-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 5 – இல் வாழ்க்கை

 

குறள் 41:

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

வாழ்க்கைல பெத்தவங்க, பிள்ளைங்க, பொஞ்சாதி எல்லாருக்கும் நல்லது செய்து தொணையா இருக்கவன் தான் நல்ல படியா குடும்பம்  நடத்துதவன் .

 

குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

எல்லாத்திலயும் ஆசைய விட்டவனுக்கும், தங்கிட்ட இல்லன்னு கேக்குதவனுக்கும், ஏழைக்கும் குடும்பத்தோட வாழுதவன் தொணையா இருக்கணும்.

 

குறள் 43:

தென்புலத்தார் தெய்வம் விரு ந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை

தனக்கு,, சொந்தக்காரங்களுக்கு, விருந்தாளிக்கு, தேவர்களுக்கு, இறந்தவங்களுக்கு செய்ய வேண்டியத சிறப்பா செய்யணும்.

 

குறள் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

வாழ்க்கையோட ஒழுக்கங்கறது பழி பாவத்துக்கு அஞ்சி பொருள் சேக்குததும், சேத்தத பங்குபோட்டு குடுத்து வாழுததுலயும் இருக்கு.

 

குறள் 45:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

குடும்ப வாழ்க்க பண்பும் பயனும் உள்ளதா இருக்கதுக்கு அன்பான மனசோட நல்ல செயல செய்யணும்.

 

குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

நல்ல தனமா குடும்பம் நடத்துதவனுக்கு கெடக்குத பயன் வேறவழில கெடைக்குமா? கெடைக்காது.

குறள் 47:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

குடும்பத்தோட நல்ல வாழ்க்கை வாழுதவனால மட்டுந்தான் கடவுள பத்தி  அறிஞ்சிக்கிட்டு அவர அடைய முடியும்.

 

குறள் 48:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

பிறத்தியார நல்லா வாழ வச்சி தானும் நல்லபடியா குடும்பத்தோட வாழுதவனோட வாழ்க்க துறவிங்க கடைபிடிக்க நோன்ப விட ஒசந்தது.

 

குறள் 49:

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

குடும்பத்தோட வாழுத  வாழ்க்கையத் தான் ஒசந்த அறம் னு சொல்லுதாங்க. அதுவும் மத்தவங்க குத்தம் குறை சொல்ல முடியாததா இருந்துச்சுன்னா நல்லது.

 

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

 

குடும்பத்தோட வாழுத ஒருத்தன் பூமியில இருந்தாலும் அவன மேலோகத்துல  வாழுத தேவர்கள் ல ஒருத்தனப் போல தான் மதிப்பாங்க.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *