[நூல் அறிமுகம்] (Peer Reviewed) ஆனந்த் நீலகண்டனின் ”Vanara: The Legend of Baali, Sugreeva and Tara”: மாற்றி யோசிக்கப்படும் பழைய கதையின் யதார்த்தம்

0

முனைவர் ம.பிரபாகரன்,
இளநிலை ஆய்வாளர்,
பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (EFEO),
புதுச்சேரி.

ஆனந்த் நீலகண்டனின் ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ”: மாற்றி யோசிக்கப்படும் பழைய  கதையின் யதார்த்தம்

சென்ற ஆண்டு(2018)  வெளியான ஆனந்த் நீலகண்டனின்  ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ” ( 304 pages, Published November 14th 2018 by Penguin Random House) என்ற ஆங்கில நாவலைச் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதனை ஆய்வு நோக்கில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற  என் அவாவே இக்கட்டுரை. கட்டுரையைத் தொடங்குவதற்கு முன் இந்நாவலை எழுதிய  ஆனந்த் நீலகண்டன் பற்றிய  குறிப்பைத்  தருவது பயனுடையதாயிருக்கும் என்று கருதுகிறேன்.

பின்வரும் ஆசிரியர் குறிப்பு விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.

ஆனந்த் நீலகண்டன்:

Anand Neelakantan (born 5 December 1973) is an Indian author,columnist, screenwriter, television personality and motivational speaker. He has authored four fiction books.His debut work Asura, The Tale of the Vanquished is based on the Indian epics of Ramayana. His next book series was Ajaya-Roll of the Dice , Ajaya – Rise of Kali based ,the two books on the epic Mahabharata told from Kaurava perspective. Anand’s books voice the suppressed party or the defeated party.

Anand Neelakantan also had signed with The producers of Baahubali, the blockbuster film for a 3 book Series based on their film Baahubali and the series will be a prequel to the film. The first book of this trilogy , Rise of Sivagami was released in March 2017. Netflix has announced a webseries on the book. His books have been translated to different languages such as Hindi, Malayalam, Tamil, Telugu, Kannada, Marathi, Bengali ,Gujarati, Assamese and Indonesian Bahasa.

Anand’s Asura is one of the 100 books to be read in a life time as per Amazon. The book has sold more than half a million copies across the years. Three of Anand Neelakantan’s books have been shortlisted for crossword award during the respective years and he is also listed as one among the 100 top celebrities in India in 2015, 2017 by ForbesIndia. All his books have got critical accreditions from various people across the world

Anand also writes a column for New Indian Express on current affairs and his fortnightly column is called Acute Angle (நன்றி- விக்கிப்பீடியா)

வானரா என்ற இந்த நாவல், பழைய இராமாயணத்தில் சொல்லப்பட்ட வாலி, சுக்ரீவன் கதையைத் தலைகீழாக யோசித்திருக்கிறது அல்லது மாற்றி யோசித்திருக்கிறது. நமக்கெல்லாம் இராமாயணத்தில்  வாலி என்று சொன்னவுடன், அவன், தன் தம்பி சுக்கீரிவனின்  மனைவி ரூமா மீது  கொண்ட  மோகத்திற்காக,  அவனை அடித்து விரட்டி விட்டு, தம்பி மனைவியை அபகரித்துக்கொண்டான்; அவன் எவ்வளவுதான் வீரனாக இருந்தாலும்  தம்பி மனைவி மீது ஆசை கொண்டதால் அவன்  ஒரு துஷ்டன் என்ற கருத்தே ஞாபத்திற்கு வரும். ஏனென்றால் வால்மீகி, கம்பன் ஆகியோர் எழுதிய இராமாயணத்தில் வாலி பற்றி அப்படி ஒரு பார்வையே காணப்படுவதாலும் அது நமக்கு சிறு வயதிலிருந்தே திரும்பத் திரும்ப கதைகளின் வாயிலாகவும் பாடங்களின் வாயிலாகவும் தொலைக்காட்சித் தொடர்களின் வாயிலாகவும்  சொல்லப்பட்டதாலும் வாலியைப் பற்றி அப்படி ஒரு கருத்து நம்முள் நிலைத்துவிட்டது.

தமிழில், பழைய இராமாயண வாலியை அடியொற்றி ”வாலி” என்றொரு சினிமா எடுக்கப்பட்டதும், அது பெரிய வெற்றியைப் பெற்றதும் இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது. இராமாயணம் நடந்த கதையல்ல என்று கூறுவாரும் அது நடந்த கதையே என்று கூறுவாரும் உள்ளனர். அது நடந்த கதையோ, நடக்காத கதையோ அதுவல்ல நம் பிரச்சினை. எந்தக்  கதையும் திடீரென்று தான்தோன்றியாக உருவாகிவிட முடியாது. எல்லாக் கதைகளுக்கும் சமூக அடிப்படையும் சமூக உளவியலும் உண்டு என்பதை மறுக்க முடியாது.

ஒரு கதை ஏன் படைக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? என்று பார்ப்பதும் ஒரு கதை எந்தச் சூழலில் இருப்பவர்களால் எழுதப்படுகிறது? என்று கவனிப்பதும் மிகவும் அவசியமானதாகும். நோக்கத்திற்காகவே கதை எழுதப்படுமா? அது எப்படி? படைப்பாளி தான் கண்டதை எழுதுகிறான். அது எப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கிற்காக எழுதப்பட்டது என்று கூற முடியும்? என்று கேட்கலாம். நோக்கத்திற்காக எழுதப்பட்ட கதைகளும் உண்டு. நோக்கம் சூழலில் மறைந்து கிடக்கும் கதைகளும் உண்டு. சூழல் சுயேச்சையாக இயங்கும் தன்மை உடையது என்று மார்க்ஸ் கூறுவதை இவ்வண் கருதுக.

இராமனைத்  தன் கதையில் கடவுளாக்க ஆசைப்பட்டவர் வால்மீகி என்பர். இராமனை மனிதனாகக் காண விரும்பியவர் கம்பன் என்பர். இப்படி படைப்பளர்களின் விருப்பம் கதையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.  எங்ஙனமாயினும்  கதைகளுக்கு  நோக்கம் இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. நிற்க.

வானரா நாவல், பழைய இதிகாச கதையைக் கருவாகக் கொண்டது ஆகையால், ஏன் இதிகாச, புராணக் கதைகளை ஏன் திரும்பித் திரும்பி எழுத வேண்டும் என்ற விமர்சனத்தையும் இவ்விடத்தில் நினைவு கூர வேண்டியிருக்கிறது. வால்மீகி இராமாயணத்தை எழுதி முடித்த பிறகு ஏன் கம்பன் அதை  மீண்டும் தமிழில்  எழுதினார்? ஏன் பல்வேறு மொழிகளில் இராமாயணம் திரும்பத் திரும்ப எழுதப்பட்டது? வியாசர் எழுதியதற்குப் பிறகு மகாபாரதமும் மீண்டும்  பலமுறை பல்வேறு மொழிகளிலும்  எழுதப்பட்டுவிட்டனவே ஏன்  தற்போது மகாபாரதத்தை ஜெயமோகன் திரும்ப எழுதுகிறார்? என்ற கேள்வி இங்கு நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

இன்று புராணக் கதைகள், இதிகாசக் கதைகள் போன்றவை, தொலைகாட்சித் தொடர்களாக ஏன் மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகின்றன? அதற்கான சமூகத்  தத்துவப் பின்புலம் என்ன? என்று நாம் கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால்  சமூகத்தின் உளவியலைப் புரிந்து கொண்டால்தான் கடந்த கால கதைகளுக்கு நிகழ்கால அர்த்தம் உண்டு என்பதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அப்போது பழைய கதைகள் மீண்டும் மீண்டும் எழுதுவதற்கான தேவையையும் அதற்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

பழைய கதைகளைத் திருப்பி எழுதும் போது பெரும்பாலும் இரண்டு வித போக்குகள் பின்பற்றப்படுகின்றன. முதலாவது, இருக்கும் கதையை அப்படியே திருப்பிச் சொல்வது, இரண்டாவது பழைய கதையை நிகழ்கால அரசியல், சமூகப் பண்பாட்டினை விளக்கப் பயன்படுத்துவது. இவற்றுள் ஆனந்த் நீலகண்டனின் ‘ வானரா ‘ என்ற இந்த நாவல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது எனலாம்.

இந்தியாவின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூகப் பண்பாட்டினை விமர்சன பூர்வமாக அவர்  வாலியின் கதையின் மூலம் விளக்கும் திறம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தியாவில் மக்கள் உளவியல் உருவாக்கத்தில் தொன்மக் கதைகள் வகிக்கும் பெரும் பங்கை யாரும் மறுத்துவிட முடியாது. அதே போல இந்திய வரலாற்று உருவாக்கத்திலும் தொன்மக் கதைகள் வகிக்கும் பங்கு கணிசமானது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட ஆனந்த் நீலகண்டன், தற்கால அரசியல், சமூகப் பண்பாட்டை  விமர்சனப்பூர்வமாக அணுகுவதற்கு இதிகாச கதையாகிய வாலியின் கதையை அல்லது  கிஷ்கிந்தை படலத்தைப் பயன்படுத்துகிறார்.

இந்த முறைமையைத்தான் அவர் இவருடைய முந்தைய நாவல்களான அஜயா (இரண்டு புத்தகங்கள்), அசுரா ஆகிய நாவல்களுக்கும் பயன்படுத்தியிருந்தார். வரலாறு சொல்லப்பட்ட கதைகளில் மட்டுமே இல்லை; சொல்லப்படாத அவற்றின் பக்கங்களிலும் இருக்கும்; அவ்வரலாறு, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்குரிய உண்மையான வரலாறாகவும் இருக்கும் என்பதையே ஆனந்த் நீலகண்டனின் வானரா என்னும் இந்நாவல் மட்டுமல்ல, இவரின் முந்தைய நாவல்களும் கூறுகின்றன.

நிகழ்ந்து நடந்து முடித்துவிட்ட நிகழ்ச்சிகள், கதைகள் போலவே சொல்லப்படுகின்றன. நேற்றைக்கு நடந்த ஒரு விபத்தை நேரிலே பார்த்தவர் இன்னொருவரிடம் அதைச் சொல்லும் போது அதைக் கதை போலவே சொல்கிறார். நாம் இங்கு என்ன சொல்ல வருகிறோம் என்றால் இறந்தகால நிகழ்ச்சிகள் நிகழ்காலத்தில் சொல்லப்படுகிற போது, அவை கதைகளாகவே மாறிவிடுகின்றன. அதைச் சொல்பவர்களின் நோக்கங்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.

ஒரு நிகழ்ச்சி  இரண்டு பேரால் சொல்லப்படும் போது அல்லது பலரால் சொல்லப்படும் போது வேறு வேறு வகையில் சொல்லப்பட வாய்ப்புண்டு. விருமாண்டி படத்தில் ஒரே கதை  கொத்தாளத்  தேவரால் (பசுபதி) சொல்லப்படும் போது  விருமாண்டிக்கு (கமல்ஹாசன்) எதிரானதாக அமைந்து   விருமாண்டியை வில்லனாக காட்டும். அதே கதை விருமாண்டியால் சொல்லப்படும் போது அது கொத்தாளத் தேவரை வில்லனாக காட்டும். இங்குப் பார்வையாளர் என்ன நினைக்கிறார். கொத்தாளத்தேவர்  சொல்வது சரியா? விருமாண்டி சொல்வது சரியா? படத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் சூழல்களின் பின்னணியில்  விருமாண்டியை நல்லவனாகவும், கொத்தாளத் தேவரை வில்லனாகவும் புரிந்துகொள்ள பார்வையாளரைத் தூண்டும். இதில் முடிவு எடுக்க வேண்டியவர் பார்வையாளரே. இது போன்ற ஒரு பார்வைதான் இந்த வானரா நாவல் என்று கூறலாம்.

வால்மீகியும், கம்பனும் பார்த்த பார்வையிலிருந்து வேறுபட்டு ‘வாலி’யை இவர் பார்க்கிறார். பெண்ணால் வீழ்ந்தவர்கள் என்று கூறப்படும் புராண நாயகர்களுள் வாலியையும் ஒருவராக வைத்துச் சொல்வது வழக்கம். ஆனால் இந்நாவலைப் படித்தால் வாலி, பெண்ணால் வீழவில்லை. சுக்ரீவனின் துரோகத்தால் விழுந்தார் என்பது  ஒருவரின் சிந்தனையில் பசுமரத்தாணி போல் பதியும். ஏனென்றால் இந்நாவலில் சுக்ரீவனின் மனைவி மீது வாலி இச்சை கொள்ளவில்லை. மாறாக  வாலியின் மனைவி  ‘ தாரா ‘ மீதுதான் சுக்ரீவன் இச்சை கொண்டு வாலியின்  வீழ்ச்சிக்குக் காரணமாகிறார். சுருக்கமாக இந்நாவலின் கதையைச் சொல்ல முயல்வோம்:

சுக்ரீவன், தாராவை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஆனால் தாரா, வாலியைத் தீவிரமாகக் காதலிக்கிறார்;  தாராவின் அன்பால் நெகிழ்ந்த வாலி, அவளை மணமுடிக்கிறார். அதன் பின்னும் சுக்ரீவன், தாரா மீது கொண்ட இச்சையை விடவில்லை. அண்ணன் வாலி, தம்பியை மிகவும் நம்புகிறார். ஆனால் தம்பி சுக்ரீவன், அண்ணன் மனைவி என்று தெரிந்த பின்னரும் தாராவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணுகிறார். ஒரு கட்டத்தில் தாராவை அடைவதற்கு வாலிக்குக் கள்ளில் நஞ்சு கலக்கும் அளவுக்குக் கூட போய்விடுகிறார் சுக்ரீவன். இது தாராவுக்கு தெரிகிறது. இருந்தும் வாலியிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் வாலி, தம்பியை மிகவும் நம்புகிறார்.

எனினும்  கடைசியில்  ஒருவழியாக வாலி, சுக்ரீவனின் இச்சையை அறிந்து கொள்கிறார். அவரை அடித்து உதைத்து நாட்டை விட்டுத் துரத்துகிறார். சுக்ரீவன் வாலியுடன் சண்டைக்கு வரும் நேரத்தில் எல்லாம் வாலி அவரை நன்றாக அடித்து உதைத்தாரே தவிர, ஒருபோதும் கொல்லத் துணியவில்லை. காரணம்,  தம்பி சுக்ரீவன்  மீது அவருக்கு அவ்வளவு அன்பு. இதை ஒருமுறை வாலியே தாராவிடம் கூறுகிறார். தன் தம்பியை அடித்து விரட்டிய பிறகு தம்பி மனைவி ‘ரூமா’, சுக்கிரீவன் போய்விட்டதால் தனக்கு வாலியே கணவனாக வேண்டும் என்கிறாள். அவரை அடைய தந்திரங்கள் செய்கிறார். அதற்கு வாலி, தன் தம்பி மனைவி ஒரு போதும் தனக்கு மனைவியாக ஆக முடியாது. தம்பி மனைவி மரியாதைக்குரிய ஸ்தானம் வகிப்பவர் என்று ரூமாவை முற்றிலும் விலக்கிவிடுகிறார்.

இப்படி வாலியின் எண்ணப் போக்கு இருக்க, சுக்ரீவன், அனுமனிடம்  வாலி தன் மனைவியை அபகரித்துவிட்டார் என்று கூறி நம்ப வைக்கிறார். அனுமன் சூழ்நிலைகளின் பாதிப்பால் உண்மையில் வாலி, சுக்ரீவனின் மனைவியை அபகரித்து விட்டதாகவே நினைத்து விடுகிறார். உண்மை தெரியாத அனுமரும் சுக்ரீவனை நல்லவர் என்று நம்பி இராமன், இலக்குமணர்களிடம் வாலி, சுக்ரீவனின் மனைவியை அபகரித்துவிட்டதாகக் கூறி, அவர்கள் இருவரும் சுக்ரீவனின் மனைவி ‘ரூமா’ வை மீட்டுக் கொடுத்தால், சீதையை இராவணனிடம் இருந்து மீட்க அவர் உதவுவார் என்று கூறுகிறார். உண்மை தெரியாத இராமரும் இலட்சுமணரும்,  சுக்ரீவனின் பொய்யை நம்பிவிடுகின்றனர்.

இறுதியில் இராமரின்  துணையுடன் சுக்ரீவன், தன் அண்ணன் வாலியைக் கொல்லத் துணிகிறார். கொன்றும் விடுகிறார். வாலியின் வதத்திற்குப் பிறகு தாராவைச் சுக்ரீவன் அடைய முயன்றாலும் உண்மை தெரிந்த தாரா, சுக்ரீவனை முற்றிலும் வெறுத்து ஒதுக்கிவிடுகிறார். இறுதியில் சுக்ரீவன், வானர சேனைகளுடன் இராமனுக்கு உதவியாக சென்று சீதையை மீட்க உதவுகிறார். வாலியின் மகன் அங்கதனும் அவர்களுடன் செல்கிறான். வெற்றிக்குப் பிறகு சுக்ரீவன், அங்கதன் மற்றும்  போரில் அழிந்தது போக மீதமுள்ள படையுடன் கிஷ்கிந்தை திரும்புகிறார்.

அதற்குப் பிறகும் சுக்ரீவன், தாராவிடம் கொண்ட மோகத்தைக் கைவிடவில்லை. சுக்ரீவன் தன் காதலைத் தாராவிடம் சொல்கிறார். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார். தாரா, அவரை விலக்கிவிடுகிறார். தன் இறுதிக் காலத்தைக் கிஷ்கிந்தை அரச மாளிகைக்கு  வெளியே வாலியின் நினைவுடன் வாழ்கிறார் தாரா. கதையின் மிகச் சுருக்கத்தையே நாம் இங்குச் சொல்லியிருக்கிறோம்.  ஒருவர் கதையைப் படித்தால் இன்னும் பல ஆச்சரியமான, சந்தோசமான, துக்கமான தருணங்களை அங்கே உணர முடியும்.

இனி இக்கதையின் மையத் தன்மையை இங்குச் சுட்டிக் காட்ட வேண்டும்:

இந்நாவல், மாற்றி யோசிக்கும் தன்மைக்கு உதாரணம் என்று மேலே கூறினோம். இன்னும் தெளிவாகக் கூறப் போனால் இந்நாவல், மரபான சிந்தனையில் மாற்றத்தை கோருகிறது. இம்மாற்றம் கதையில் மட்டுமல்ல பண்பாட்டு மாற்றமாகவும் இருக்க வேண்டும் என்கிறது. பண்பாட்டு மாற்றமா? எப்படி? என்று உடனே ஒருவருக்குக்  கேள்வி எழும். வானரர் என்ற சொல்  வனநரர் என்பதன் திரிபு என்ற பொருளில் நாவல் ஆசிரியர் பயன்படுத்துகிறார். வனநரர் என்பது காட்டில் வாழும் மக்கள் தொகுதியினரைச் சுட்டும் சொல். இந்தக் காடுவாழ் மக்களே வானரர் என்று அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் நீலகண்டன் அவர்கள் வைதீகத்தால் ஒடுக்கப்பட்டதாலே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கதையின் ஊடாகச் சொல்லிச் செல்கிறார்.

வைதீகத்தின் கோரப் பிடியில் இருந்து தன் மக்களை விடுவிக்கும் கதாநாயகனாகவே வாலி படைக்கப்பட்டுள்ளார். வனநரர்களின் பண்பாட்டுச் சூழல்கள் நன்றாக நாவலில் படம் பிடித்துக் காட்டப் பெற்றுள்ளன. வனநரர்கள் எனப்படும் வானரர்களின் பண்பாடு,  வைதீகர்களின்  பண்பாட்டிலிருந்தும், வைதீகத்தின் எதிரியான அசுரர்களின் பண்பாட்டிலிருந்துமே வேறுபாடு உடையதாகக் காணப்படுகின்றது.

அசுரர்கள் நகர பண்பாட்டை நோக்கி முன்னேறும் பொழுது அவர்களுக்குள் ஏற்படும் ஏற்றத் தாழ்வு பிரச்சனைகள், வனநரர்கள் சமூகத்தில் இல்லாததைக் காணும் வாலி தான் அசுரர்களைப் போல் தன் சமூகமும்  நகரமயப்படுவதை வெறுக்கிறார். முதலில் அசுரர்களின் நகரத்தை விடப் பெரிய நகரத்தை உருவாக்க நினைக்கும் வாலி, பின்பு அசுரர்கள் மத்தியில் நகரப் பண்பாட்டின் விளைவாக ஏற்பட்ட கொடூரமான இயற்கை மீறிய பண்பாட்டுச் சீரழிவுகளைக் கண்டு தன் நகரக் கனவைக் கைவிடுகிறார். இந்நாவலில் வனநரர்களின் சமூகப் பண்பாடு ஆதிக்கம் செலுத்தும்  வைதீகப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் விலகி நிற்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நாவலாசிரியர்.

மேலும் இந்நாவலில்  வனநரர்கள், வைதீகத்தின் ஆதிக்கத்திற்குள் இருப்பதே சரி; வைதீக ஆதிக்கத்திற்குள், அசுரர்களின் ஆதிக்கத்திற்குள் அடிமையாக இருந்தால் உணவாவது கிடைக்கும்; இல்லையேல் செத்துப் போக வேண்டியது வரும் என்று நினைக்கும் வனநரர்களின்  முன்னோடிகளையும்  காண முடிகிறது. இப்போக்குடையவர்களை வாலி வெறுக்கிறார். வாலியின் சமூக நோக்கு ஆதிக்கத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும் ஒரு கட்டத்தில் அது நகரப் பண்பாட்டிற்கு எதிராக திரும்புவதன் பலவீனத்தைத் தாராவின் சிந்தனை, பேச்சு ஆகியவற்றின் வாயிலாக நாவலாசிரியர் சரியாக உணர்த்துகிறார்.

மேலும் வைதீகத்தின் ஆன்மா வழியிலான பக்தி மார்க்கமே  ஒருவரை உய்விக்க கூடியது என்ற எண்ணமுடையவராக  அனுமன் இருப்பதையும்; அவர் பக்தி அடிப்படையில் வைதீகத்தை சுவீகரித்தவராகவும் நாவலில் காட்டப்படுகிறார். அனுமனின் சமூகவியல் நோக்கு இன்னும் அழுத்தமாக நாவலில் பதிவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சுக்ரீவனைப் பொறுத்தவரை அவருக்கு வனநரர்களின் சமூக முன்னேற்றம் என்பதெல்லாம் பற்றி கவலை ஒன்றும் இல்லை. அவர் சுயநலத்தின் மொத்த உருவமாக இருக்கிறார். அவருக்குத் தாராவும் அவரது மகிழ்ச்சியும் மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. இதற்காக வாலியை இராமனின் துணையோடு கொன்றும் விடுகிறார். அனுமனைப் போல இராமனும் இலட்சுமணனும்  சுக்ரீவனின் நடிப்பில் ஏமாந்து போகின்றனர். தம்பி மனைவியை அபகரித்தவன் வாலி என்றே நம்பியும் விடுகின்றனர்.

ஒருவேளை சுக்ரீவனின் நாடகம், இராமனுக்குத் தெரிந்திருந்தால் இராமன் என்ன செய்திருப்பார்? என்பது நாவலின் போக்கில் நமக்குச் சொல்லப்படவில்லை. வாலி, வைதீக ஆதிக்கத்திற்கு எதிரானவர். நிச்சயம் இராமனுக்கு இராவணனை வீழ்த்த உதவி செய்யமாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் இவ்விசயத்தில் வாலி இராமனை நிச்சயம் எதிர்த்து நின்றிருப்பார் என்றே நாம் கதையின் போக்கு வைத்து  அனுமானிக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் அண்ணன் மனைவியை அபகரிக்க நினைத்த சுக்ரீவனின் துணையை இராமன் நாடியிருப்பாரா? அல்லது அவரைக் கொன்றிருப்பாரா? இதெல்லாம் கதைக்கு அப்பாற்பட்ட விசயம்.

நாம் ஏற்கெனவே கூறியது போல  சுக்ரீவனின் ‘அண்ணி மோகம்’, அனுமனுக்குத் தெரியாது. காரணம், சந்தர்ப்ப சூழல், சுக்ரீவனை அனுமன் நம்பும்படி செய்து விடுகிறது. அனுமனுக்கு சுக்ரீவனின் ‘அண்ணி மோகம்’  தெரிந்திருந்தால், நிச்சயம் அவர் சுக்ரீவனுக்கு உதவியிருக்க மாட்டார் என்பதற்கான குறிப்பை நாவலில் ஆசிரியர்  தெளிவாகத் தெரிவிக்கின்றார். அப்படி அனுமனுக்கு தெரிந்தால் அவர்  இராம, இலக்குவரிடம் கூறி சுக்ரீவனுக்கு உதவ வேண்டாம் என்று அவர்களைத் தடுத்திருப்பார்; ஆனால் வாலியின் உதவி நிச்சயம் கிடைக்காது என்பதையும் அவர் அவர்களுக்கு உணர்த்தியிருப்பார்; இது எல்லாம் கதைக்கு அப்பாற்பட்ட விசயம் என்றாலும் நமக்கு இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு நாவல் களம் வழங்குகிறது.

கதையில் வாலியின் தந்தை ஸ்தானம் வகிக்கும் அரவாணியாகிய  ரிக்ஷராஜா கதாபாத்திரம், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. ஏனெனில் ரிக்ஷராஜாவே, வானர இனம் வைதீகத்திற்கும் அசுரர்களுக்கும் அடிமைப்பணி செய்யப் பிறந்ததல்ல; அதற்கு சுயமரியாதை என்பது அவசியம்; வைதீக, அசுர ஆகிய பிற ஆதிக்கப் பண்பாட்டிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக செயல்படுவதற்குரிய செயல்வன்மை வானர இனத்திற்கு உண்டு  என்று முழங்கி, வானர மக்கள் முன்னேற்றத்திற்காகச் சிந்திப்பதில்  வாலிக்கும் முன்னோடியாக விளங்குகிறார்.

அவரே வாலி, சுக்ரீவன் ஆகியோரை அழைத்துக்கொண்டு போய் மகாபலியிடம் பயிற்சி பெற வைக்கிறார்; வாலியின் மீது அளவு  கடந்த நம்பிக்கையும், பாசமும் உடையவராக இருக்கிறார்; சுக்ரீவனின் வஞ்சகத்தை அறிந்து கொதிக்கிறார்; சுக்ரீவனை எச்சரிக்கவும் செய்கிறார்.  சுக்கிரீவன் அவரை உதைத்து இகழ்கிறார்; உதைகள் பட்டாலும்   வாலியைக் காக்கும் எண்ணமே அவர் மனத்தில் முதன்மையாக இருக்கிறது. இறுதியில் தாராவைக் காக்க,  காளை முட்டிப் பலியாகிறார். இந்நாவலில் மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கதாபாத்திரம், வாலி வளர்க்கும் ‘குட்டி ஓநாய்’. வாலியின் மீது அது கொண்ட அன்பு, தாராவின் அன்பை விட ஒருபடி மேலாக இருப்பதை  இந்நாவலைப் படிக்கும் ஒருவர் புரிந்துகொள்வார். கடைசியாக இந்நாவலின் பாவிகத்தைப் (மைய கருத்து) பின்வருமாறு சொல்லி, இக்கட்டுரையை முடிப்போம்

மொத்தத்தில் இந்நாவல், காலம் காலமாக வழங்கி வரும் மரபான சிந்தனைகளில் இருக்கும் ஆதிக்கப் போக்கை இனம் காட்டி முற்போக்கு அடிப்படையில்  மாற்றி யோசிப்பதற்கான தேவையை வலியுறுத்துவதாக இருக்கிறது.

===============================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

வாநரா என்று இந்த ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ள நாவலின் மூல வடிவம் கிடைக்காததால் வாசித்து அறிய முடியவில்லை. இந்தக் கட்டுரையின் ஆசிரியர் விவரித்துள்ளதன் அடிப்படையில் இது, இடதுசாரிச் சிந்தனையின் அடிப்படையில் புனையப்பட்டுள்ள நாவல் என்ற தோற்றம் கிடைக்கிறது. அடிப்படையில் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் எல்லோரும் எப்படிச் சிந்திப்பார்களோ அதே கோணத்தில்தான் இந்த நாவல் இயங்கியிருக்கிறது என்று தெரிகிறது. இடதுசாரியினரும் பெரியாரியர்களும் சிந்திக்கும் விதத்தில்தான் நாவல் புனையப்பட்டுள்ளது. எனவே, இக்கட்டுரையாசிரியர் சொல்வது போல ‘மாற்றி யோசிப்பதன்’ அடிப்படை ரேகைகள் கூட இந்தப் புனைவில் வெளிப்படவில்லை என்பது புலனாகிறது. மாற்றி யோசிப்பது என்பதை விளக்குவதற்காக இக் கட்டுரையாசிரியர் ‘வாலி’ திரைப்பட எடுத்துக்காட்டை முன்வைத்திருப்பது, கம்பன், வால்மீகி போன்றோரின் இலக்கியத் திறனைத் திரைப்படங்களின் துணையோடு அளவிட்டுவிட முடியும் என்பதுபோன்ற தோற்றத்தைத்தான் தருகிறது.

மற்றபடி, இக்கட்டுரை, மேற்படி நாவலுக்கு நல்ல அறிமுக முயற்சி என்று கொள்ளத்தக்கது. ஆய்வு என்ற முறையில் இதில் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

===============================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *