-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

குறள் 141:

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்

மத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படுத அறியாம இந்த ஒலகத்துல அறத்தையும் பொருளையும் ஆஞ்சு அறிஞ்சவங்ககிட்ட கெடையாது.

குறள் 142:

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்

அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்பட்டு அவன் வீட்டு வாசல்ல போயி நிக்குதவன் மத்த எல்லா வழிலயும் பாவம் செஞ்ச கெட்ட மனுசன விட தாழ்த்தியானவன்.

குறள் 143:

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்

சந்தேகப்படாம நம்பி பழகின மனுசரோட பொஞ்சாதி மேல ஆசப்பட்டு தப்பா நடக்குதவனக்கு  உயிர் இருந்தாலும் செத்த பொணத்துக்கு சமந்தான்.

குறள் 144:

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

தினையளவு கூட யோசிக்காம அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படுதவரு எத்தாம் பெரிய மனுசனா இருந்தாலும் அவரோட மரியாத கெட்டுப் போவும்.

குறள் 145:

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

இது சுளுவான காரியம்னு நெனைச்சி அடுத்தவன் பொஞ்சாதிக்கிட்ட தப்பா நடக்குதவன் எப்பமும் மறஞ்சு போவாம நெலச்சு நிக்க பாவத்துக்கு ஆளாவான்.

குறள் 146:

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

அடுத்தவன் பொஞ்சாதிகிட்ட அத்து மீறி நடக்குதவன விட்டுபோட்டு பகை, பாவம், பயம், பழி ங்குத நாலும் விலகி போவாது.

குறள் 147:

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்

அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாதவன தான் அற வழில குடும்பம் நடத்துதவன்னு சொல்லுதோம்.

குறள் 148:

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு

மத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாம இருக்குதது அறம் மட்டுமில்ல. படிச்ச பெருமக்களுக்கு அது நெறஞ்ச ஒழுக்கமும் கூட.

குறள் 149:

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்

சுத்திவர கடல் இருக்குத இந்த ஒலகத்துல எல்லா நல்லதும் யாருக்கு கெடைக்கும்னு நெனைச்சு பாத்தோம்னா அது அடுத்தவருக்கு சொந்தமானவளோட தோள சேராம இருக்குதவருக்குதான்..

குறள் 150:

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

ஒருத்தன் நல்லது செய்யாம பாவத்தையே செய்யுதவனா இருந்தாக்கூடா அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாம இருக்குதது நல்லது.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *