.ஏ. படிக்கறாங்கன்னு சொன்னங்க. அடுத்தநாள் வராண்டவுல பாத்தன். கொஞ்சநாள்லயே பேச ஆரம்பிச்சு நல்லாப் பழகவும் ஆரம்பிச்சுருச்சு. இதோட வகுப்புலயே இருக்கற இன்னொருத்தனுக்கும் என்ன பிடிக்கும் போல. படிப்புலயே இதுக்கும் அவனுக்கும்தான் போட்டியாம்? அவனும் என் பின்னடியே திரிஞ்சான். இதால தாங்கிக்க முடியல போல. என்மேல இருந்த பாசம் கூட ஆரம்பிச்சுருச்சு.

ஒருநாள் வந்து ஏன்கிட்ட நான் உன்ன விரும்பறன். கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுச்சு.

அந்த ஒரு கணம் அதிர்ச்சியா இருந்தாலும் கேட்டது அதுவா இருந்ததால என்னால மறுக்க முடியல.

நானும் சரின்னு சொல்லிட்டேன். ஒருவாரம் ரொம்ப சந்தோஷமா இருந்தன். ஆனா எனக்குள்ள இருந்த அந்தக் குற்றஉணர்வு என்ன இயல்பா இருக்கவிடல. அத நான் சொல்லாம போனா பாவம் பண்ணவளா ஆயிருவன்னு அன்னைக்கு சொல்ல முடிவுபண்ணன்”.

“என்னடி அப்படி ஒரு குற்ற உணர்ச்சி” என்று புவனா இடைமறித்துக் கேக்க “அதுவா இரு சொல்றன்னு” நிலா தொடர்ந்தா…

“எனக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கற இதயப் பிரச்சன உனக்குத் தெரியும்ல. அதத்தான் அதுகிட்ட அன்னைக்கு சொன்னன். பின்னடி குழந்த பெத்துக்கறதுலயும் பிரச்சன இருக்கலாம்னு டாக்டர் சொன்னத சேத்தே சொன்னன். அந்த நிமிஷம் அது அந்த அணிலுக்குக் காட்டின இரக்கமும் பரிவும் என் கண்ணுக்கு முன்னடி வந்து நின்னுச்சு.

கொஞ்சநேரத்துல வரன்னு எந்திரிச்சு போனதுதான் ஆளயே காணோம். அப்புறம் மாலையில போன் பண்ணுச்சு.“இங்க பாரு நிலா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீயில்லாம நான் இல்ல. என்ன மாதிரி ஒரு ஆள இந்த உலகத்துலயே உன்னாலதான் பாத்துக்க முடியும்.ஆனா பொண்டாடியா இல்ல. ஒரு தோழியான்னு சொல்லுச்சு”.

“எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன்னு கூட கேக்கல. காரணம் தெரிஞ்சதுதான். வாரிசு எவ்ளோ முக்கியம் ஒவ்வொருத்தருக்கும்னு நாம பாக்காததா. அத தர சக்தி இல்லாத நான் ஏன் அவ்ளோ ஆசப்படணும்னு நினைச்சன்.

ஒண்ணும் சொல்லாம “பரவா இல்ல இந்த ஒரு வாரக் காதல் போதும் என் வாழ்க்கையில. யாரையும் காதலிக்கிற தகுதியும் எனக்கு இல்ல. நான் ஒரு தோழியாவே இருக்கன்னு” அன்னையில இருந்து ரெண்டு வருஷத்துக்கு முன்னடி வரைக்கும் அப்படியே தான் இருந்தன்.

“அவன் பிரெண்டுன்னு சொன்னதும் பல்ல இளிச்சிக்கிட்டு போய் ரெண்டு வருஷம் முன்னடி வரைக்கும் உயிரக் கொடுத்த. அப்பறம் எப்படி ஒனக்கு ஞானம் பொறந்து அத விட்டுத் தொலைச்ச. அது பண்ணத நினைச்சா எனக்கே கடுப்பா வருது. நீ எப்படிதான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டியோ” என்று புவனா புலம்பினாள்.

“எல்லா மனுஷங்களுக்கும் சுயநலம் இருக்கும். அதுக்காக நான் பொதுநலமா யோசிக்கறன்னு சொல்லல. ஒரு உயிரு என்னால வலி அனுபவிச்சிரக்கூடாதுன்னு மட்டும்தான் நினைச்சன். அதனாலதான் அத்தன வருஷமும் நான் ஒரு தோழியாவே இருந்தன். தோழின்னு மட்டும் இல்ல அதக் கடந்து சில நேரங்கள்ல ஒரு அம்மாவா, ஒரு சகோதரியாலாம் என்ன நானே கற்பனை பண்ணிக்குவன்”.

ஏன் அப்படியெல்லாம் நான் யோசிச்சேன்னா அது என்ன விரும்பிட்டு இதயப் பிரச்சினையாலதான வேணாம்னு சொல்லுச்சு. அந்த குற்றவுணர்ச்சிக்காகத்தான் என்ன அது ரொம்ப பத்தரமா பாத்துக்கிறன்னும் பாத்துக்கிச்சு. எனக்கும் இந்த காதல் மேலலாம் நம்பிக்க இல்ல. நான் நினைச்ச எல்லாக் கதாப்பாத்திரங்களாகவும்  இருந்து அதோட துக்கங்கள்ல சந்தோஷங்கள்ல பங்கெடுத்துக்கறன்ற திருப்தி மட்டும் இருந்துச்சு.

“சரி அவ்ளோ நம்பிக்கையில போன உங்க உறவுக்குள்ள வந்த சிக்கல் என்னதான்”. சொல்லண்டி மண்டையே வெடிச்சுரும் போல இருக்கு” எனக்குன்னு புவனா ஆர்வமாக கேட்டாள்.

“அதுக்கு குழந்தைனா உயிரு. அதுவும் அழகான குழந்தையாத்தான் வேணும்னு தேடித் தேடி அழகான பொண்ணுங்களா காதலிச்சுகிட்டு இருந்துச்சு. ஆனா அதுங்களுக்கு எதுவும் இதப் பிடிக்கல”.

“ஆமா ஆமா எல்லாம் உன்ன மாதிரி மூஞ்சியவே பாக்காம சரின்னு சொல்லிருங்களா? அணில பாத்தன், ஆட்டுக்குட்டிய பாத்தன்னு வேற ஒரு காரணம். மூஞ்சிய விட முழு மண்டையிலயும் முளைச்ச புல்லு, பூண்டெல்லாம் எப்ப போச்சுனே தெரியல. அப்புறம் எப்படி யாருக்கும் பிடிக்கும்னு” புவனா கடுப்பில் சொல்ல,

“அதான் அதோட பிரச்சனையே. ஆனா தான் பிரச்சனைய அது புரிஞ்சிகிட்டதே கிடையாது. ஒவ்வொரு முறையும் நான் இத காதலிக்கறன், அத காதலிக்கறன்னு விதவிதமான பொண்ணுங்களோட போட்டாவா அனுப்பும். அதுல ஒரு பொண்ண இதுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. அந்தப் பொண்ணுக்கும் இத கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. அன்னையில இருந்து எப்ப பாத்தாலும் அந்தப் பொண்ணு உன்னவிட  ரொம்ப அழகு, அவ அவ்ளோ நல்லவ, அவள மாதிரி மனிதாபிமானம் இங்க யாருக்கும் இல்லன்னு ஒப்பிட்டுப் பேசிக்கிட்டே இருக்கும்.

ரொம்ப பொறுக்க முடியாம ஒருநாள் சொல்லிட்டன். “இங்க பாரு நான் உனக்கு ஒரு தோழி அவ்ளோதான். யாரோடயும் என்ன ஒப்பிட்டுப் பேசாதன்னு சொன்னன்”.

அப்போ அது சொல்லுச்சு. “உனக்குப் பொறாம. அந்தப் பொண்ணு எனக்குக் கிடச்சிட்டான்னு”.

“எனக்கு என்ன பொறாம. எது கிடைச்சாலும்தான் நீ எப்படியும் தூக்கிப் போட்டுடப் போறன்னு” நான் சொல்ல அதுக்கு அது, “ உன்ன நான் வேணாம்னு சொன்ன மாதிரி அவள நான் வேணாம்னு சொல்லவேண்டி அவசியம் இருக்காது. ஏன்னா அவ எனக்கு அழகான குழந்தையப் பெத்துத் தரதுல அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல”ன்னு சொல்லுச்சு.

“அதுக்கு நீ என்னடி சொன்ன. வச்சி வாங்கி இருக்கக்கூடாது” என்று புவனா கோபத்தோடு கேட்டாள்.

“கேட்டா மட்டும் என்ன ஆகப்போகுது. எனக்கு ஒன்னு மட்டும் அப்ப விளங்குச்சு. அப்படி ஒரு வெள்ள மனசோட எங்கிட்ட அது பழகலன்றது. அப்பதான் முடிவு பண்ணன். அதோட இனியும் பேசினா நான் பைத்தியமா ஆயிருவன்னு.

மொத மொதலா  இது என் கிட்ட காதல வந்து சொன்னப்ப பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு சொன்னா அக்கா இவர் மண்டையில முடியே இல்லன்னு”. ஆனா அப்ப அது எனக்குப் பெருசாத் தெரியல. அப்படிப்பட்ட இது என்னோட குறைய என்ன காயப்படுத்தற மாதிரியே என்கிட்ட வந்து சொல்லுதுனா என்ன பத்தி இத்தன நாளா என்ன நெனச்சி இருந்திருக்கும்னு எனக்கு அப்பதோணுச்சு. “நட்பும் கிடையாது, நான் தோழியும் கிடையாதுன்னு அப்ப முடிவு பண்ணன்”.

ஆனா அதுகிட்ட நான் வெளிக்காட்டிக்காம “உனக்குன்னு ஒருத்தி கிடைச்சிட்டா. இனி நான் உன் கிட்ட பேசனா அது உனக்கு நல்லது இல்லன்னு சொல்லிட்டு அதுக்கப்பறம் பேசறதையே விட்டுட்டன்.இதுவரை அதுவும் என்கிட்ட பேசறதே இல்ல” அப்படின்னு நிலா சொல்லி முடிச்சப்ப புவனா ஏதோ ஒரு மிருகத்த பாக்கற மாதிரி வித்தியாசமா பாத்துக்கிட்டு இருந்தா.

“எப்படி இத்தன வருஷம் பொறுத்துகிட்டு இருந்தடி. காதலிக்கறன்னு சொல்லி ஒரே வாரத்துல தோழியா மாத்துன ஒரு ஆளுக்காக அதோட அவ்ளோ வலியையும் உள்ள வாங்கிட்டு இருந்திருக்க… அப்பாடா ஒரு வழியா ஓச்சியே அதன்னு” புவனா அத ஒரு சாதனையா சொல்லிக்கிட்டு இருந்தப்ப நிலா எந்த உணர்வும் இல்லாம திண்ணையில உக்காந்து காலாட்டிக்கிட்டே இருந்தா.

“பாத்தியா இதுக்குதான் இந்தக் கதைய நான் யார்கிட்டயும் சொல்றதே இல்ல.எனக்கு இருந்த இதயப் பிரச்சினையும் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சரிபண்ணியாச்சு. அதல்லாம் தான் உனக்குத் தெரியுமே”.

“ஆமா ஆமா தெரியும். ஹோ அதுக்காகத்தான் இப்படி முடியோட மாப்பிளை தேடிக்கிட்டு இருக்கியா?”

“அய்யோ பழி எடுக்கலாம் இல்லடி. சின்னவயசுல இருந்தே அப்படி இருக்கறவங்க எனக்குப் பிடிக்கும். முடி இல்லனாலும் மனசு இருக்கேன்னு இத எனக்குப் பிடிச்சுது. ஆனா அதோட மனசுல என்ன எவ்ளோ மோசமா நினைச்சி வச்சிருந்திருக்கு. தான் ஒரு பொண்ண ஏமாத்திட்டோமேன்ற குற்ற உணர்ச்சியில இருந்து தப்பிக்க அது என்ன சுமையா தூக்கிட்டு திரிஞ்சிதா எனக்கு இப்ப தோணுது. எனக்கே அருவருப்பாவும் கஷ்டமாவும் இருந்துச்சுடி. என்னமோ போது.

ஆனா அதுக்காகலாம் முடியோட மாப்ள தேடல. நல்ல மனசு எதுன்னு தேடிக்கண்டு பிடிக்க இங்க கஷ்டம். இனி யாரையும் காதலிக்கவும் விருப்பம் இல்ல. வரவன் மனச ஒரேநாள்ல புரிஞ்சிக்கவும் முடியாது. குறைஞ்சபட்சம் முடியோடாவது இருக்கட்டுமேன்னு இருக்கு. அதனாலதான் இப்ப முடி இருக்கறது என்னோட லட்சியமா ஆயிருச்சு”.

“நல்ல லட்சியம்டி. உனக்கு பின்னடி இவ்ளோ பெரிய கதை இருக்கும்னு பாத்தா முடிக்குப் பின்னடி இருக்கற ஒரு கதைய சொல்லிட்டுப் போற”.

“சரி எனக்கு ஒரு சந்தேகம் நிலா”.

“என்னடி சந்தேகம்”

“ஆம்பளைக்கு முடி இல்லனா சொத்து வீடு வாசல் வேலன்னு ஏதேதோன்னு சொல்லி சம்மதிக்க வச்சிராங்க. பொண்ணுங்க சொட்டையா இருந்த எந்த ஆம்பளையாவது கட்டிக்குவானாடி”ன்னு புவனா கேட்டா.

“முடி கீழ வரைக்கும் தொங்கணும்றதுதான் ஆம்பளைங்களோட ஆசையே. அப்படி இருக்கறப்ப எந்த ஆம்பளடி கட்டிக்குவான். ஆம்பளை பொம்பளை இன்றதே இங்க ஒரு சிந்தனைதான். எல்லாமே ஆம்பளைங்களால உருவாக்கப்பட்டது. முடி இருந்தாலும் இல்லனாலும் அவன கட்டிக்கணும். முடி இல்லாம போன வாழ்நாள் பூரா ஒரு பொண்ணோட நிலமை”…

“யோசிக்கவே முடியலடி. சரி விட்டுருவோம்”. புவனா நான் வந்து ரொம்பநேரம் ஆச்சு. அம்மா தேடுவாங்க கிளம்பறன்.

சிலநாட்கள் கழிச்ச பிறகு நிலாக்கிட்ட அவ அம்மா கலா “என்னடி இப்ப சந்தோஷமா. முடி நல்லா நெத்தி வரைக்கும் வந்து விழுற மாப்பளையாவே கிடைச்சிட்டான். பொதுவா முடி இல்லனாதான் அறிவு அதிகம்னு சொல்லுவாங்க. ஆனா நீ அறிவு வேணாம். முடிதான் வேணும்னு அடம்பிடிச்ச பாரு. என்னமோ போ”.

“இப்ப ஒனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காதுன்னு நம்புறன். தட்டுலாம் மாத்தியாச்சு. கல்யாணத்தோட முதல்நாள்லயே மண்டபத்துல நிச்சயம் வச்சிகலாம்ல. இல்ல தனியா நிச்சயம் வக்கணுமான்னு”கலா கேட்டப்ப போம்மா “அவரோட நான் வாழவே ஆரம்பிச்சுட்டன் மனசுல. இப்ப போய் நிச்சயம் கிச்சயம்னு பேசிக்கிட்டிருக்கன்னு சொல்லி அப்படியே தூங்கிப் போனா”.

காலையிலலேயே நிலாவுக்கு அவன்கிட்ட இருந்து ஒரு போன். “நிலா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்”.

“என்ன சொல்லுங்க”.

“இல்ல நேத்து இரவு ஒரு கனவு”.

“என்ன கனவு ஏன் இவ்ளோ பொறுமையா பேசறீங்க”..

“திடீர்னு ஒருநாள் நான் தூக்கத்துல இருந்து முழிச்சு பாக்கறன். மண்டையில இருந்த ஒரு பக்கம் முடி தலைக்காணி மேல கிடக்குது. பதறியடிச்சு எந்திரிச்சுப் போயி பாத்ரூம்ல வாஷ்பேசின்கிட்ட நின்னு தலையில அள்ளி தண்ணி ஊத்தினா மிச்ச முடியும் கீழ கொட்டுச்சு. முக்கா வழுக்க தலை. ஏன் இப்படி எனக்குக் கனவு வரணும். ஒன்னுமே புரியல”.

”என்னது மண்ட வழுக்கையான கனவா”? என்று நிலா அதிர்ச்சியடைந்து கேட்க…

“அது மட்டும் இல்ல இன்னோன்னு”.

”இதுவரைக்கும் நான் கண்ட கனவு எதுவுமே எனக்குப் பலிக்காம போனதே இல்ல நிலா”….

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நிறம் உதிர்க்கும் பட்டாம் பூச்சிகள்

  1. எதார்த்தத்திலிருந்து விலகத்துடிக்கும் பெண்ணின் மனம் மூலம் குறியீட்டு உத்தியின் வாயிலாக ஆண் மைய சமூகம் வகுக்கும் எழுதப்படாத சட்டங்களுக்கு பெண்ணின் குரல் நிறம் உதிர்க்கும் பட்டாம்பூச்சியாகிவிடுகின்றன…

    எதார்த்தை பதிவு செய்வதில் உங்கள் சிந்தனை மாறுபட்ட சிந்தனைகளை பதிவு செய்வது சிறப்பு ஐயா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *