-பேரா. ம. பரிமளா தேவி

உன்கூட எல்லாம் மனுசன் பேசுவானா என்று கேட்டுவிட்டு போனைத் துண்டித்தான் தமிழ். இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஒரு வார்த்தை தெரியல. குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு அம்மாக்கிட்ட இருந்து போன் வந்ததுமே யாழினிக்குப் பதட்டம் அதிகமாயிடுச்சி. நேத்துதான் கொண்டுபோய் விட்டுட்டு வந்து இருந்தாள். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்னால சென்னை வரைக்கும் போக வேண்டி இருக்கு. காலையில போனா பத்து மணிக்குள்ள வந்துரமுடியும். இவதான் டீம் லீடா் வேறயாரையும் அனுப்ப முடியாது. இத எப்படி சொல்றதுன்னு தெரியாம பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

என்னங்க ..லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் திரும்பிப் பார்த்தான். ம்… இப்ப இயல்பாதான் பாக்குறானா? இல்ல கோபமா இருக்கானான்னு ஒன்னுமே புரியல யாழினிக்கு.

நாளை ஆபிஸ்ல மீட்டிங்..

நாளைக்கா…

சனிக்கிழமை..

செகண்ட் சாட்டா்டே கூட லீவ் இல்லையா.

ம். இல்ல.

அப்போ இந்த வாரம் கூட வீட்ல இருக்கமாட்டியா என்றான்.

இல்ல. முக்கியமான மீட்டிங் பாஸ் என்னத்தான் போகச் சொல்லியிருக்காரு என்றாள்.

குழந்தையை யாரு பாத்துக்கிறது.

நீங்க பாத்துக்கங்க.

இல்ல என்னால பாத்துக்க முடியாது . உங்க அம்மாவ பாத்துக்க சொல்லு…

தமிழ் அப்படி சொன்னதுமே அவளுக்கு ஏனோ கடுப்பா இருந்தது. வருண் அவ்ளோ அடம். செல்லம். அவன் வேகத்துக்கு அம்மாவால ஈடுகொடுக்கவே முடியாது. எல்லா குழந்தையைப் போலவும் வருண் இல்ல. ஒவ்வொரு முறையும் சாப்பாடு கொடுக்கவே அவ்ளோ கஷ்டமா இருக்கும். துறுதுறுன்னு ஓடிட்டே இருப்பான். அம்மா சொல்வாங்க இவன் ரொம்ம சுட்டியா இருக்கான் பாப்பா. சொல்லறத கேக்கவே மாட்டேங்குறான். நிறைய அடம் பிடிக்குறான். எனக்கும் வயசாகுதில்ல. ஸ்கூல் போனதும் நானேகூட பாத்துகிறேன். இப்ப நீயே கொஞ்சநாள் பாத்துகோன்னுவாங்க. சில நேரங்களில் கோபம் தரக்ககூடியதா இருந்தாலும் அதுலயும் உண்மை இருக்கத்தானே செய்யுதுன்னு தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்வாள். பாவம் அவங்களுக்கும் ஓய்வு வேணாம்மா. பதினைந்து வயசுல இருந்து கஷ்டப்பட்டுத்தான் யாழினியைப் படிக்கவைச்சு கட்டிக்குடுத்தாங்க. எவ்ளவோ ஓடி ஓடி உழைச்சாச்சு. கருப்பை பிரச்சனை முட்டிவலின்னு ஒவ்வொரு மாசமும் அவ அம்மா பட்ட வலியெல்லாம் பக்கம் இருந்து பாத்தவ. பொண்ண கட்டிக்குடுத்தப் பின்னாடியாச்சும் நேரத்துக்குப் சாப்புட்டு ஒய்வாக இருக்க முடியல. அண்ணன் குழந்தை தம்பி குழந்தன்னு எல்லாத்தையும் பாத்துக்கிறாங்க. தன்னால கூட்டிவந்து பாத்துக்க முடியலன்னு குற்றவுணா்ச்சியே அவளுக்கு. என்னதான் அம்மாவுக்குத் தேவையைப் பாத்துபாத்துச் செஞ்சாலும் அம்மா ஆசைப்படறதெல்லாம் பொண்ணு சோ்ந்தாப்பல நாலுநாள் கூட இருக்கனும். போனமுற வந்து போனதிலிருந்து இப்ப வரைக்கும் என்ன நடந்ததுன்னு சொல்ல நிறைய கதைகள் இருக்கும். அதெல்லாம் அம்மா சொல்ல சொல்ல ம் கொட்டிட்டே கேக்க யாழினிக்கு ரொம்ப பிடிக்கும். தன் கை சாப்பாடே பிடிக்கல பாப்பான்னு சொல்வாங்க. உன் கையால எதாச்சும் செஞ்சிக்குடுன்னு கேப்பாங்க. அவ்ளோ ருசியா செய்யலன்னாலும் ஆசையா செய்யறதால நிஜமாவே அவ்ளோ நல்லா இருக்கும்.

யாழினிக்கு நல்லா வாசிக்கிற பழக்கம் உண்டு. அது அவ அம்மாக்கிட்ட இருந்து வந்தது. அம்மா அந்தக் காலத்துலே பத்தாவது படிச்சவங்க.  தனக்கு வந்த அரசாங்க வேலையை விட்டுட்டுக் குழந்தை கணவன்னு வீட்டோட இருந்துட்டாங்க. அப்ப தன்னோட பொழுதுபோக்குன்னா அது ஒன்னே ஒன்னு புத்தகம் மட்டும் தான். ஊருல நூலகம் எல்லாம் கிடையாது. அஞ்சு கிலோ மீட்டா் பஸ்ல போய் ராணி குமுதமுன்னு வாங்கிட்டு வந்து ஒரு வாரம் வச்சு வச்சு படிப்பாங்க. புத்தகத்த அம்மாவுக்குத் தெரியாம எடுத்துப் படிச்சிட்டு மறைச்சு வைச்சுருவா யாழினி. படிக்கிற பிள்ளைக்கு எதுக்குக் கதை புத்தகம். ஒழுங்காப் படின்னு சொல்வாங்க. ஆனா எல்லாத்தையும் படிச்சிட்டு இருந்ததுனாலதான் தனக்கு எப்பயெல்லாம் ஓய்வுகிடைக்குதோ அப்பெல்லாம் புத்தகம் படிக்கத்தோனும். அது இப்ப வரைக்கும் தொடர்வதற்குக் காரணம் அம்மாதான்.

அவங்க பேரக்குழந்தைகளோட நம்ம குழந்தையைப் பாத்துகறதுக்கு என்ன உங்க அம்மாவுக்கு. இங்க வாங்கன்னு கூப்புட்டா ஒருமுறையாச்சும் வராங்களா. டவுன்ல எல்லாம் வந்து இருந்து பழக்கம் இல்லைங்கறாங்க. நீண்ட பெருமூச்சு விட்டு.. சரிங்க போன்ல ஒரு வார்த்தைச் சொல்லிடுறேன். நீங்கப் போய் விட்டுட்டு வந்துருங்க என்றாள்.

விடியற்காலையிலே கிளம்பனும். காலையிலே டிபன் செய்யவா. வேணா நான் பாத்துகிறேன். அப்பாடா இன்னிக்காவது திருவாயில் இருந்து சமைக்க வேணாம்னு வந்துச்சே. அதுவே பெரிய ஆறுதலா இருந்தது. தமிழுக்கு நிறைய கொள்கை எல்லாம் இருக்கு. அது என்னன்னா இவ்ளோ படிச்சிட்டு யாராச்சும் வீட்ல இருப்பாங்களா. பொண்ணுங்களும் வேலைக்குப் போகனும். அப்படி போகும்போது விடியகாலையில எந்திரிக்கனும். வாசல் தெளிச்சு கோலம் போடனும். பெட் காப்பி கொடுக்கணும். வேலைக்காரி வைக்கக்கூடாது. எல்லா வேலையும் செஞ்சுட்டுத்தான் வேலைக்குப் போகணும். சமைக்கும்போது மாமனார் மாமியார் என்ன சாப்பிடுவாங்களோ அததான் காலையில செய்யணும். மத்தியானதுக்கு அவங்களுக்குச் சாப்பாடும் செய்து வைக்கணும். ஏன்னா மாமியார் சமைக்கமாட்டாங்க. வேலைக்குப் போறவங்க எல்லாம் சமைக்காம தான் போறாங்களா என்பான். அந்தச் சாப்பாடு வருணுக்குத் தமிழ்தான் ஊட்டுவான். ஊட்டும் போதே திட்டிட்டே ஊட்டுவான். அரிசியை இன்னும் குழைய விட்டிருக்கலாம் இல்ல. அரைமணி நேரமாச்சும் அரிசியை ஊர வைக்கணும் இல்ல. குக்கா்ல செய்யாம நல்லா வடிக்கணும். அதயும் எடுத்து மிக்சில போட்டு அரைச்சு கொடுக்கனும். அப்போதான குழந்தைக்குச் சக்தி கிடைக்கும்னு தினமும் பாடுற புராணத்தை முடிச்சிருவான். ஏழரை மணி பஸ்ஸ பிடிக்க நைட்டு முடிக்காம விட்ட எல்லா வேலையும் செஞ்சிட்டு டிபன் பாக்ஸ் கையோடு ஓடிப்போய்தான் பஸ்ஸயே பிடிப்பாள் .அப்பவும் சொல்வான் கொஞ்சம் முன்னாடி எழுந்தா என்ன. ரிலாக்ஸா வேலையை முடிச்சிட்டுப் போலான்னு இலவசமா புத்திமதி தருவான்.

யாழினிக்குச் சின்னச் சின்ன கனவு எல்லாம் இருந்தது. காலையில குளிச்சு முடிச்சிட்டு நல்ல பில்டா்காபி போட்டு அத ஆவிபறக்க ஊதி ஊதி நிறைய நேரம் குடிக்கணும். காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கிறதுல இருக்கற சொகமே  தனிதான். காப்பி குடிக்கும்போது நாக்கு நுனியில சா்க்கரையோட சுவை இருந்துட்டே இருக்கும். காலையில டிபன் சாப்பிட வரைக்கும். அந்தச் சா்க்கரை எப்படி ஒவ்வொரு நாளும் சுவைதருதோ அதுபோல வாழ்நாள் முழுக்க வாழ்க்கையும் சுவையா இருக்கும்னு அவளுக்கு ஒரு நம்பிக்கை. வருண் வயித்துல இருக்கும்போதுதான் கண்டுபிடிச்சாங்க பெண்களுக்குப் பேறுகாலத்துல வர சா்க்கரை நோய் இருக்குன்னு டாக்டா் சொல்லிட்டாங்க. அவன் பொறந்ததும் இரண்டு மாசத்துல சா்க்கரை இல்லை. இருந்தாலும் அவளால தனக்குச் சர்க்கரை இருந்ததா. எப்படி இவ்ளோ வயசாகியும் தன் அப்பா அம்மாவுக்கு இல்லாத ஒன்னு தனக்கு எப்படின்னு யோசிக்கும் போதுதலையே வெடிச்சிரும் போலயிருக்கும். அப்ப இருந்து இப்ப வரைக்கும் காபில சுகா் இல்லை. காபியைக் குடிச்சிட்டே நியூஸ் பேப்பரை காலையில படிக்கணும். ஆபிஸ் போயிட்டு வந்து நைட்ல படிக்கறதல என்ன சுவாரசியம் இருக்கு. சமைக்கும்போது இளையராஜா பாட்டுக் கேக்கணும். இல்ல தானாச்சும் பாடிட்டே சமைக்கணும். ஆனா அப்படி எதுமே நடக்காது .ஒவ்வொரு நாளும் காலையில என்ன சமைக்கணும் மத்தியானம் என்ன சமைக்கணும் குழந்தைக்கு என்ன செய்யணும் ஆபிசுக்கு என்ன மெயில் அனுப்பணும்.. ஆபிஸ்ல வொர்க் எப்ப முடிக்கணும். மூளைக்குள்ள அவ்ளோ வேகமா வேலைகள் ஓடிட்டே இருக்கும்.

ஆபிஸ்ல வேலை முடிச்சிட்டுச் சோர்ந்து வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கத்தோணும். தெருவிலே மாமியார் பாத்துட்டு வருணு தங்கம் அம்மா வந்துட்டாங்க பாருன்னுவாங்க. அவங்க டியூட்டி டைம் அதுவரைக்கும்தான். என்கிட்ட கொடுத்துட்டுச் சீரியல் பாக்கப் போயிருவாங்க. அவங்களயும் கொற சொல்ல முடியாது. குழந்தையோட கொஞ்சநேரம் இருந்துட்டு மறுபடியும் பாத்திரம் தேய்ச்சு வீடு கூட்டி நைட்டுச் சாப்பாடு எடுத்து வைச்சு சாப்பிட உக்காரும் போது நைட்டுப் பத்தாயிரும்.

எவ்வளவு சோர்வா இருந்தாலும் அடுத்த நாள் ஆபிஸ்ல என்ன செய்யணும் என்ற நெனப்பு ஒருபுறம் இருக்க, பெண்டிங் வொர்க் எல்லாம் முடிக்க நைட் எப்பவுமே பன்னிரண்டு ஒரு மணி ஆகும். தினசரி வாழ்க்கை இதுதான். இதுலஒரு மாற்றமும் இல்லை. இதவிட நிறைய சோர்வு என்னன்னா யாழினிக்கு எதையும் தமிழ்கிட்ட சோ் பண்ண முடியாது.

ஆபிஸ்ல என்ன நடந்தாலும் அத உடனே வந்து சொல்லும் போதும் சரி அப்படியா அத தவிர வேற ஒன்னும் வராது.

ஏதாவது பிரச்சனை வந்தா அத ஏன் என்கிட்ட சொல்ற வாசலுக்கு வெளியே செருப்ப கழட்டும்போதே எல்லாத்தையும் விட்டுரணும். அதையும் தாண்டி அலுவலகத்தில் சில நுண்ணரசியல் செயல்களையெல்லாம் தாங்காம சொல்லும் போதும் நீ தைரியமா இருக்கணும் வேலையை இன்னும் நல்லா செய்யின்னு சொல்லிட்டுப் போயிருவான். இதயெல்லாம் சொல்லாமலே அவளுக்கே தெரியணும். அவளுக்கு எப்பவுமே தோணும் தான் சோர்வா இருந்தா தோள்சாய அவன் இருக்கணும். தலையை வருடிக்கொடுக்கணும். உனக்கு நான் இருக்கன்னு சில வார்த்தைகள். இப்படிப்பட்டஆசைகள் எதுவுமே நடப்பது இல்லை.

சமைக்கப்போறீங்களா. நான்மட்டும் தான ஓட்டல்ல வாங்கிறேன். பொதுவாக ஓட்டலில் சாப்பிடபோலாம்னாலோ இல்லை போனாலோ பெரிய பிரசங்கம் பண்ணுற ஆளு. மாசத்துக்கு ஒரு முறை போனாக்கூட ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு நல்லது இல்ல. எப்பவும் வீட்டுச் சாப்பாடுதான் நல்லதுன்னு சொல்வான். அப்படியே போனாலும் உனக்கு என்ன வேணுமோ அதஎல்லாம் ஆா்டா் செய். லேட் பண்ணாத எனக்கு வேலை இருக்கு உடனே கிளம்பணும்னு சொல்லும் போதே சாப்பிடற ஆசையே அவளுக்கு விட்டுபோயிரும். தினமும் நான் சமைச்சு நானே சாப்பிடுறேன். ஒரு டேஸ்ட்டுக்கு சேஞ் பண்ணிசாப்பிட்டா நல்லா இருக்குன்னுதானே பொண்ணுங்க வராங்க . அதுக்கூட புரியாதா இவங்களுக்கு எல்லாம் என்று மனசுக்குள்ளத் தோணும் யாழினிக்கு.

ஓட்டலுக்குப் போயிருந்தபோது முழுக்க தன்னுடைய பார்வையால் சுழலவிட்டிருந்தாள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனா். உடனே தான் பார்த்த படத்தில் ஒரு காட்சி அவள் நினைவுக்கு வந்தது. நாயகனும் நாயகியும் சாப்பிட ஓட்டலுக்குப் போறாங்க. இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு வந்த கிராமத்துப் பெண்ணாகக் காட்டியிருப்பாங்க. சாப்பிட உட்கார்ந்ததும் எல்லோரையும் பார்க்கும்போது நிறைய பெண்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். அய்ய இந்த ஊா்ல பொம்பளைங்க சமைக்கமாட்டாங்களா.. இங்க வந்து சாப்பிடுறாங்க. எங்க ஊா்ல எல்லாம் கழனி வேலைக்குப் போற பொம்பளைங்க எல்லாம் தூக்குச் சட்டியில சாப்பாடு கொண்டு போவாங்க என்பாள். இப்படி எல்லாம் யோசிக்கறவன் மட்டும் என் கையில் கிடைச்சான்னா கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் போயிருவேன். என்ன வாழ்க்கை எங்க போனாலும் எதப்பாத்தாலும் ஊா்ல இருக்கிறவன் எல்லாம் பொண்ணுங்களுக்கே கருத்துச் சொல்லிட்டு இருக்காங்க. சூடான பேல்பூரியை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டே கொண்டே தமிழைப் பார்த்தாள். அவன் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தானோ அப்படித்தான் இப்பவும் இருக்கானா என்கிற கேள்வி எழுந்தது.

அலுவலகத்தில் போன வாரம் பெண்கள் தினத்திற்குப் பேச விருப்பம் உள்ளவர்கள் பெயரைப் பதிவு செய்ய சொல்லியிருந்தாங்க. எல்லாரும் சொன்ன ஓரே பெயர் யாழினி. அவங்க பேசுனா சரியா இருக்கும் எனும் பதில் வந்தது.  யாழினியைப் பொறுத்தவரைக்கும் பெண்ணுக்கான இடத்தை யாருக்காகவும் விட்டுத்தரமாட்டாள். பெண் அப்படிங்கறதாலேயே சலுகையை எதிர்பார்க்க கூடாது. பிறருடைய அனுதாபத்தை விரும்பாதவள்.

காலையில ஐந்து மணிக்கு எழுந்து டிபன் செஞ்சு லஞ்ச் பேக் பண்ணி பசங்கள ஸ்கூலுக்கும் கணவனை ஆபிஸ்க்கும் அனுப்பிட்டு எனக்கு டயா்டா சேச் சே நான் தான்… லைன் ஹனி குடிக்கறனே.. டீவில ஒரு பெண்  விளம்பரத்துல சொல்றதும்  பாத்ததும் இதை ஏன் ஆண் சொல்றது போல எடுக்கறதில்ல.. யோசிட்டே பெண்கள் தினத்துல என்ன பேசலான்னு குறிப்புகளைத் தயார் செய்தபடி இருந்தாள். தனக்கு எப்பவும் பிடித்துப் பிளாக் கலா்ல காட்டன் சேரியைக் கட்டிகொண்டு ரொம்ப நேரமாகக் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துட்டே இருந்தாள்.  தான் கல்லூரியில் படித்த நாட்கள் எல்லாம் கண் முன்னாடி வந்தது. அப்போவெல்லாம் பெண்கள் படித்தால் வேலைக்குப் போனா  சுயமரியாதையுடனும் யாருக்கும் அடிமை யில்லாமலும் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள். ஆனா படிப்பு வேலை அவள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக இருக்குமே ஒழிய அவளுக்குகான சுதந்திரவெளியைச் சுயமரியாதையைக் கொடுத்துறாதுன்னு இப்பத்தான் புரிஞ்சது.

நீண்ட பெருமூச்சுவிட்டு புன்னகையோடு அனைவருக்கும் வணக்கம் என்றாள். உங்க எல்லாருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன். ஏன் ஒரு நாள் மட்டும் கொண்டாடணும் எல்லாம் நாளும் அவர்களுக்குக்கானது தான் என்று முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களுக்கும், பெண்கள் தினத்துல கூட தான் பார்க்கும் எந்த பெண்ணுக்கும் வாழ்த்து தெரிவிக்க தயங்குற பிற்போக்கான எண்ணம் கொண்டர்வா்களும் இன்று ஒரு நாள் தனக்கானது என்று மகிழ்ச்சியாக இருக்கின்றவா்களும் முதலில் இந்தத் தினத்திற்கான முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பேச்சின் முடிவாக “நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுவிக்காமல் மனிதகுல விடுதலை சாத்தியமல்ல என்ற லெனின் வாசகத்தையும் வீட்டு வேலைகளில் ஆணும் பெண்ணும் சமமாக ஈடுபட வேண்டும் என்பதைச் சோவியத் நாடு சட்டமாக்கியது குறித்தும் சொல்லிய பின்பு” நம்முடைய சிந்தனையில் மாற்றம் வந்தால் ஒழிய இந்த பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறி முடித்தாள்.

“வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை வைப்போமா எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கு, குழந்தையையும் பாத்துக்கணும் கஷ்டமா இருக்கு”.

“இப்பவே இவ்ளோ குண்டா இருக்க.  உன்னைப் போல வீட்டையும் பாத்துட்டு வேலையையும் செய்றவங்க யாருமே இல்லையா. கொஞ்சமாச்சும் வேலை செஞ்சு உடம்பைக் கொற”.

கோவத்துல தீபாவளிக்கு வாங்கிட்டு வந்து இருந்த மொத்த ஸ்வீட்டையும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்!

*****

கதாசிரியர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *