அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்
-மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைமை இடமாகக் கொண்டு அமைந்த சைவத்தமிழ் அரசானது 400 ஆண்டுகளாகச் சங்கிலித் தொடர்ச்சியாக அமைந்த அரசு.தென்மேற்கே ‘வாய்க்கால் ஆறு’ அதன் எல்லை.தென்கிழக்கே ‘கொம்புக்கல் ஆறு’ அதன் எல்லை. சில காலங்களில் ‘மாணிக்கக் கங்கை’ வரை அதன் எல்லை விரிந்து இருந்ததாம்.
அந்த 400 ஆண்டுகளில் தமிழீழ அரசின் ஆட்சியில் சைவ சமயமும் தமிழ் மொழியும் மட்டுமே பண்பாட்டு நெறிகள்.புத்த சமயமும் சிங்கள மொழியும் தெற்கே கண்டியைத் தலைநகராகக் கொண்ட ஆட்சியாலும் தென்மேற்கே கோட்டையை தலைநகராக கொண்ட ஆட்சியாலும் சமகாலத்தில் விளங்கின.மேலை நாட்டு மொழிகள், சமயங்கள் மற்றும் அரபு நாட்டு மொழிகள், சமயங்கள், அக்காலங்களில் இலங்கையில் இல்லை. நல்லூரைத் தலைநகராகக் கொண்ட சைவத்தமிழ் அரசு 400 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ந்தது.
கலியுகம் 4720 சகாப்தம் 1541 திருவள்ளுவராண்டு 1650
விபவ ஆண்டு 27 வைகாசி புதன்கிழமை (05.06.1619) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்தது. வீழ்த்தியவர்கள் மேலைநாட்டுப் போர்த்துக்கேயர்.
1617இல் கோவாவில் தமிழீழ அரசை வீழ்த்துமாறு
போர்த்துக்கேய ஆளுநர் ஆணையிட்டார். போர்த்துக்கேயர் திறை கொடுக்குமாறு ஆணைகளை அனுப்பினர்.ஆனால், அக்காலத் தமிழீழ அரசன் சங்கிலியன், அதனை நிறைவேற்ற மறுத்தான்.
மன்னரின் பேசாலையில் போர்த்துக்கேய யேசூற்றப் பாதிரிமார்களால் வாள்முனையிலோ சோற்றுக்காகவோகத் தோலிக்கராக மதம் மாறிய தனது குடிமக்களைச் சங்கிலியன் அழித்தான்.
போர்த்துக்கேயரின் படையெடுப்புகளைச் சந்திக்கத் தமிழகப் பழவேற்காட்டில் முகாமிட்டிருந்த ஒல்லாந்தர்களையும் தஞ்சை நாயக்கர் படைகளையும் மலையாளக் குஞ்சலி வீரர்களின் கடற்படையையும் துணைக்கு அழைத்தான். கண்டி அரசுக்கும் செய்தி அனுப்பினான்.
1619 பங்குனியில் பிலிப்பு டி ஒலிவேரா தலைமையில் தெற்கே கொழும்பிலிருந்து நூறு போர்த்துக்கேய வீரரும் சில ஆயிரம் சிங்களக் கூலிப்படைகளும் இணைந்த படை ஒன்று வடக்கு நோக்கிக் கிளம்பியது
தமிழகம், நாகப்பட்டினத்திலிருந்து போர்த்துக்கேயக் கடற்படை கப்பல்கள் யாழ்ப்பாணம் நோக்கிக் கிளம்பின.1619 சித்திரையில் பூநகரி வந்த போத்துக்கேயப் படைகள் கேரதீவுக் கடலைக் கடக்க மீனவர்களைப் பயன்படுத்தினர்.1619 சித்திரைக் கடைசியில் குடாநாட்டுக்குள் போத்துக்கேயப் படைகள் நுழைந்தன.
கலியுகம் 4720, சகாப்தம் 1541, திருவள்ளுவராண்டு 1650, விபவ ஆண்டு, வைகாசி 27ஆம் நாள், புதன்கிழமைபூரட்டாதி நாளில் (05.06.1619) வண்ணார்பண்ணையில் நடந்த பெரும் போரில் சங்கிலியன் படை தோற்றது. சைவத் தமிழ்ப் படை தோற்றது.பிலிப்பு டி ஒலிவேராவின் கத்தோலிக்கப் போர்த்துக்கேயப் படை வென்றது.
நல்லூரைத் தலைமையகமாகக் கொண்ட தமிழீழ அரசு வீழ்ந்தது.சைவத் தமிழ் அரசன் சங்கிலியனும் பல்லாயிரம் சைவத் தமிழ்ப் படை வீரரும் கத்தோலிக்கப் போர்த்துகேயப் படையிடம் தோற்று மாவீரராகிய நாள், அந்த நாள்.
அந்த நாளின் 400ஆவது ஆண்டு நிறைவு நாள், அதே திதி, இந்த ஆண்டு கலியுகம் 5120, சகாப்தம் 1941,திருவள்ளுவராண்டு 2050, விகாரி ஆண்டு, வைகாசி 13, திங்கள்கிழமை, தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி, சதயநாளன்று (27.05.2019) வருகிறது.அந்நாள் இலங்கையின் வரலாற்று நாள். சைவத் தமிழரின் இதயத் துடிப்பு நாள்.மன்னன் சங்கிலியனையும் அவனோடு உயிர்துறந்த தமிழர் படையினரையும் நினைவுகொள்ளும் நாள். 400ஆவது ஆண்டு நினைவு நாள்.
“கீரிமலையில் திரள்வோம், பாலியாற்றில் திரள்வோம். பாலாவியில் திரள்வோம், மோதரகம் ஆற்றில் திரள்வோம். நந்திக் கடலில் திரள்வோம், கொட்டியாற்றில் திரள்வோம். கல்லடியில் திரள்வோம், கொம்புக்கல் ஆற்றில் திரள்வோம். வாய்க்கால் ஆற்றில் திரள்வோம்,சங்கிலிய மன்னனுக்கும் படைவீரர்களுக்கும் நீத்தார் கடன் ஆற்றுவோம்.”
இந்த ஆனி தொடக்கம் அடுத்த ஆனி வரை ஓராண்டு காலத்துக்குச் சங்கிலியன் 400வது ஆண்டு நினைவு நிகழ்வுகளை இலங்கை முழுவதும் நடத்துவோம். புலம்பெயர் தமிழர்களிடையே நடத்துவோம்.ஊர்கள் தோறும் சங்கிலியன் சிலைகள் நிறுவுவோம்.வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சங்கிலியன் வரலாறு என்ற தலைப்பில் ஒரு பகுதி சேர்ப்போம்.
சங்கிலியன் நாடகம் ஓரங்க நாடகமாக நாடகக் குழுகளிகளிடையே போட்டி நடத்துவோம்.சங்கிலியின் கதையில் ஏதாவது ஒரு பகுதியைப் பரதநாட்டியமாக அமைக்கும் போட்டி நடத்துவோம்.சங்கிலியன் வரலாற்றைத் தமிழிசைப் பாடல்களாக்கி இசைக்கும் போட்டி நடத்துவோம்.சங்கிலியன் வரலாறு தொடர்பாக மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் போட்டிகள் நடத்துவோம்.
வைகாசித் தேய்பிறை எட்டாம் நாள் மன்னன் சங்கிலியன் மற்றும் தமிழ் படை வீரருக்கு நினைவு நாள்.ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்.