-சி. ஜெயபாரதன், கனடா

அமர கீதங்கள்

என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை !
[Miss me, But let me go]

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்
தோற்றம் :  அக்டோபர்  24, 1934
மறைவு : நவம்பர் 18, 2018

[13]

உயிர்த்தெழுவாள் !

விழித்தெழுக என் தேசம்
என்னும்
கவிதை நூல்
எழுதி வெளியிட்டேன்.
ஆனால்
என் துணைவி,
அறுவை சிகிட்சையில்
விழிதெழ வில்லையே என
வேதனைப் பட்டேன்.
இந்துவாய் வாழ்ந்து
பைபிள் பயின்று
கிறித்துவை நம்பும்
உன் துணைவி
உயிர்த் தெழுவாள் என்று
ஓர் அசரீரிக் குரல்
ஒலித்தது உடனே
வெளி வானில் !

[14]

படமாகி !

நேற்று
ஒளிகாட்டி
நடமாடிய தீபம்
புயல்
காற்றில் அணைந்து,\
வீட்டுச் சுவரில்
படமாகித்
தொங்குகிறது
இன்று
மாலையோடு !

[15]

பெருங் காயம் !

உயிர்மெய்க் காயம்
பொய்யாம் !
மண்ணிலே தோன்றிய
பெண்மணிக்கு
எத்தனை,
எத்தனை அணிகள் !
ஜரிகைப் பட்டு
ஆடைகள் !
ஒப்பனைச் சாதனம் !
அனைத்தையும்
விட்டுப்
போனது துணைப் புறா,
இப்போது
துருப்பிடிக் காத
ஒரு கும்பா வுக்குள்
எரி சாம்பலாய்,
அவள் நீடித்த
குடியிருப்பு !

[16]

தொட்ட இடம் !

இவ்வுலகில்
முப்பத்தாறு ஆண்டுகள்
மூச்சிழுத்த
இல்லத்தைப் பூட்டி விட்டுப்
போனவள்,
மீண்டும் திறக்க இங்கு
வரவில்லை !
வீட்டில்
தொட்ட இடம், துடைத்த இடம்
தூய்மை இழந்தன !
சுட்ட சட்டி, அறைத்த
அம்மி
விம்மி, விம்மி
அழுதன !
துவைத்த உடை காயாமல்
ஈரமாய் உள்ளது !
பண்ணிய வடை
இனித் தின்பாரற்று
ஊசிப் போகுது !
மண்ணாகி
மீளாத் துயிலில்
அவள்
தூங்கும் இடம் இப்போது
விண்ணாகிப்
போனது !

[17]

ஆபரணங்கள்

பெண்ணுக்குப்
பொன்னாசை உள்ளது !
உயிர் உள்ளவரை மேனியில்
அணிகள் ஒளிவீசும் !
உயிர் போன பிறகு
எதுகை, மோனை
எதற்கு ?
உபமானம், உபமேயம்
எதற்கு ?
உடை யில்லாத
உயிர்மெய்
சொல்லுக்கே
வல்லமை அதிகம் !
உயிர்மெய்
உலகை விட்டுப் போன
பிறகு
உன் சோக வரலாறு
சொல்ல
இலக்கணம் எதற்கு ?
தலைக் கனம்
போதும்.

பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *