மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண்…. அவுஸ்திரேலியா

கருணைகூர் முகங்கள் கொண்ட
கந்தனை நினைக்கும் இந்த
பெருமையாம் விரதம் தன்னை
உரிமையாய் எண்ணி நிற்கும்
அடியவர் ஒன்று கூடி
அன்னத்தை ஒறுத்து நிற்பர்
அவருளம் புகுந்து கந்தன்
அருளொளி காட்டி நிற்பான் !

கந்தனை நினைக்கும் இந்த
சஷ்டியாம் விரதம் தன்னை
சிந்தையில் இருத்தி வைத்து
சீலமாய் இருக்கும் மாந்தர்
வந்திடும் வினைகள் எல்லாம்
மறைந்துமே போகச் செய்ய
எந்தையாம் கந்தன் அப்பன்
என்றுமே உதவி நிற்பான் !

ஆணவம் என்னும் மாயை
சூரனாய் தோன்றி நிற்க
அரன் மைந்தன் கந்தனையன்
ஆற்றலால் உய்வு பெற்றான்
அழிக்கின்ற பாங்கில் கந்தன்
ஆணவம் போக்கி ஆங்கே
அறிவினை உணர்த்தி நின்று
அருளினை அளித்தே நின்றான் !

கந்தனை நினைத்து நாங்கள்
சஷ்டியை பிடித்து நின்றால்
நிந்தனை கொடுத்து நிற்கும்
நிட்டூரம் ஒழிந்து போகும்
கொண்டிடும் எண்ணம் எல்லாம்
குறைவின்றி நடந்தே தீரும்
எந்தையாம் கந்தன் பாதம்
எல்லோரும் பணிந்தே நிற்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *