-தி.இரா.மீனா

 கர்நாடக இசைக்கும்,கன்னட மொழிக்கும் பெருமை சேர்ப்பதான தாச இலக்கியம் இறைவனை அடைய இசை ஓர் எளிய வழி என்பதை குறிக்கோளாகக் கொண்டது. சாதாரண மனிதனும் விரும்பி ஏற்கும் வகையில் பண்பாடு மற்றும் சமய மேன்மை சார்ந்த கருத்துக்களை தாசர்கள் கீர்த்தனைகளாக்கி தங்கள் பக்தியை வளப்படுத்தினர். ’நாதோபாசனா ’என்ற பெயரில் அமையும் இது இசை,பக்தி,இலக்கியம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது என்றாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இனம் கண்டறிய முடியாத அளவுக்குத் தமக்குள் இணைந்துள்ளது. ஹரிதாசர்களின் இலக்கியத்தைப் பொதுப் பாடல்கள், கவித்துவப் பாடல்கள், தத்துவப் பாடல்கள் என்ற மூன்று பிரிவுகளில் அடக்கலாம். ஹரிதாசர்களின் படைப்பில் மிக முக்கியமானது கீர்த்தனைகளே.இது கன்னட மொழியில் தேவர்நாமா என்றும் அழைக்கப்படுகிறது.

சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் வேதம், உபநிடதம், புராணம் குறிப்பாக தசாவதாரம் ஆகியவற்றின் கருத்துக்களை எளிமையாக வெளிப்படுத்தியவர்கள் ஹரி தாசர்கள்.எளிய கருத்துக்களைக் கொள்கை போல இல்லாமல் இயல்பான கதைப் பாங்கில்,பேச்சு முறையில் கீர்த்தனைகள் வடிவத்தில் அமைத்ததால் மனிதர்கள் மனதில் அவை எளிதாகப் பதிந்தன. மறுக்கப்படாத சமய நிலைகளை எல்லாப் பாடல் களும்,கீர்த்தனைகளும் வெளிப்படுத்தின. வாழ்க்கையை, அதன் போக்கை மனிதன் தனக்குப் பிடித்தவகையில் தெரிந்து கொள்ள அவை உதவின. தசாவதாரக் கதைகளின் பின்னணியில் இறைவனின் தன்மையை வெளிப்படுத்தியதால் மத்ய,கூர்ம,வராக,நரசிம்ம அவதாரங்களின் கதைகளைக் படிப்பதும் ,குறிப்பாகக் கீர்த்தனைகளின் மூலம் அதை அறிந்து கொள்வதும் அன்று அவர்களுக்கு விருப்பமாக இருந்தது.வேதம் ,புராணம் ஆகியவைகள் சொன்ன கருத்துக்களை தாசர் கீர்த்தனைகள் மக்களுக்குக் காட்டின. ஹரிதாசர்கள் ஒன்றையும் விடாமல் எல்லா முக்கிய அம்சத் தையும்.கீர்த்தனைகளில் வெளிக்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


பாடல்களில் சொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான விஷயங்கள் ஒவ்வொரு வகையில் விஷேசமானவை ;அர்த்தம் நிறைந்தவை. மனிதன் தானாகப் புரிந்து கொண்டிருக்க முடியாதவை.இதனால் தனிமனிதன் அறிவு பெற்றதோடு மட்டுமில்லாமல் வாழ்க்கைச் செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவனாகவும் வாழமுடிந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையின் திக்குத் தெரியாமல் இருந்த சாதாரண மனிதர்களுக்கு உண்மைகளின் அறிக்கைகளாக இருந்த கடினமான இலக்கிய வகைகள் புரியவில்லை.அந்நேரத்தில்ஹரிதாசர்களின் கீர்த்தனைகள் மக்களை வழிநடத்திச் செல்லும் விளக்காக இருந்தன. விறுவிறுப்பான நிலையில் சொற்றொடர்களை எளிமையான கன்னட மொழியில் வெளிப் படுத்தினர்.அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பழமொழிகள் போலக் கீர்த்தனைகளை அமைத்தனர்.எளிமை அவர்களின் அழகாகும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவையோ,துறையையோ பற்றிப் பேசவில்லை.பொதுவான பார்வையைக் கையாண்டதால் எல்லோரையும் ஈர்க்கின்ற தன்மை அந்த இலக்கியத்திற்கு இருந்தது. அகந்தை, ஆங்காரம், தந்திரம், ஆகியவைகளை ஒழித்த நிலையில் தான் அவர்கள் பாடல்களிருந்தன.மனித இனத்தைக் காப்பாற்றுவது பக்திதான் என்ற அடிப்படைத் தத்துவத்தை ஆழமாக வலி யுறுத்தியவர்கள். சாதாரண மனிதர்களோடு இவர்களுக்கிருந்த நெருங்கிய தொடர்பு வாழ்க்கையை அவர்கள் பார்வையில் தாசர்களைப் பார்க்க வைத்தது.அதனால் அவர்கள் பாடல்கள் இயற்கையாகவும், இயல்பாகவும் அமைந்து உள்ளத்தைக் கவர்ந்தன.மனித வாழ்க்கையின் குறுகிய ஆயுளைக் காட்டிப்,பொய்யான உலகத்தை வெளிப்படுத்தி இறைவனின் அருள் பெறும் போதனை நிலையில் அவர்கள் பாடல்கள் அமைந்தன. ஒவ்வொரு ஹரிதாசனுக்கும் தனியான நடையிருந்தது. தாசர்களில் புகழ்பெற்றவரான புரந்தரதாசர் சொற்றொடர்களையும்,உவமைகளையும பயன்படுத்தினார்.பல தத்துவக் கொள்கைகளும் கூட அவரால் எல்லோருக்கும் புரியும்படி எளிதில் சொல்லப்பட்டுள்ளன.

தாசர்களின் தலைவனாகப் போற்றப்படும் புரந்தரதாசன் செல்வப் பரம்பரையில் வந்தவர். ஒரு கட்டத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகி விஷ்ணு பக்தனானார்.உலக வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து பல்வேறு சூழ்நிலைகளில் பழகியதால் அவர் கீர்த்தனைகளின் அணுகுமுறை நகைச்சுவை,கண்டனம்,சமூக விமர்சனம், அறிவுரை என எல்லாவற்றின் கலவையாகவும் அமைந்தது. நாமமகிமை,துதி,நிவேதனம், கிருஷ்ணலீலை, சமூக விமர்சனம்,அறிவுரை என்ற பிரிவுகளில் அவர் கீர்த்தனைகள் அடங்குகின்றன.’வயிற்று வைராக்கியம் ”என்ற கீர்த்தனை சமூக வாழ்க்கையின் குறைபாடுகளை பிரதிபலிக்கும் கீர்த்தனையாகும் ”வைகறையில் எழுந்து குளிரில் குளித்துவிட்டு மதம்,மாச்சர்யம்,கோபம் ஆகியவைகளோடு வாழ்தல்..நாவில் மந்திரம் சொல்லிக் கொண்டு மனதை அலையவிட்டு வெளியில் பரம நல்லவனாகக் காட்டிக் கொள்ளுதல்..மேடை வேடம் போட்டு வாழும் சோற்று ஞானம் “என்று சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டிச் சொல்கிறார்.’மடி மடி என்று [ ’ மடிமடியென்து’ ] என்ற பாடலில் ஈரஆடைகளை அணிந்து உலகத்தவருக்குத் தன்னைக் காட்டிக் கொள்வது மடியாகாது.மனதிலிருக்கும் கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவைகளைஒழிப்பதுதான் உண்மையான மடி, என்கிறார். வெளிப்புறச் செயல்களுக்கு அதிக மதிப்புத் தந்து மற்றவர்கள் முன்பு தன்னைக்காட்டிக் கொள்ளும் தன்மை மனிதர்களிடம் அதிகமாகவுள்ளதுள்ளது. அது ஒழியவேண்டும்.புரந்தரதாசனின் காலகட்டத்தில் இருந்த சமூக அவலம் இன்று நாம் வாழ்கிற சூழலிலும்உள்ளது என்பது தான் அவலம் அநீதி யையும், ஆடம்பரத்தையும் பழிப்பதான பார்வையிலும் சில கீர்த்தனைகள் உண்டு.”சிரிப்புத்தான் வருகிறது.[’நகுவே பர்த்திதே நநகே]உடல் தண்ணீருக்குள் இருந்து பயன் என்ன?வேம்பினை வெல்லத்தில் இணைப்பதால் என்ன பயன்?புலையன் நம்மிடையிலன்றி வெளியிலா இருக்கிறான் உடல் அழுக்கை கழுவ முடியும்போது மனஅழுக்கைக் கழுவ முடியாதா?”என்பன போன்ற கருத்துக்கள் குறிப்பிடத் தக்கவை.சமூக போதனைக்குச் சான்றாக “தருமமே ஜயம்”[தர்மவே ஜயா ’] என்ற கீர்த்தனை அமைகிறது.”நஞ்சு கொடுத்தவனுக்கு நல்ல உணவு தர வேண்டும்: பழித்தவனைப் பாராட்ட வேண்டும்”என்ற கருத்து இன்னா செய்தவனுக்கும் நன்னயம் செய்யத் தூண்டும் வள்ளுவத்தை நினைவுபடுத்துகிறது’ இது பாக்கியம் [இது பாக்யா’] என்ற கீர்த்தனையில் “கல்லாயிருக்க வேண்டும் கடின சம்சாரத்தில்,வில்லாக வளைய வேண்டும் பெரியோரிடம்”என்ற வரி பழமொழிபோல இன்றும் எல்லோராலும் பயன்படுத்தப்படும் எளியதொடராகிறது.எதையும் எதிர்த்து நிற்கும் ஆன்மபலம் மனிதனுக்கு வேண்டும் என்ற வற்புறுத்தல் அவர் பாடல்களில் தொடர்ந்து இடம் பெறுகிறது பக்தி என்பது பல கோயில்களுக்குச் செல்வதல்ல.சரியான வாழ்க்கை முறைதான் பக்தி என்கிறார்.மண்,பொன்,பெண் மீது இருக்கும் ஆசை நீக்கப்பட வேண்டும் என்ற செய்தி சொல்லப்படும் விதம் புதுமையானதாக உள்ளது.”ஆசைகளை நீக்கும் படி நேரில் உபதேசம் செய்வது இயல்பு. ஆனால் திருமால் தன் கையால் கடிதமெழுதி இவைகளை நீக்கும்படி வேண்டுகிறான்”என்ற தொனியிலான கீர்த்தனை புதுமையாக மட்டுமின்றி வியப்பையும்,கற்பனை ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. மனிதனின் உயர்வு, அவனுடைய குணம்செயல்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர சாதியால் தீர்மானிக்கப் படுவதில்லை என்ற ஆழமான எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தை பல பாடல்கள் காட்டுகின்றன. ஏழைகளின் உணவான ராகியைப் பாடலாக்கி ’ராகி என்ற சொல்லை ’பல்வேறு பாவனைகளில் வெளிப்படுத்தியிருக்கும் தன்மை அற்புதமானது. ஒரு வயதான மூதாட்டியிடம் தனக்கு உணவு தரும்படி விட்டலன் வேண்டுகிறான்.தன்னிடம ராகிரொட்டி மட்டுமே இருப்பதாக அவள் சொல்கிறாள்.அது தனது தேவைக்கு மேலானது என்கிறான். அது முதல் தினமும் பிச்சைக்கு வந்து ராகியையே வேண்டுகிறான்.இந்தப் பாடலின் மிகச் சிறந்த அம்சம் ’ராகி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் விதம்தான்.”யோக்ய ராகி”,”போக்யராகி”, ”பாக்யவந்தராகி” என்று எல்லாம் இரட்டைப் பொருளில் அமைகின்றன.சான்றாக “யோக்ய +ராகி—சாப்பிடுவதற்கு ஏற்ற ராகி ,”யோக்யர்+ஆகி—கொடை கொடுப்பதற்கு தகுதியானவர், போக்யர்+ ஆகி கொடுப்பதில் அவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி “என இந்தப் பாடலுக்கு அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர்.இது அவருடைய மிகச் சிறந்த பாடலெனவும் கூறப்படுகிறது.

“ராகி தந்தீரோ பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரோ
அன்னதான மாடுவராகி அன்னசத்ராவணிதவாராகி
குருகள் சேவைய மாடுவராகி
புரந்தரவிட்டலன சேவிப்பவராகி
போக்யராகி யோக்யராகி பாக்யவந்தராகி
ராகி தந்தீரா பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரா”

ஒவ்வொரு நாளும் நல்லநாளே.திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம் ஆகியவை பற்றியெல்லாம் மனிதர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.கடவுளை வழிபட்டால் எல்லா நாளும் நல்லநாளாகும் என்ற மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையான முறையில் “இந்த தினம் சுபதினம்[’ஈ தின சுபதின ’] இந்த நட்சத்திரம் சுபநட்சத்திரம் “என்ற பாடல் காட்டுகிறது.“மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது வானவில்லைப் போல பல்நிறம் கொண்டதாக, கவர்ச்சி யானதாகத் தெரிகிறது.ஆனால் அவையெல்லாம் மாயையே என்பதை அவர்களுக்கு நினைவு படுத்தும் வகையில் .”யாருக்குக் கவலை” என்ற பாடலில் [’யாரிகே யாரெந்து ’] எந்த நேரமும் உடையும் நீர்க்குமிழியைப் போல உள்ள வாழ்க்கையில் யாரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். யானைகள்,குதிரைகள், கஜானா, நாடு,கௌரவம், புனிதமான உறவுகள்,நட்பு எல்லாம் மாயையும் ,குறைவான ஆயுளும் உடையவைநிரந்தமற்ற தன்மையை உணர வைப்பது அவர் கருத்தாகிறது.என்ன சாதியாக ,இருந்தாலும மனித நேயத்தைப் புரிந்து கொள்ளா விட்டால் என்ன பயன் .வெவ்வேறு நிறமுடைய பசுக்கள் தரும் பாலும், வெவ்வேறு வடிவங்கள் கொண்ட கரும்பின் சுவையும் வித்தியாசப்பட முடியுமா? தோற்றத்திலிருக்கும் வேறுபாடு யாருடைய தன்மையையும், பக்குவத்தையும் மாற்ற முடியாது என்பது அவரது கொள்கை.
தீண்டாமை அவரால் பொறுக்க முடியாததாகிறது.பிறந்த சாதியை வைத்து மனிதன் தீண்டத்தகாதவன் என்று முத்திரை குத்துவது சரியல்ல.அவன் செயல்பாடுகள்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.தீண்டாமை என்பது தொடுவுணர்ச்சியை முன் வைத்து அமையும் பொருளல்ல என்றொரு பாடல் சொல்கிறது. [ ’ஹொலையா ஹொரகிதனே ’} சுயஒழுக்கமில்லாதிருப்பது, செல்வனாக இருந்து கொண்டு பொருள்தர மறுப்பது, மென்மையான பேச்சைப் பயன்படுத்தத் தெரியாமலிருப்பது இறுதியில் புரந்தர விட் டலனை வணங்காமலிருப்பது ஆகியவைகள்தான் அவர் பார்வையில் தீண்டாமையாகும். புரந்தரதாசனின் அக்கருத்து நம் சமூகத்தின் தீண்டாமைக்குத் தரும் அடியாகும்.புரந்தர விட்டல என்பது எந்தக் கடவுளுக்கும் பயன்படுத்தப்படும் பெயராகும் என்ற கருத்தையும் அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

புரந்தரதாசர் சிறந்த கணக்குப்பிள்ளையும் கூட.நல்ல செயல்களைச் செய்யும் போதும்,கெட்ட செயல்களைச் செய்யும் போதும் ஒருவன் தன் மனதையே தணிக்கை செய்து கொள்ளவேண்டும் மனம்தான் தணிக்கைக் கருவி என்கிறார்.”மனதைச் சோதித்துக் கொள்” [”மனவ சோதிசபேக்கு” ] என்ற பாடல் இதைக் காட்டுகிறது பாடல் இப்படித் தொடங்குகிறது.”எல்லா ஹரிதாசர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை அழைப்பு. நேரம் குறைந்துவிட்டது. நூறுஆண்டுகள் ஆயுளாக இருந்தால் ஐம்பதாண்டுகள் தூக்கத்தில் போய்விடுகிறது.மீதமுள்ள ஐம்பதாண்டுகளில் முதல் பதினைந்து ஆண்டுகள் அறிவுக் குறைவான இளமையிலும்,கடைசி இருபத்தைந்தாண்டுகள் முதுமையிலும் கழிகின்றன.இடையிலுள்ள இளமையான நிலையிலுள்ள இருபதாண்டுகள் இளரத்தம் என்பதால் மனம் அரேபியக் குதிரை போல உலகத்து ஆசைகளை நோக்கி ஓடுகிறது.இப்படி இருந்தால் எந்த நேரத்தில் கடவுளை நினைத்து வாழமுடியும்’.என்று பாடல் அமைகிறது.

சில கருத்துக்கள் பழமொழி போல சமுதாயநலம் சார்ந்து அமைகின்றன.”வயது முதிர்ந்தவனோடு திருமண உறவுக்கு எதிர்ப்பு, இரு மனைவியர் வாழ்க்கைக்கு எதிர்ப்பு, கீழ்ச்சாதி வந்தான் என்ற பேச்சுக்கு எதிர்ப்பு ” எனச் சமூக அவலங்களை அகற்ற முயல்கிறார். ’லம்போதர லகுமிரா’, ’கஜவதனா பேடுவே’,’பாக்யதலட்சுமி பாரம்மா ”,என்று எல்லோரும் அறிந்த சில பாடல்கள் அவருடைய எளிமை நடைக்கும், எவரும் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் சான்றுகளாகும் புரந்தரதாசருக்குப் பின்வந்தவர்கள் அவர் மரபையே பின்பற்றினர்.இன்றும் அது தொடரப்படுகிறது..தியாகராஜரும் ராகம்,பாவம்,தாளம்.என்று புரந்தரதாசர் வழியைத் தொடர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’தாசர் என்றால் புரந்தரதாசர்தான்”என்ற அடைமொழியோடு கன்னட மண்ணில் இன்றும் போற்றப்படுபவராக உள்ள அவரையும் ,கனகதாசரையும் இணைத்து ’கனக புரந்தரா’ என்ற செய்திப்படம் ஒன்று கிரீஷ் கர்னாடால் இயக்கப்பட்டுள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *