செண்பக ஜெகதீசன்

எனைத்துங் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ

மன்றிற் பழிப்பார் தொடர்பு.

-திருக்குறள் -820(தீ நட்பு)

 

புதுக் கவிதையில்…

 

தனியே வீட்டிலிருக்கையில்

தணியாத நட்புடன் இருப்பதாய்க் காட்டி,

பலரோடு அவையிலிருக்கையில்

பழித்துப் பேசுவோர் நட்பு,

கொஞ்சமும் நம்மை

அணுகவிடவே கூடாது…!

 

குறும்பாவில்…

 

வீட்டிலே நட்புடையோர்போல நடித்து

மன்றத்திலே பழித்துப்பேசுவோர் தொடர்பு,

மிகச்சிறிதாயினும் தவிர்த்திடுக…!

 

மரபுக் கவிதையில்…

 

வீட்டில் தனியே இருக்கையிலே

வேண்டிய நண்பராய்ப் பழகியபின்,

கூட்டமாய் அவைதனில் உளநேரம்

குறைகள் பலவும் கூறியேதான்

காட்டமாய்ப் பழித்துப் பேசுவோர்தம்

கூட்டு யென்றும் வேண்டாமே,

காட்டும் நட்பு சிறிதெனிலும்

கொள்ளா ததனைத் தவிர்ப்பீரே…!

 

லிமரைக்கூ…

 

நட்பாவார் வீட்டில் தனியே,

மன்றினில் பழிப்பார், அவர்தம் நட்பு

சிறிதெனிலும் வேண்டாம் இனியே…!

 

கிராமிய பாணியில்…

 

வேண்டாம் வேண்டாம்

கெட்டவுங்க நட்பு,

வேதனதரும் கெட்டநட்பு

வேண்டவே வேண்டாம்..

 

தனியா வீட்டில இருக்கயில

தொணயா நல்ல

நண்பனா நடிச்சவந்தான்,

சபயில கூட்டமா இருக்கயில

பழிச்சி நம்மப் பேசுனாண்ணா,

இனிமேலும் அவன்தொடர்பு

கொஞ்சங்கூட வேண்டாமே..

 

அதால

வேண்டாம் வேண்டாம்

கெட்டவுங்க நட்பு,

வேதனதரும் கெட்டநட்பு

வேண்டவே வேண்டாம்…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *