சேக்கிழார் பா நயம் – 26
-திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி .
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன “முன்னே
மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
மாட்சியில் காட்ட வைத்தேன்” என்றனன் மாயை வல்லான்.
அடிமை ஓலை உண்டு என்று முதிய அந்தணர் கூறக் கேட்ட சுந்தரர் ‘’ஆளோலை உண்டு!’’ என்று கூறிய இவ்வந்தணர் மொழியின் உண்மையை அறிந்து கொள்ளும் அவாவினராய் அவரைநோக்கி `ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டுக! உண்மையை அறிவேன்` என்றார்.
`நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி உடையவனா? அதனை இவ் அவையோர் முன்னிலையில் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் எனக்கு நீ அடிமைத் தொழில் செய்தற்கே உரியவன்` என்றார் அந்தணர். அம்மொழிகேட்டு வெகுண்ட நம்பிகள் விரைந்தெழுந்து அவ்வேதியர் கையிலுள்ள ஓலையைப் பறிக்கச் சென்றார். அந்நிலையில் அம்முதியவர் விரைந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து நம்பியாரூரரும் ஓடினார். மாலும் அயனும் தொடர ஒண்ணாத அவரைவலிந்து பின்தொடர்ந்த ஆரூரர் அம் முதியவர் கையிலுள்ள ஓலையைப்பறித்து `அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை` என்று சொல்லிக் கொண்டு அவ்வோலையைக் கிழித்து எறிந்தார்.
இந்த இடத்தில் மையல் மானுடமாய் சுந்தரர் தவறு செய்யத் தொடங்கி விட்டார். ஓலையைப் பறிகொடுத்த முதியவர் `இது முறையோ முறையோ` வெனக் கூவி அழுதரற்றினார். அதனைக்கேட்ட அங்குள்ளவர்கள் அவ்விருவரையும் விலக்கினர். முதியவரை நோக்கி `உலகில் இதுவரை இல்லாத இவ்வழக்கைக் கொண்டுவந்து நிற்கும் முதியவரே! நீர் வாழும் ஊர் எது` என்று வினவினர். அதுகேட்ட முனிவர் `நான் வாழும் ஊர் நெடுந்தொலைவிலுள்ள தன்று; மிகவும் அண்மையிலுள்ளதாகிய திருவெண்ணெய் நல்லூரேயாகும். நம்பி யாரூரனாகிய இவன் என்கையிலுள்ள ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்தெறிந்துவிட்டான். அதன் மூலமாக அவன் என் அடிமை என்ற உண்மையை உறுதிப்படுத்திவிட்டான்` என்றார். அம் மொழிகேட்ட நம்பியாரூரர் இம் முதியவர் வழக்காடுவதில் பழக்கப்பட்டவர் போலும் என்று தம்முள் எண்ணி அம் முதியவரை நோக்கி `நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராய் இருக்கு மானால் உமது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக்கொள்வோம்` என்றார்.
முதியவர் `நீ திருவெண்ணெய்நல்லூர்க்கு வந்தாலும் நான்மறை உணர்ந்த அவையத்தார் முன்னிலையில் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்துவேன்` என்று கூறிக் கோலை ஊன்றிக் கொண்டு முன்னே சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நம்பியாரூரரும் சென்றார். இவ்வழக்கு என்னாகுமோ எனக் கலங்கிய நிலையில் சுற்றத்தாரும் உடன் சென்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் அவையில்:
திருவெண்ணெய் நல்லூரை அடைந்த முதியவர், அந்தணர் நிறைந்த பெரும் சபையின் முன் சென்றார். அவையத்தாரை நோக்கித் `திருநாவலூரனாகிய இவன் என் அடியான். என் அடிமை ஓலையை வலிந்து பிடுங்கிக்கிழித் தெறிந்துவிட்டு உங்கள் முன் வந்துள்ளான். இதுவே என் வழக்காகும்` என்று கூறினார். அது கேட்ட அவையத்தார் `ஐயா! அந்தணர் மற்ற வர்க்கு அடிமையாதல் இவ்வுலகில் இதுவரை இல்லையே` என்றனர். இது பொருந்தாவழக்கு என்றும் தெரிவித்தனர். அம் முதியவர் அவர்களைநோக்கி `இவ்வழக்கு எவ்வாறு பொருத்தமற்றதாகும்? இவன் கிழித்த ஓலை அவன் பாட்டன் எழுதிக்கொடுத்ததாகும்` என்று கூறினார்.
அதைக்கேட்ட அவையோர் ஆரூரரை நோக்கி `நும் பாட்டனார் எழுதிக்கொடுத்த ஓலையை வலியவாங்கிக் கிழித் தெறிவது உனக்கு வெற்றிதரும் செயலோ? இம்மறையவர், தம் வழக்கைப் பொருத்தமாக எடுத்துக் கூறினார். உம்முடைய கருத்து யாது` என்று கேட்டார்கள்.
நாவலூரர் அவையோரைப்பார்த்துப் `பெரியோர்களே நான் ஆதிசைவ அந்தணன் என்பதை நீங்கள் அறிவீர்கள் முதியோராகிய இவ் அந்தணர் உலக வழக்குக்கு மாறாக என்னை அடிமை கொண்ட தாகச் சாதிப்பது மனத்தால் உணர்தற்கெட்டாத மாயையாக உள்ளது. இதைக் குறித்துத் தெளிந்து உணர என்னால இயலவில்லை எனக் கூறினார். அதைக்கேட்ட அவையத்தார் அம்மறையவரை நோக்கி `நம்பியாரூரரை அடிமைஎனக் கூறும் இவ்வழக்கிற்கு ஆட்சி, ஆவணம், சாட்சி என்ற மூன்றனுள் ஒன்றைக்கொண்டு உறுதிப் படுத்தல் வேண்டும்` என்று கூறினர்.
ஆட்சியில் , ஆவணத்தில், அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில், மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன “
முதியவர் `நாவலூரன் சினம் மிகுதியால் என் கையிலிருந்து பறித்துக்கிழித்த அடிமைச் சீட்டு படியோலையாகும். அதன் மூல ஓலையை அவையத்தார்முன் காட்டுதற்கென்றே போற்றிவைத் துள்ளேன். இவன் முன்போல் கிழித்தெறியாதபடி நீங்கள் பார்த்துக் கொள்வீரேயாயின் அவ்வோலையைக் காட்டுவேன்` என்றார்.
“முன்னே மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
மாட்சியில் காட்ட வைத்தேன்” என்றனன் மாயை வல்லான்.
அவையத்தாரும் அதற்கு உறுதியளித்தனர். முதியவர் மூல ஓலை யாகிய ஆவணத்தை அவையோரிடம் கொடுத்தார். கரணத்தான் ஓலையைப் படிக்கத் தொடங்கினான்.
இந்த அந்தணர் அவைநிகழ்ச்சிகளில், முதலில் அந்த முதிய அந்தணர், ‘’நின்ற இசைவால் யான் முன் உடையதோர் பெரு வழக்கு!’’ என்கிறார். இதனை இக்காலக் குற்றவியல் சட்டம், ‘’cause based on mutual agreement’’ என்று காட்டும். அடுத்து, சுந்தரர்,’’அந்தணர்மற்றோர்அந்தணருக்கு அடிமையாதல் இல்லை.’’ என்றார். இது, ஆட்சி வகையின் , சாதிக் செருக்கு எனப்படும் உலகியலைக் குறிக்கும். இதனை இக்காலச் சட்டம், ‘’cause based on common rights ‘’ என்று ஆவணப்படுத்தும்.அடுத்து சுந்தரர் அந்தணரைத் தொடர்ந்து விரட்டிச் சென்று , ஓலையைக் கவர்ந்து , கிழிக்கிறார்! இது செய்த தவறுக்கு மேலும் தவறு செய்தல் என்ற குற்றத்தின் பாற்படும். மேலும் இது , சாட்சியத்தைக் கலைத்தல் என்ற non bailable offence ஆகும். ‘‘அந்தணர், மற்றோர் அந்தணருக்கு அடிமை யாகலாம் ‘ என்பதற்கு ஆதாரம் evidance உண்டா? அதனை ஆட்சி conventional , ஆவணம் documental ,அயலார் தங்கள் சாட்சி witness ஆகிய மூவகை ஆதாரங்களுள் ஒன்றைக் காட்டுக’’ என்று அவையோர் கூறினர். அப்போது முதிய அந்தணர் என்னிடம் ‘மூல ஓலை’ original evidence உள்ளது! அதையும் சுந்தரர் கிழித்து விட்டால்? என்று கேட்கிறார். இதனைச் சட்டப் பாதுகாப்பு என்பர். அந்த ஓலையை வாங்கிய அந்தணர்கள் அவை மரபு தெரிந்த கரணத்தான் ஒருவரிடம் கொடுத்து அதன் உண்மை genuneness , தொன்மை antiquity ஆகியவற்றை ஆராயக் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் அந்தக்காலச் சோழரின் அமைச்ச ராகிய சேக்கிழாரின் நீதி , சட்டம் பற்றிய அறிவைக் காட்டும் நயம் மிகுந்துள்ளது!