-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 8 – அன்புடைமை

 

குறள் 71:

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்

நேசத்த தாள் போட்டு அடைச்சு வைக்க முடியுமா.  தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு துன்பம் வரும்போது அவுங்க கண்ணுலேந்து தானா வடியுத கண்ணீர வச்சு நேசஉள்ளத்த தெரிஞ்சுக்கிடலாம்.

குறள் 72:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

நேசம் இல்லாதவங்க எல்லாப் பொருளும் தனக்கு தான் சொந்தம்னு நெனைப்பாங்க. நேசம் உள்ளவங்களோ பொருள் மட்டுமில்லாம தங்களோட ஒடம்பும் மத்தவங்களுக்குதான் னு நெனைப்பாங்க.

குறள் 73:

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு

உயிரும் ஒடலும் போல நேசமும் செயலும் சேந்து இருக்குதது தான் ஒசந்த பொருத்தம்.

குறள் 74:

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

விரும்பி வாழுத தன்மைய கொடுக்குதது நேசம். அது பிறத்தியார் கிட்ட சேக்காளியா இருக்கவும் ஒதவும்.

குறள் 75:

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

ஒலகத்துல சந்தோசமா வாழுத ஒசத்தியான வாழ்க்கைதான்  நேசத்தோட வாழுத குடும்ப வாழ்க்கையினால வெளையுத லாபம்

குறள் 76:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

நல்லதுசெய்யுததுக்கு மட்டுந் தான் நேசம் தொணையா நிக்கும் னு புரிஞ்சுகிடாதவங்க சொல்லுவாங்க. வீரத்துக்கும் அது தொணையா நிக்கும்.

குறள் 77:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

எலும்பு இல்லாத ஒடம்பு உள்ள புழுவ வெயில் எப்டி வாட்டி வதைக்குதோ அது மாதிரி நேசம் இல்லாத உயிர அறக்கடவுள் வாட்டி வதைப்பாரு.

 குறள் 78:

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

மனசுல நேசமே இல்லாம வாழுத குடும்ப வாழ்க்க பாலைவனத்துல இருக்க பட்டு போன மரம் மறுபடி துளித்து இலை விடுததுக்கு சமம்,.

குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

ஒடம்புக்குள்ள இருக்க உறுப்பான நேசம் இல்லாதவங்களுக்கு வெளிய இருக்க அழகான உறுப்புக்களால என்ன பிரயோசனம்.

குறள் 80:

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

நேசமான உள்ளத்தோட இயங்குதது தான் உயிரோட இருக்க இந்த ஒடம்பு.  நேசமில்லாதவங்களோட ஒடம்பு வெறும் எலும்புக்கு மேல தோல போத்தி வச்ச வெறும் ஒடம்பு தான்.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *