-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

குறள் 21:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

ஒசத்தி னு படிச்ச பெருமக்களோட நூல்கள் சொல்லுதது எல்லாம் ஒலகத்து ஆசையெல்லாம் தொறந்த துறவிங்கள பத்திய பெருமையத்தான்.

குறள் 22:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

ஆசையெல்லாம் விட்டவங்களோட பெருமைய அளக்குதது ஒலகத்துல செத்தவங்க எத்தன பேரு னு எண்ணுததுக்கு சமானம்.

குறள் 23:

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

நல்லது கெட்டத ஆஞ்சு அறிஞ்சு பொறவு நல்லதையே செய்யற மனுசங்க தான் ஒசத்தியானவங்க.

குறள் 24:

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பு இந்த அஞ்சு பொறியால விளையுத ஆசைய அதோட போக்குல உடாம மன திடங்குத அங்குசத்தால அடக்குதவன துறவறம் ங்குத நிலத்துக்குண்டான விதை மாதிரி நெனைச்சிக்கிடலாம்.

குறள் 25:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி இந்த அஞ்சுபுலனால விளையுத ஆசைய அடக்கி இருக்கவனக்கு உதாரணம் சொல்லணும்னா அது வான லோகத்துல இருக்க தேவர்களோட ராசா இந்திரன் தான்.

குறள் 26:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

மத்தவங்களால செய்ய முடியாதத ஒருத்தன் செய்தாம்னா அவந்தான் ஒசந்த ஆள். அப்டி செய்யாதவன் தாழ்த்திதான்.

குறள் 27:

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி இந்த அஞ்சு புலனையும் அறிஞ்சு அத அடக்கி ஆளுதவன இந்த ஒலகம் ஒசத்தியா பேசும்.

குறள் 28:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

ஒசந்த படிப்பாளி மக்களோட பெருமைய ஒலகத்துல அழியாம வெளங்குத அவங்களோட நூல்களே காட்டிக் கொடுத்துடும்.

குறள் 29:

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது

நல்ல குணத்த மல போல கொண்டிருக்குத பெரிய மனுசங்க கோவப்பட்டாங்கன்னா அவங்க மனசுல அந்த கோவம் ஒரு கணம் கூட நெலைச்சு நிக்காது.

குறள் 30:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

எல்லா உயிர்கிட்டயும் நேசத்தோட பாசங்காட்டுத நல்ல மனுசங்க (அறவோர்) யாரோ அவர தான் நாம அந்தணர் னு சொல்லுதோம்.

******************************

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *