-முனைவர் ந.இரகுதேவன்

புள்ளினங்கள் துயிலெழுந்து பாடித் துதிக்கும் புலர்காலைப் பொழுதில் – எம்
நல்லுழவன் தோளேறிப் பயணித்த கலப்பை
நுகத்தடி ஏற்று
எருதுகளின் வல்லிசைவில் முன்னிழுத்து நடக்க
மண்பிளந்துடைந்து விதைகளை ஏற்றது
நிலம்
மாடுகளின் குழம்புக் கால்பட்டு
சீராக கரைபிரித்து நடக்கிறது ஏர்
ஏர்க்கொழு பட்டுப் பிளந்த மண்ணில்
சிற்றுயிரைக் கொத்திப் பொருக்க
அண்டை உறவுகளென்று ஏர்க்காலின் பின்னோடுகிறது
பறவைகள் அச்சமின்றி
உழவோட
உழக்கிழத்தி இரவடுப்பில் கிண்டிமூட்ட களியுருண்டைச்
சிறுபுளிப்பும் – அம்மிக்கல்
‘நேக்கு நேக்கென்று’ சத்தமிட
அரைத்தெடுத்த புளித்துவையலும் உழக்கிழவனுக்குணவாக
உழத்தியின் தலையேறிய கூடைச்சோற்றுக் –
காலைப் பழங்களியும்
வழிநெடுக மணம் கசிந்த பயணித்தது
நல்லுழத்தி வரவறிந்து பெருநடையைக் குறைத்தன
மாடுகள் – ஆதிப்பசியழிக்கும்
இவன் பசிக்கு சிறு ஓய்வு
ஓய்வில்
அரைபடாத தீவனத்தை
சிறு உறக்கத் தவத்தோடு அரைத்தன
நுரை ததும்ப
சிறுநீற்றைக் கழித்தபடி நுகத்தடி விடைகள்
இச்சிறுபொழுதில்
முதுகமர்ந்த காக்கைக் குருவியெல்லாம்
கடந்த பருவத்து நட்பைப் புதுப்பித்தன
‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்து’
உலகூட்டும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *