இளமையிலும் காதல் வரும்
முதுமையிலும் காதல் வரும்
எக்காதல் இனிமை என்று
எல்லோரும் எண்ணி நிற்பர்
இளமையிலே வரும் காதல்
முதுமையிலும் தொடர்ந்துவரின்
இனிமைநிறை காதலென
எல்லோரும் மனதில் வைப்போம்
காதலுக்குக் கண்ணும் இல்லை
காதலுக்குப் பேதம் இல்லை
காதல் என்னும் உணர்வுதனைக்
கடவுள் தந்தார் பரிசெனவே!
காதலிலே மோதல் வரும்
காதலிலே பிரிவும் வரும்
என்றாலும் காதல் எனில்
எல்லோரும் விரும்பி நிற்பார்!
காதல் என்று சொன்னவுடன்
கவலை எல்லாம் ஓடிவிடும்
கனவுபல தோன்றி வந்து
கண்ணுக்குள் புகுந்து நிற்கும்
கற்பனையில் உலா வந்து
களிப்புடனே நாம் இருப்போம்
காதல் என்னும் உணர்வில்லார்
கல்லினுக்கே சமம் ஆவார்
காவியத்தில் காதல் வரும்
ஓவியத்தில் காதல் வரும்
கல்வியிலும் காதல் வரும்
காசினிலும் காதல் வரும்
அக்காதல் கொள்ள மனம்
ஆசை பட்டு நின்றாலும்
அழகு மங்கை தரும்காதல்
அனைவருக்கும் பிடிக்கும் அன்றோ
மனித குலம் முழுவதற்கும்
மகிழ்வு எனும் மருந்தாக
வரமாகக் காதல் அது
வந்து அமைந்து இருக்கிறது
புவிமீது நாம் வாழப்
பொலிவு தரும் அமிர்தமென
காதல் எனும் கனியமுதைக்
கடவுள் எமக்களித்துள்ளார்!
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.