சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்

தோற்றம் : அக்டோபர் 24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

 [22] எழுதிச் சென்ற ஊழியின் கை !

முடிந்தது

அவள் ஆயுள் என

விதி

மொழிந்தால் நான்

ஏற்க மாட்டேன் !

முடிந்தது

அவள் வினைகள் எல்லாம்

என் வீட்டில் எனக்

காலன்

ஓலமிட்டால் நான்

காதில்

கேட்க மாட்டேன் !

முடிந்தது

அவள் கடமை யாவும்

இந்த உலகில் என

விதியின் கை

எழுதி இருந்தால்,

ஊழிடம்

ஒரே ஒரு வினா மட்டும்

கேட்பேன் !

அறுவை முறையை

மருத்துவர் சரியாகச் செய்து

ஒன்பது நாள்

உயிர் கொடுத்தாயே ! ஏன்

ஒன்பதாம் நாள்

சுவாச மூச்சை நிறுத்தினாய் ?

சொல் ! சொல் ! சொல் !

 

++++++++++++++++

[23] ஊழியின் எழுத்தாணி

 

எழுதிச் செல்லும்

ஊழியின் எழுத்தாணி

எழுதி, எழுதி மேற்செல்லும் !

அழுதாலும், தொழுதாலும்

வழி மாறாது !

விதி மாறாது !

நழுவிச் செல்லும்,

உந்தன்

அழுகை காணாது !

காலன் வந்து

வீட்டு வாசலில் நின்று

சிவப்பு மாவில்

கோலமிட்டுக்

குறி வைத்துப் போவான் !

எமனின் நீள் கயிறு

அவளைக் கட்டி

இழுத்துச் செல்லும் !

அவளது இறுதிச்

சடங்கு

ஓலைச் சுவடியில்

ஜோதிடரால்

எழுதப்பட வில்லை, அவளது

மூளைச் சுவரில்

எழுதி வைத்துள்ளது

ஊழ்விதி !

 

+++++++++++++

[24]  அன்னமிட்ட கைகள்.

எனக்கு

அன்ன மிட்ட கைகள்,

ஆக்கி வைத்த

கரங்கள் மூன்று !

முதலாக

முலைப் பால் ஊட்டிய

என் அன்னை !

இருபத்தி யெட்டு வயது வரை

கண்ணும், கருத்துமாய்

உண்ண வைத்து

ஊட்டி வளர்த்த தாய் !

தாயிக்குப் பின்

தாரம் !

ஐம்பத்தி யாறு ஆண்டுகள்

தம்பதிகளாய்க்

கைப்பற்றி

இல்லறத்தில் வாழ்ந்து

முடிந்த கதை !

மருத்துவ மனையில்

பிரியும் ஆத்மா

பிணைத்தது ஒரு கையை !

என் இடது கையை !

இணையத் துடித்த

ஆத்மாவோ

இரு கரம் பற்றி

என்னைத்

தன்வசம் இழுத்தது !

முன்பு தனியாக வாழ்ந்த

சமயத்தில்

அரிசிச் சாதம் கிட்டாத

அந்தக் காலத்தில்

முகம் சுழிக்காது

புன்னகையுடன்

பன்முறை விருந்தளித்த

பெண்மாது !

உண்டி கொடுத்தோர் வாழ்வில்

உயிர் கொடுத்தோர்.

 

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *