-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

மண்ணிலே நல்ல வண்ணம்
வாழவே வேண்டு மாயின்
கண்ணிலே கருணை கொண்டு
கடவுளை நினைக்க வேண்டும்

எண்ணிடும் எண்ண மெல்லாம்
இனியதாய் இருந்தே விட்டால்
மண்ணிலே எங்கள் வாழ்வு
மங்கலம் தந்தே நிற்கும்

புண்ணியம் பாவம் என்று
எண்ணியே இருந்தே விட்டால்
கண்ணிலே தெரியும் யாவும்
கலக்கமாய் தெரியு மன்றோ

பெரியவர் சென்ற பாதை
விரிவென நிற்கும் போது
குறுகிய பாதை சென்று
குழம்பி நாம் நிற்கலாமா

வறுமையில் வாழும் போதும்
வாய்மையை மனதில் கொண்டு
நெறியொடு வாழ்வோ மாயின்
நிம்மதி வந்தே சேரும்

அறிவொடு நடந்து கொள்வோம்
அனைவர்க்கும் உதவி நிற்போம்
பெருமைகள் வந்தே சேரும்
பிறந்ததில் மகிழ்ச்சி கொள்வோம்

நல்லதை நாளும் செய்வோம்
நாளெலாம் உழைத்தே நிற்போம்
வெல்லுவோம் என்று எண்ணி
வெற்றியை நோக்கிச் செல்வோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *