வினைத்தொகையே வாழ்க்கைத்துணையாய்…!!!

0

-ஆ.செந்தில் குமார்.

படர்கொடி நீயாக.. பற்றும் கொழுகொம்பு நானாக…
சுடரொளி நீயாக.. செல்லும் பரவெளி நானாக…
அடர்வனம் நீயாக.. தரும் அடைமழை நானாக…
தொடுதிரை நீயாக.. அதன் உணர்திறன் நானாக…
எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே…
என்றென்றும் வளர்பிறையாய் இன்பம் வளர்க..!!

நடுபயிர் நீயாக.. அதற்கு உழுநிலம் நானாக…
தொடுவானம் நீயாக.. அதில் விடிவெள்ளி நானாக…
நிறைகுடம் நீயாக.. தாங்கும் பிரிமனை நானாக…
உறைபனி நீயாக.. உகந்த சூழ்நிலை நானாக…
எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே…
என்றென்றும் தேய்பிறையாய் இன்னல் மறைக..!!

தாழ்குழல் நீயாக.. சூடும் விரிமலர் நானாக…
வீழ்புனல் நீயாக.. சேரும் அலைகடல் நானாக…
இலங்குநூல் நீயாக.. அதில் விளங்குபொருள் நானாக…
உலவுதென்றல் நீயாக.. உனைப் பாடுகவி நானாக…
எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே…
என்றென்றும் நிறைமதியாய் வாழ்வு ஒளிர்க…!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *