வெண்ணிலை: பாலியல் சிக்கலும் பெண்களின் நிலையும்

0

-பேரா.ம. பரிமளா தேவி

முன்னுரை

பெண்ணின் ஆளுமை இதுவரை பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டு வந்த நியாயங்கள், உருவாக்கப்பட்டு வந்த மதிப்புகள், கற்பிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட புனிதங்கள், என்பனவற்றை அடையாளம் கண்டு விளக்குவது, பெண்ணின் சுயமான விருப்பங்கள், உணா்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இவற்றின் முறிவுகள் முதலியவை புனைவுகளில் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்வது. புனைகதை கால சிருஷ்டியே எனினும் சமுதாய மாற்றத்தை மாறும் சமுதாயத்தின் நிலையைக் காட்டும் வரலாற்றுச் சான்றாகவும் விளங்குகிறது. சிறப்பான கதைக்களங்கள் சமகாலச் சான்றாக வரலாற்றாசிரியராலும் சமூகவியலாளர்களாலும் போற்றப்படுகின்றது என்கிறார் கா.சிவத்தம்பி (நாவலும் வாழ்க்கையும், கா.சிவத்தம்பி. ப.20)

வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெண்களை மையப்படுத்தி எழுதியுள்ள தீராக்குறை, கிடந்த கோலம், தாய்மை, பாரம் சுமக்கிறவள், உள்ளிருந்து உடற்றும் பசி, வயிற்றுப்புருசன், வெண்ணிலை, பேரிளம் பெண், பேதை, கொடிகொம்பு, தொப்புள்கொடி முதலிய கதைகளில் பாலியல் சிக்கலும் பெண்களின் நிலையும் எவ்வாறு இடம்பெற்றுள்ளது  என்பதை பெண்ணிய நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்ணடிமை

தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும்போது குடும்பத்தைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்திக்  கொண்டு செல்ல வழியுண்டு. படித்த பெண்களை வீட்டிற்குள்ளே பூட்டிவைக்க தேவையில்லை என்கிற கருத்து நிலவி வருகின்றது. அவர்களின் உழைப்பிற்கு மதிப்பூதியம் அளிக்கப்படாமல் சம்பளம் இல்லாத வேலைக்காரியாகப் பெண்கள் இருந்தது அந்தக்காலத்தில். ஆனால் தற்போது பெண்களும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வேலைக்குச் செல்கின்றனா். ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்கின்ற குடும்பத்தில் இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் கணவன் மனைவியிடம் அதிகாரம் செலுத்துபவனாகவே இருக்கின்றான். ஆண் வீட்டு வேலைகளைச் செய்வது கேவலமானது, மற்றவர்களால் நகைப்பிற்குரியச் செயலாகப் பார்க்கப்படும் என்கிற எண்ணமானது அவனுடைய பொதுபுத்தியில் ஆழமாக பதிந்துள்ளது. மேலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் வீட்டில் வெளியில் வேலைகளைச் செய்வதற்கும் குழந்தைகளைப் பராமரிப்பது அவர்களுடைய வேலை என்றும் அவர்களின் அனுமதி இல்லாமலும் பாலுறவு வைத்து கொள்ளலாம் என்கிற எண்ணமும் தன்னை எதிர்த்து பேசக்கூடாதவளாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்ற நிதர்சன உலகத்தை அப்படியே கிடந்த கோலம் கதையில் காட்சிகளாக்கியுள்ளார்.

“கிடந்த கோலம்” என்கிற கதையில் பெருமாள், வனிதா இருவரும் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள்.  இருவருக்கும் வார விடுமுறை நாள் எவ்வாறு இருக்கின்றது என்பதை இக்கதையானது சித்திரிக்கின்றது.   திருமால் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பதுபோல் படுத்துக்கொண்டு ஆனந்த விகடனைப் புரட்டிக் கொண்டிருக்கின்றான் பெருமாள். சிலிண்டா் தெருவில் இருக்கு, தூக்கி கொண்டு வந்து உள்ள வைய்யி என்கிறாள்.  எப்பப் பார்த்தாலும் நய்யி நய்யின்னு சொல்லிக்கொண்டிருப்பியா, தூக்கி உள்ள வைச்சா வைய்யி இல்லைன்னா பேசாம கெட என்கிறான்.  அரைமுடி தேங்காயாவது வாங்கிக்கொண்டு வந்துகொடு என்கிறாள். சமைக்கும்போது குழாயில் தண்ணீா் வந்துவிடுகின்றது. குடத்தைக் கொண்டு போய் வரிசையில் வை என்கிறாள். தண்ணீா் பிடிக்கிறது, துணி துவைக்கிறது, கடைக்குப் போவது, பாத்திரம் துலக்குவது, சமைப்பது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, அடுத்த நாள் வகுப்பிற்கான பாடத்திட்டத்தை எழுதுவது என ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றாள் வனிதா.

தமிழ்ச் சமூகத்தில் குடும்ப அமைப்பானது பெண்கள் இல்லற பந்தத்திலிருந்து எளிதாக வெளிவர முடியாத குடும்பச்சிறையாக உள்ளது.  எந்தவொரு முடிவையும் பெண்ணால் எடுக்க இயலாத சூழலே உள்ளது. ஓர் ஆண் தன்னை எளிதில் இல்லற வாழ்விலிருந்து விடுவித்துக்கொள்ள அத்தனை நியாங்களையும் அவனுக்கான இடத்தையும் சுதந்தரத்தையும் வழங்கியுள்ளது. பெண் கட்டுப்பாடுகளுடன் வளா்க்கப்பட்டவள். அவளுடைய சிந்தனையும் குடும்பம், குழந்தை, சமூகம் என அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஈடுசெய்பவளாகவே இருக்கின்றாள் என்பதையும் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.

“கல்யாணம் செய்யாமலே இருந்து இருக்கலாம். ஏதோ சம்பாதிக்கிறோம் பிழைக்கிறோம் என்று வாழ்க்கையை ஓட்டியிருக்கலாம். யார் அழுதார்கள் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமென்று புலம்புகின்றாள்”. (பக்க எண் 75  ) குழந்தைகளை நினைத்தும் அப்பா அம்மாவை நினைத்தும் உடன் பணியாற்றுபவர்கள் தன்னைத் தவறாக நினைத்து விடக்கூடாது என்றும் அவள் துன்பங்களை அடிமனதில் போட்டு அமுக்கிவிடுகின்றாள்.

எதிர்ப்பு:

தன்னுடைய எல்லாம் துயரங்களையும் அடக்கிக்கொண்டு அவனோடு வாழ்ந்து வரும்போது இருக்கிற தலைவலியில இன்னும் தலைவலி எதுக்குன்னு அவனுடைய  கட்டாயப் பாலியல் உறவுக்குத் தயாராகின்றாள். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தினால் காண்டம் வாங்குவதிலும் கணவன் ஆர்வம் காட்டுவதில்லை.  இவள் கடைக்குச் சென்று காண்டம் வாங்கிவருகின்றாள் மிகவும் வருத்தத்துடன். சில சமயம் உருப்படியாகப் பல சமயம் சொதப்பலாக உறவுகொள்கின்றதைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரிக்கின்றாள். இறுதியாக “இதுக்கு மட்டும் தான் நீயா ” (பக்க எண் 77 ) என்று அவனைப் பார்த்துக் கேட்பதாக முடிகின்றது. பெண்ணை உடல் உறவினால் மட்டும் மகிழ்ச்சியா வாழ வைக்கமுடியும் என்கிற பிம்பத்தை உடைகின்றார். பெண்கள் பாலியல் உறவில் மட்டும் மகிழ்ச்சியை அடைவதில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைத் புரிந்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தினால் மட்டும் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும் என்கிற கருத்தை உணர்த்துகின்றார்.

ஒருதலைக் காதல்

சங்கீதா ஒன்பதாவது படிக்கும் போதே செபாஸ்டின் அவளைப் பின்தொடா்ந்து போயிட்டு இருந்தான்.  அவள் காதலைச் சொல்லவில்லை.   நீ இல்லன்னா நான் செத்துருவேன். சங்கீதாவைக் காதலிக்கிறன்னு சொன்ன இன்னொரு பையனை அடித்து உதைக்கிறான்.  அவள் நினைவாவே ஊா்ல சுற்றிக்கொண்டு இருக்கின்றான். ஒரு முறை இரத்தத்தில் காதல் கடிதம் எழுதிக்கொடுக்கின்றான்.  நாலு வருசமா அவள் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருந்தவன். அவளுக்கு என்னைய பிடிக்கலைன்னாலும் பரவால்ல. நான் அவளக் காதலிக்கிறேன்னு பிடிவாதமாக இருந்தவன். ஒருநாள் வேன் ஓட்டிட்டு போகும்போது மரத்தில் மோதி அடிபட்டு இறந்து போக   அவனுடைய நண்பர்கள் “ஆணவக்காரியால் உன் உயிர் உதிர்ந்தது.  நண்பர்களிடம் உன் நினைவுகள் என்றும் மலர்ந்தபடி இருக்கும்” என்னும் வால்போஸ்டர் அடிக்கின்றனா்.  அதைப்பார்த்து கண்ணீர் விடுகின்றாள்.

ஒருதலையாகக் காதலித்து கையைப் பிளேடால அறுத்து, இரத்தத்தில் கடிதம் எழுதியது, நீ இல்லையின்னா செத்துருவேன் என்று பயமுறுத்தியது, அடிதடி, சண்டை இது தான் சங்கீதா வாழ்க்கையையில நடந்தது.  பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது படிக்கின்ற பெண்ணைத் துரத்தித் துரத்தி காதலிப்பது என்பது பொருத்தமில்லாத ஒன்று.  பெண்ணின் மனம் காதலிக்கும் பக்குவத்தை அடையும் வயது என்பது வேறு.  மேலும் தான் காதலைச் சொல்லாத காரணத்தினால் தன் நினைவினால் தான் வண்டியை ஓட்டி இறந்துவிட்டான் என்று நம்புவது. ஆண் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலை.  செபாஸ்டின் நண்பர்கள் அடித்த வால்போஸ்டா் பெண்ணை அடிமையாய் பார்க்கும் ஆண்களின் பொதுப்புத்தியைக் காட்டுகிறது. சமூக அமைப்பானது தான் செய்யாத தவறுக்கும் குற்றவுணா்ச்சிக்கும் எவ்வாறு ஆளாக்குகிறது என்பதனை அறியமுடிகின்றது.

உள்ளிருந்து உடற்றும் பசி

இக்கதையானது வாசகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒன்று.  அண்ணன் தங்கைகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளான் என்று கதையில் வருகின்றது.  அண்ணன் தங்கை பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பது இக்காலக்கட்டத்தில் பொருந்தாக் காமமாகப் பார்க்கப்படுகின்றது. இக்கதையில் ஆசிரியர் அண்ணனின் பாலியல் உறவு குறித்து எந்த இடத்திலும் கண்டிக்கவில்லை. ஆதரித்தும் பேசவில்லை. மிக இயல்பான ஒன்றாக எழுதிச்செல்கின்றார். எப்படி மழையானது பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் உலகில் உள்ள உயிர்களை வருத்துமோ அதுபோல இவ்வுலகத்தில் உள்ளவா்களுக்கு உடல்பசி வருத்தும் என்பதைத் தெரிவித்து இருக்கின்றார். ஆறுமுகம் இரண்டு தங்கைகளைத் திருமணம் செய்துகொடுத்துவிட்டுத் தன் இளமைக்காலம் கழிந்த பின்பு மூன்றாவது தங்கையுடன் நள்ளிரவில் அவள் தொடை மீது படுத்து இயங்க ஆரம்பிக்கின்றான். இருட்டில் அவன் தங்கை பயத்துடன் மிகுந்த பேரதிர்ச்சிக்கு உள்ளாகின்றாள்.   அவன் மிகுந்த முனகலோடு அக்கா அவுங்க ஓங்கிட்ட வேற ஒன்னும் சொல்லலையா என்கிறான்.

ஆறுமுகத்தின் தந்தை நான்கு குழந்தைகள் பிறந்த பின்பு மற்றொருவன் பொண்டாட்டியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றான்.  அந்த துயரத்திலே அவன் அம்மா இறந்து விடுகின்றாள்.  சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து இரு தங்கைகளைத் திருமணம் செய்து வைக்கின்றான்.  அதற்குள் அவனுக்கு திருமண வயது தாண்டிவிட்டதன் காரணத்தினால் யாரும் பெண்கொடுக்கவில்லை.  மலர் தனக்குத்  திருமணம் வேண்டாம் என்றும் தன் அண்ணாவை தன்னை விட்டால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கும் பெண்.  தன் அண்ணனினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்ற தங்கைகள் என்பதாக முடிகின்றது.

மேலும் பெண்களுக்கு எப்பவும் உழைப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும்.   “கோடிஸ்வரன் வீட்டுக்குப் போனாலும் பொம்பளைக உழைச்சாதேன் கௌரி கஞ்சி”(பக்க எண் 129) என்கிறாள் மலா்.  பெண் உழைப்பைச் சுரண்டுதல், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தும் அவலத்தைக் இக்கதையில் காணமுடிகின்றது.

வெண்ணிலை

இந்த உலகினில் கைவிடப்பட்ட பெண்களின் சான்றாக வெண்ணிலையின் நாயகி இருக்கின்றாள். வேலைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல் வல்லுறவில் ஈடுபடுதல் என்பது மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கின்றது என்பதைப் பார்க்க முடிகின்றது.   பெண் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளாள்.  அவள் பேச்சை இந்தச் சமூகம் காதுகொடுத்து கேட்பதே இல்லை.  முள் மீது சேலை விழுந்தாலும் சேலைமீது முள் விழுந்தாலும் சேலைக்குத் தான் நஷ்டம் என்னும் தொடா் நினைவுக்கு வருகின்றது. பெண்ணும் அப்படிப்பட்டவள் தான்.  வெண்ணிலை என்றால் தமிழ் அகராதி அளிக்கும் பொருள் ஈடுகாட்டாது வாங்கும் கடன் என்கிறது. ஆனால் ஆசிரியர் கையறு நிலையில் வெண்ணிலையைப் பயன்படுத்துகின்றார். பதினைந்து வயது பெண் ஜெராக்ஸ் கடையில் வேலைபார்க்கின்றாள். தன் அண்ணன் கைவிட்ட நிலையில் ஊா்விட்டு ஊா் வந்து தன் தாய் தந்தையைக் காப்பாற்ற நினைத்து வேலைக்குச் செல்கின்றாள்.  கடையில் தன் தந்தையின் வயதையொத்த முதலாளி கையைப் பிடித்து இழுத்ததும் அந்த வேலையை விட்டுவிடுகின்றாள். ஆஸ்துமாவினால் இறந்த தந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு போக பணம் இல்லாமல் நடு ரோட்டில் உதவிக்காக காத்திருக்கின்ற அவலம்.

பேரிளம் பெண்

நாற்பது வயதைக் கடந்த ஆண் தன்னை இளமையாகக் காட்டிக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் தன்னை மாற்றிக்கொள்ள நினைத்தால் அது தவறாகப் பார்க்கப்படும். மேலும் வயது ஏற ஏற தன் இளமை போய்கொண்டிருப்பதை எந்த பெண்ணும் இயல்பாகக் கடந்துவிடுவாள் என்ற பொதுபுத்தி உள்ளது.   ஆனால் ஈஸ்வரி தன்னை அலங்காரம் செய்து கொள்வது குறித்து ஆசிரியருக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் தன்னை அலங்காரம் செய்து கொள்வதினால் தன்னிடம் உள்ள நல்ல குணங்களும் மாறிப்போனதாகக் காட்டுகின்றார். பேறு காலத்திற்கு வந்திருக்கும் மூத்த மகளை திட்டுவதாக எழுதியிருப்பது, தன்னை அலங்காரம் செய்து கொள்வதினால் பெண்ணின் இரக்ககுணமும் மாறிவிடுமா என்கிற கேள்வியை உண்டாகுகின்றது.  தன் மூத்த மகளின் பேறுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஈஸ்வரி பக்கத்து வீட்டில் நடக்கின்ற நலங்கு நிகழ்ச்சிக்குச் செல்கின்றாள். அப்படிச் செல்லும்போது தன்னை எப்படி அலங்காரம் செய்து கொள்கின்றாள். நலங்கு வீட்டில் எதையெல்லாம் தனக்கு வேண்டும் என்று ஆசை கொள்வதாக கதையானது நகர்கின்றது. நாலு விரல் அளவு கை வைத்த சட்டை தன்கிட்ட இல்லயே.  தைக்க கொடுக்கணும்.  நெஞ்சுத் தெரிய இடுப்பு ஒடுக்கித் தைத்த சுடிதார் இல்லையே. சின்ன மகளின் சுடிதாரை எடுத்து ஒரு நாளேனும் போட வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். மேலும் பின் முதுகு தாழ்ந்து தெரியும் படி வைத்த சட்டை, கருப்பு பாடி நலங்குக்கு எடுத்து வைக்கின்றாள். கண்ணாடி முன் நின்று சரிந்த மார்பகங்களை இரு உள்ளங்கைகளால் தூக்கிப் பார்த்து வருத்தப்படுகின்றாள்.  மகளுடைய புதிய ஜட்டியை எடுத்து போட்டு கொள்ள ஆசை.  வெளியில் போகும்போது மட்டும் அணியும் உயர்குதிச்செருப்பு எடுத்து வைக்கின்றாள். ஆனால் தன்னால் நிகழ்ச்சிக்குப் போக முடியாது என்று தெரிந்தவுடன் தன் மகளைத் திட்டுவதாக முடிகின்றது.  தன் இளமைகாலம் தீர்ந்து போய்க்கொண்டிருக்கும் போது தன் இளமையை மீட்டெடுக்கத் துடிக்கும் பெண்ணாகப் பேரிளம்பெண் இருகின்றாள்.

கொடிகொம்பு

கணவன் தன் குறையை மறைப்பதற்காகத் தினமும் குடித்துவிட்டு வருகிறான். மனைவியை மலடி என்று திட்டித்தீர்க்கின்றான். வாணி தன் குடிகாரக் கணவனால் தன் வாழ்க்கையே சீரழிந்தும் அவனோடு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றாள். விஜயனிடம் பல முறை சொல்லியிருக்கின்றாள். எல்லோர் முன்னாடியும் என்ன திட்டாதன்னு. ஆனால் அவன் கேட்பதாக இல்லை. அவளுக்குத் தான் மலடி இல்லை என்பதை நீருபிக்கத் தோன்றும். ஆனால் தாய் தந்தைக்காக தன்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்கின்றாள். பிரியத்தோடு தொட்டால் தூக்கம் வருது, நாளைக்கு என்பான், பயந்தாங்கொள்ளி… நாலாவது நாள் தாண்டினால் சாக்கு சொல்வான் வயிறு வலிப்பதாக… இல்லையென்றால் வீட்டிற்குள் நுழையும் போதே சண்டையிழுப்பான் குடிப்போதையில். எழமாட்டாத பயன்.  பம்முவதற்குத்தானோ இந்தக் குடி என்று நினைக்கின்றாள்.

தன்னுடைய இயலாமை வெளிக்காட்டாமல் மனைவியை மலடி என்று குற்றம் சுமத்தும் கணவன். கெட்ட வார்த்தையில் திட்டுவது அவமானப்படுத்துவது எனத் தொடர்ந்து செய்கின்றான். இறுதியில் தன் மாமனார் குளித்துக்கொண்டிருக்கும் போது தெரியாமல் குளியலறையின்  உள்ளே நுழைந்து விடுகின்றாள். அப்போது அவள் உடனே வெளியேறாமல் அவர் மீது தண்ணீர் அடித்து விளையாடுகின்றாள் என்று கதையானது முடிகின்றது. தன்னை நீருபிக்க அவள் எடுக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

தொப்புள்கொடி

மனநலம் பாதிக்கப்பட்ட கார்த்திகா ஊரில் சுற்றிக்கொண்டிருக்கின்றாள்.  ஒரு நாள் குழந்தையை பெற்றெடுக்கின்றாள்.  ஊரில் உள்ளவர்கள் அனைவரும் வருத்தம் அடைகின்றனா்.  இந்த பயித்தியத்தக் கூட விட்டு வைக்கவில்லையே என்று.கார்த்திக்காவுக்குக் குழந்தைக்குப் பால்கொடுக்க தெரியவில்லை. குழந்தை இறந்துவிடுகின்றது. கார்த்திகா இறந்த குழந்தையை  கையில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி வருகின்றாள். ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இழிவாகப் பேசுகின்றனா்.  இறுதியில் கார்த்திகாவின் பெற்றோரே அவளை விஷம் வைத்து கொல்கின்றனா். கார்த்திகா பிறக்கும்போது தரணி ஆளப்பிறந்தவள் என்று தாய் மகிழ்ச்சியடைகின்றாள். இறுதியல் மகளை விஷம் வைத்து கொள்கின்றனா்.

முடிவுரை

வெண்ணிலைத் சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெண்கள் அனைவரும் கைவிடப்பட்டவர்களாகத் துயரம் நிறைந்தவர்களாகப் பிறரிடம் உதவியை எதிப்பார்க்கின்றவர்களாகவும் அடிமைப்படுத்தப்பட்டும் கிடக்கின்றனா். பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சிக்கல் பாலியல் சார்ந்ததாகவே இருக்கின்றது. கிடந்த கோலம் கதையில் அவள் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் அவன் இரவு படுக்கும்போது திரும்பிக்கொள்ளக்கூடாது என்று நினைக்கின்றாள். அதற்காகவே காண்டம் வாங்கிவருகின்றாள். கடமைக்கு பாலியல் இச்சைக்கு உறவுக்கொள்ளும் அவனைப் பார்த்து சிரிப்பதன் மூலம் பாலியல் உறவின் மூலம் என்றும் அடிமைப்படுத்திவிட முடியாது என்பதையும் அறியமுடிகின்றது. உள்ளிருந்து உடற்றும் பசி மிக முக்கியமான சிக்கல் அண்ணனுக்கும் தங்கைகளுக்குமான பாலியல் உறவு. வெண்ணிலை கதையிலும் தன் மகளை ஒத்த வயதுடைய பெண்ணிடம் முதலாளி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது. பேரிளம் பெண் கதையில் தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு செல்லும் ஈஸ்வரி மற்ற ஆடவர்களை நினைக்கின்றாள். மேலும் தன் கணவனையே மயக்க வேண்டும் என்று நினைக்கின்றாள். அதன் மூலம் தான் ஆசைப்பட்டதையெல்லாம் அடைய முடியும் என்று நம்புகின்றாள். கொடிகொம்பு கதையில் தன் கணவனிடம் குறையை வெறுத்து தன் மாமனாரின் மேல் ஆசைப்படுவதாக கதையை முடிகின்றார். தொப்புள்கொடியில் பெண் பயித்தியமாக இருந்தாலும் போகப் பொருளாக பார்க்கப்படுகின்றாள் என்பதைக் குறிப்பிடுகின்றார். மேற்குறிப்பிட்ட கதைகளில் பெண் உடல் சார்ந்து எவ்வாறு அடிமைப் படுத்தப்பட்டிருக்கின்றாள் என்பதை அறிய முடிகின்றது.

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியா்,
தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி,
திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *