அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி – 191

  1. ஒரே வழி…

    மழைவெயி லில்லா வேளையிலும்
    மழலை கையில் குடையெடுத்தால்,
    மழையும் வெயிலும் வந்திடுமே
    மழலைப் பேச்சை ரசித்திடுமே,
    அழைத்திட ஆயிரம் வேள்வியிலும்
    அன்புக் குழந்தையின் குரல்பெரிதே,
    மழலை உள்ளம் நிலைத்திடட்டும்
    மானிடம் செழிக்க இதுவழியே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலாவே..?
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    செங்கோல் பிறழாது ஆண்ட மன்னர்களின்..
    வெண்கொற்றக் குடை நிழலில் நாடு..
    எங்கும் மும்மாரி பொழிந்து வளம்
    பொங்க குடிமக்கள் மனம் எல்லாம்
    தேன்மாரி பூமாரி பொழிந்தாற் போல்
    இன்பமாய் வாழ்ந்த காலமென்று நீ
    நினைத்தாயோ என் வண்ண நிலாவே..??

    தன்னலமாய் வாழ்கின்ற ம(மா)க்கள் கூட்டத்தால்
    இந்நாட்டில் தகுதியற்றோர் தலைமையில் ஆட்சி..
    எந்நாளும் துன்பமே நிலை கொண்ட
    அன்றாடங் காய்ச்சியாய் வாழ்கின்ற அவலம்..
    வான் மழையும் பொய்த்துப் போய்..
    காணுகின்ற இடமெங்கும் வறட்சி நிலவ
    வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலாவே..?

  3. பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு
    ___________________________

    வீட்டில் யாருமில்லை
    விரும்பி நான் அமரவில்லை
    அடுத்தடுத்து வேலைக்குப் போன
    அம்மா அப்பா அறிவுரைப்படி
    அழாமல் இருக்க அமர்ந்துள்ளேன்
    எனதருமை நண்பன்
    என் வண்ணக்குடையுடன்
    விழி திறக்கும் முன்னே
    விறுவிறுவென்று பல்துலக்கி
    அதட்டலுடன் பாலூட்டி
    அவசரமாய்க் குளிப்பாட்டி
    அருமைப் பெற்றோர் சென்றவுடன்
    காலை உணவு இட்லிகளை
    காகத்துடன் பகிர்ந்ததால்
    கடுங்கோபமுற்ற அண்ணன்
    கைகட்டி அமரச் செய்தான் வெளியே
    குட்டி பாப்பா என
    குறைத்து மதிப்பிடாதீர்
    அம்மா போல்
    ஆளுயரம் ஆன பின்னே
    தலைவியாக நானும்
    தரணிக்கு நன்மை செய்வேன்
    போய்வாருங்கள் இப்போ
    பேசிக்கொண்டே இருப்பேன் நான்.

    – நாங்குநேரி வாசஸ்ரீ
    (பத்மா ஸ்ரீதர்).

  4. மழலை மொழி

    குடைக்குள் மழையென வந்த
    மழலை உன்னை கண்டு
    மனம் இங்கே நனைந்ததடி
    கைகட்டி அமர்ந்திங்கு
    உனை கண்டவர் மனம்தனை
    கட்டி போட்டாயே நீ
    உன் விழி பேசும் மௌன மொழியும்
    வாய் பேசும் மழலை மொழியும் கேட்காமல்
    இயந்திரமாய் எதையோ தேடி
    ஓடும் மனிதர்கள் இங்கே
    சிரிக்க மறந்து
    சிந்திக்க கூட மறந்து
    மாயாலோகத்தில் எத்தனையோ இழந்து
    கடமைக்காக வாழ்ந்திடும் மனிதர்கள் இங்கே
    ஓடும் இவர்களை நிற்கச்சொல்லி
    மருந்தாய் வந்ததே
    உனதழகும் சிரிப்புமாய் கலந்து
    வந்த உன் மழலை மொழி

  5. ஏரார்ந்த கண்ணி மானே…
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    ஏரார்ந்த கண்ணி மானே.. உன் குடையே..
    எழில்வாய்ந்த சிவப்பு வானோ..!!
    ஊராரும் வியந்துப் போற்றும்.. உன் மொழிகள்..
    நாவூறும் இனிய தேனோ..!!
    சீரான உந்தன் விரல்கள்.. கொடுக்கும் அசைவு..
    சில்லென்ற சாரல் மழையோ..!!
    ஆராய நினைத்து நானும்.. என் சிந்தையின்..
    ஆற்றலை இழந்தேன் வீணே..!!

    சீர்நல்கும் இனிய செயல்கள்.. என்றும் உனையே..
    பார்போற்ற வாழ்ந்திடச் செய்யும்..!!
    ஏராளமாய் இன்பம் பெருக.. நீ பிறர்க்கு..
    இயன்ற உதவிகள் செய்வாய்..!!
    ஈரிய நெஞ்சம் இருந்தால்..நீ எவரையும்..
    உறுதிதாய் வெல்லலாம் உணர்வாய்..!!
    கார்முகிலைக் கண்ட மயிலாய்.. உன் மனமும்..
    களிநடனம் புரியக் காண்பாய்..!!

    பொருள்:-
    ஏரார்ந்த கண்ணி – அழகு பொருந்திய கண்களை உடைய
    ஈரிய நெஞ்சம் – அன்பு நெஞ்சம்

  6. இன்னொரு புயலின் முன் ….

    விரித்த குடை இவளுக்கு
    விளையாட்டுத் துணை இல்லை.

    கண்களில் இன்னும்
    கஜாப் புயல் பயம்.

    இன்னொரு புயலின் முன்,

    மழைக்கு மறைவாய்
    குடைக்குள் அடங்கவும்,

    வெள்ளத் தண்ணீர்
    வீட்டிற்குள் வந்தால்
    தளிர் பாதம் நனையாமல்
    உயரக் கட்டிலில்
    உட்காரவும்
    குழந்தை இவள்
    பழகும் பயிற்சி.

    அ. இராஜகோபாலன்

  7. செல்வமகளே,,, என் செல்லமே…
    முனைவர் மு.புஷ்பரெஜினா
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    தஞ்சாவூர்.

    மழைக்கால மேகமாய் மனதினிலே நனையவிட்டு,
    அற்புத வானவில்லாய் என்னை வளைய வந்து,
    பள்ளிக்கூட மேசையிலே பக்கம் பாராது முகந்திருப்பி
    செல்லக் கோபத்துடன் செல்ல சண்டைக்காய்
    சிரிப்புடன் காத்திருக்கும் என் செல்லமே….
    தாய் வரவுக்காய் காத்திருக்கும் கனிச்சாறே
    கந்தக பூமிதனை களிப்பூட்ட வந்த கற்பகமே
    கடைப்பார்வையால் கட்டிளங்காளையரைக்
    கட்டி இழுத்து வரும் கண்ணே, காவியமே,,
    விரித்தக்குடையடியில், விரிந்த விழியுடனே
    விரக்தியுடன் நோக்குவதேன் விந்தைமகளே..
    கனவாகிடாதே கண்முன்னே வாராயோ
    கர்ப்பத்தில் வந்துதித்து கலிதீர்க்க வாராயோ

Leave a Reply to ஆ. செந்தில் குமார்

Your email address will not be published. Required fields are marked *