ஆறுபடை அழகா…. (6)
திருத்தணிகை
விண்ணசையும் மண்ணசையும் கோளசையும் கண்ணசைவில்
வேலசையும் வேகத்தில் விதியசையும் நல்லிசையாய்
பண்ணிசைத்துப் பாடிடவே உன்புகழைப் பேரழகா
காற்றிசைக்கும் தென்றலாய் காலமெல்லாம் மாறாதோ ?
பணியேதும் இனியில்லை உன்னருகில் அமர்ந்திடுவேன்
தணிகைமலைப் புகழ்பாடி தனிப்பொழுதைக் கழித்திடுவேன்
மணியோசை ஒலித்துவிடும் திருக்கோவில் வாசலிலே
அணிசெய்த உன்னழகை அனுதினமும் பார்த்திருப்பேன் !
அகத்தியனுக்கே தமிழ்த்தந்தாய் அகிலமெல்லாம் பயனுறவே
அகமுவந்து வாசுகிக்கே அருள்புரிந்தாய் நோய்தீர்த்து
அசுரனின் சக்கரத்தை அன்புடனே நெஞ்சிலேநிறுத்தி
அகிலமெல்லாம் காத்துநின்றாய் ஆறுமுகனே அடைக்கலமே !
மனத்துள்ளே கோயில்கட்டி மலையப்பா அழைத்துடுவேன்
எனக்குள்ளே நீயிருந்தால் இல்லையென்றும் எதிர்மறைகள்
குகைக்குள்ளே நீயிருந்த தவக்கோலம் போதுமய்யா
குடியிருக்க நீவருவாய் எனக்குள்ளே குருபரனே !
மலர்தூவி மாலையிட்டு மனதாரப் போற்றிவிட்டேன்
மறக்காமல் பாலோடுதேனும் பஞ்சாமிர்தம் படைத்துவிட்டேன்
மறைக்காமல் என்குறைகள் உன்னிடமே சொல்லிவிட்டேன்
மனமிரங்கி வாராயோ மனத்தினிலே ஆட்சிசெய்ய ?