பழனி  (திருவாவினன்குடி)

 

பழமெதற்குப்  பூவெதற்கு பழனிமலை ஆண்டவனே

பழமாகக் கனிந்து தரணியெல்லாம் மணப்பவனே

நிழலாக நின்றாலும் நினைவெல்லாம் நிறைபவனே

நிசமாக வருவாயோ நின்னருளைத் தந்திடவே ?

 

பாலெதற்குத் தேனெதற்கு பழனிமலைப் பாலகனே

வேலெடுத்த உனைக்கண்டால் வேதனைகள் மறையாதோ?

சொல்லெடுத்துப் பாட்டிசைத்து உனையழைக்க முருகா

சொல்லாமல் நீவருவாய் சோதனைகள் விலக்கிடவே !

 

தோள்சுமக்கத் துணைதேடி உனைநாடும் காவடிகள்

கண்ணிமையில் உனைநிறுத்தித் தேடிடுமே சேவடிகள்

பவனிவரும் பழநியிலே பொங்கிவரும் பால்குடங்கள் 

பாசத்துடன் அணைத்திடுவாயே பக்தர்களை பழனியப்பா !

 

தோகைமயில் சேவல்கொடி ஏதுமின்றி நின்றாய்

போகமில்லா வாழ்வென்றும் புதிதென்று சொன்னாய்

சோகமெல்லாம் நீங்கிடுமே சொல்லிடவே உன்பெயரை

போதகனே சாதகனே புவிக்காக்கும் வேலவனே !

 

அவ்வையின் தமிழ்கேட்க ஓடிவந்த வடிவேலா

அகத்தியனுக்கு அருள்புரிந்த ஆனந்தத் தமிழ்வேளே!

ஆண்டியாகி நின்றாலும் அளவில்லா அருட்சுனையே

ஆவினன்குடி மலையப்பா அருள்வாயே குறைவின்றி !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *