-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 16 – பொறையுடைமை

குறள் 151:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

தம்மேல குழி தோண்டுதவன கீழவிழாம தாங்குத நெலம் போல தன்னைய எளக்காரமா பேசுதவனோட செயல கூட பொறுத்துக்கிடதுதான்  ஒசந்த கொணம்.

குறள் 152:

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று

அளவுக்கதிகமா செஞ்ச தீமயக் கூட பொறுத்துக்கிடணும். அத நெனைப்புல வச்சிக்கிடாம மறக்குதது பொறுத்துப் போவத விட நல்லது.

குறள் 153:

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

வறுமையிலயும் பெரிய வறும வந்த விருந்தாளிய சரியா கவனிக்காம உடுதது. வலிமையிலும் பெரிய வலிம புத்திகெட்டவங்களோட செயல  பொறுத்துக்கிடதது.

குறள் 154:

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

பொறுமையுள்ளவனா வாழுதவன தான் ஒலகம் நிறைவான மனுசன் னு சொல்லும்.

குறள் 155:

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

தனக்கு கெட்டது செய்தவன தண்டிச்சவங்கள பெரிய மனுசங்க ஒரு பொருட்டா மதிக்க மாட்டாங்க. பொறுத்துக்கிட்டவங்கள  மனசுக்குள்ளார வச்சி தங்கத்துக்கு சமமா மதிப்பாங்க.

குறள் 156:

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

தனக்கு கெட்டது செஞ்சவன தண்டிச்சவனுக்கு அன்னிக்கு மட்டுந்தான் சந்தோசம். அத பொறுத்துக்கிட்டவனுக்கு ஒலகம் அழியற வர புகழ் நெலச்சி நிக்கும்.

குறள் 157:

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று

மத்தவன் நமக்கு கொடுமைய செஞ்சாலும் அத திரும்ப செஞ்சோம்னா அவனுக்கு நோவுமே ன்னு நெனச்சி பழி வாங்காம விடுதது நல்லது.

குறள் 158:

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்

அகராதியால (ஆணவம்) அக்கிரமம் செய்யுதவங்கள நாம நம்மளோட  பொறும கொணத்தால செயிச்சிடலாம்.

குறள் 159:

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

அத்துமீறி நடந்துகிடுதவங்க பேசுத கடுஞ் சொல்ல பொறுத்துக்கிட்டவங்க குடும்ப வாழ்க்க வாழ்ந்தாலும் எல்லாத்தையும் துறந்த தூய துறவிக்கு சமானம் தான்.

குறள் 160:

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்

சோறு திங்காம நோன்பு இருக்கவங்களுக்கு இருக்க மதிப்பு கூட கடுஞ்சொல்ல பொறுத்துகிட்டவங்களுக்கு அடுத்தபடியா தான்.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *