பவள சங்கரி

விழித்தெழுக என் தேசம் – நூல் மதிப்புரை

குறிப்பிடத்தக்க அறிவியல் தமிழ் கட்டுரை வல்லுநர்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கக்கூடியவர் பெருமதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்கள். நம் வல்லமை (www.vallamai.com) இணைய இதழில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து தம் படைப்புகளை சிறப்பாக வழங்கிக் கொண்டிருப்பவர். ஓய்வில்லாத அவர்தம் உழைப்பைக் கண்டு எப்போதும் எனக்கு ஆச்சரியமும், சிறு பொறாமை கூட உண்டு. பல்வேறு சேவைகளையும் அமைதியாகச் செய்து கொண்டிருப்பவர். குறிப்பிட்டு சொல்லும்படியான அற்புதமான பல நூல்களை எழுதிக் குவித்துக்கொண்டிருப்பவர். நாட்டுப் பற்றும், சமூக நலனில் அதீத ஈடுபாடும் கொண்ட நயமிகு நல்லோர் இவர்தம் படைப்புகள் அனைத்தும் மனித நேயம் சார்ந்தவையாகவே இருப்பதைக் கண்டிருக்கிறேன். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என அனைத்துத் தளங்களிலும் சரளமாக இயங்கிக்கொண்டிருக்கும் சிறந்ததொரு முற்போக்கு இலக்கியவாதி. தனக்கு நியாயம் என்று பட்டதை துணிவாக உரத்துச் சொல்லக்கூடிய நேர்மையாளர்.

“விழித்தெழுக என் தேசம்” என்ற தலைப்பைப் பார்த்தவுடன் இந்நூலின் போக்கை எளிதாக உணரக்கூடும். பிறந்த தாய் நாட்டின் மீதும், மொழியின் மீதும், மக்கள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கையும், அன்பும், முன்னேற்றத்தின் எதிர்பார்ப்பும் கொண்டிருப்பவர்.

‘எங்கள் பாரத தேசம்’ என்ற இந்த ஒரு கவிதையே ஒரு பானை சோற்றின் ஒரு சோற்றுப் பதமாகக் காணமுடிகின்றது.

“ஒன்று எங்கள் தேசமே
ஒருமைப் பாடெமது மோகமே
உதவி செய்தல் வேதமே
உண்மை தேடலெம் தாகமே
கண்ணியம் எமது பண்பியல்”

இசைநயமும், அழகிய சொல் வளமும் ஒருங்கே அமையப்பெற்ற படைப்புகள்.
தாம் பிறந்த மண்ணை மட்டுமா வாழ்த்தி வணங்கி அமைகிறார்? வாழ்ந்து கொண்டிருக்கும் கனடா நாட்டு மண்ணின் மீதும் அவர் கொண்டிருக்கும் மதிப்பும், பற்றும் கனடா தேசிய கீதத்தை நமது தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளதின் மூலமும், தனிப்பட்ட கவிதை இயற்றியுள்ளதன் மூலமும் அறிய முடிகின்றது.

இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகள், பீட்டில்ஸ் இசைக்கீதங்கள், கலீல் ஜிப்ரான் கவிதைகள் என அனைத்து மொழிபெயர்ப்புகளும் என் மனம் கவர்ந்தவை.

போதி மரம் தேடி – கண்டறிந்து கவிமூலம் நம்மையும் அங்கே அழைத்துச்செல்லும் வல்லமையும் பெற்றவர்!

எளியோரும் அறிவியல் அற்புதங்களிலும் அதிசயித்து நிற்கும் வகையில் மிக எளிய சொற்கள் மூலம் அழகுக் கவிகள் புனைந்திருக்கும் கவிஞர் இவர்போல் இன்னொருவர் உண்டா என்பதே ஐயம்தான்.

இத்தகைய பற்பல பெருமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஐயா அவர்கள் இன்னும் பல்லாண்டு நம்முடன் வாழ்ந்து மேலும் பல நல்ல படைப்புகள் வழங்குவார் என்று நம்புவோமாக. அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான உடல் நிலையையும் இறையருள் வழங்க வேண்டும் என்று உளமார பிரார்த்தனை செய்கிறோம்.

அன்புடன்
பவள சங்கரி
நிர்வாக ஆசிரியர், வல்லமை இணைய இதழ்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “விழித்தெழுக என் தேசம்!

  1. குடத்து விளக்காக இருந்த என் கவிதைப் படைப்புகளை எடுத்துக் காட்டி, வலை உலக வல்லமை வாசகருக்குக் கலங்கரை விளக்காக, அறிமுகம் செய்த வல்லமைத் தெள்ளுதமிழ் ஆசிரியர் திருமிகு பவள சங்கரி திருநாவுக்கரசு அவர்களுக்கு எனதினிய பணிவான நன்றி.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *