வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
-திருக்குறள் -465(தெரிந்து செயல்வகை)

புதுக் கவிதையில்…

பகைவரை அழிக்கும்
செயல்வகையை நன்கு அறியாமல்
செயலில் இறங்கினால்,
அது
பகைவரை
நிலைத்து நிலைபெற
வழிவகுத்துவிடும்…!
குறும்பாவில்…
செயல்வகை தெரியாமல் பகையழிக்கும்
செயலில் இறங்குவது, பகைவர்
உறுதியாய் நிலைபெற வைத்துவிடும்…!

மரபுக் கவிதையில்…

தொடரும் பகையை அழித்திடவே
தகுந்த செயல்வகை தெரியாமல்
தொடங்கும் செயலில் பயனில்லை
தேடித் தராது வெற்றியையே,
மடமைச் செயலாய் மாறியேயது
மாற்றான் வெல்ல வழிவகுத்தே
இடரது நமக்குத் தரும்வகையில்
எதிரியை நிலைக்க வைத்திடுமே…!

லிமரைக்கூ..

தெரிந்து செயல்படு செயலின் வகை
பகைவரையழிக்க, இல்லையேல் அவர்
வலிமைபெற்று நிலைத்துவிடும் பகை…!

கிராமிய பாணியில்…

செயல்படு செயல்படு
தெரிஞ்சி செயல்படு,
எதயும் நல்லாவேத்
தெரிஞ்சி செயல்படு..
எதிரிய எப்புடி அழிப்பதுங்கிற
நடமொற தெரியாமலே
தொடங்குனா செயல,
கெடைக்காது எப்பவும் வெற்றி..
அது
எதிராளிய செயிக்கவச்சி
பகய நெரந்தரமா
நெலைக்கவெச்சிடுமே..
அதால
செயல்படு செயல்படு
தெரிஞ்சி செயல்படு,
எதயும் நல்லாவேத்
தெரிஞ்சி செயல்படு…!

செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *