நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 23
நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 23 – ஈகை.
குறள் 221:
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
இல்லாதவங்களுக்கு குடுக்குதது தான் ஈகை. மத்ததெல்லாம் ஏதோ ஒண்ண பதிலுக்கு எதிர்பாத்து செய்யுதது போல தான்.
குறள் 222:
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
மத்தவங்ககிட்டேந்து நல்ல மொறைல பொருள பெற்றுக்கிட்டாலும் அது பெரும ஆவாது. தானம் குடுக்குததுனால மேலோகத்துல எடமில்ல னு சொன்னாலும் குடுத்து வாழுததுதான் நல்லது.
குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள
நான் ஏழ னு பொறத்தியார் கிட்ட சொல்லாம இருக்குததும் இல்லாதவங்களுக்கு கொடுக்குததும் நல்ல குடும்பத்துல பொறந்தவனுக்கு மட்டுமே உள்ள கொணம்.
குறள் 224:
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு
குடுக்குத கொணம் இருக்கவங்களுக்கு கூட தங்கிட்ட பொருள வாங்கிக்கிடுதவனோட சந்தோசமான மொகத்த பாக்குத வரைக்கும் அவனுக்காக இரக்கப் படுதது துன்பமாத்தான் தோணும்.
குறள் 225:
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்
பசிய பொறுத்து நோம்பு இருக்குதவங்களோட வலிமகூட பொறத்தியாரோட பசிய போக்குதவங்களோட வலிமைக்கு பொறவு தான்.
குறள் 226:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
ஒண்ணும் இல்லாதவங்களோட வயித்துப்பசிய போக்கணும். அதுதான் பொருள் இருக்குத ஒருத்தன் தன்னோட பிற்காலத்துக்கு ஒதவுததுக்காக சேமிச்சு வக்கித எடம்.
குறள் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது
தனக்கு கெடச்ச சாப்பாட்ட பலபேர் கூட பங்குபோட்டு சாப்பிடுதவனுக்கு பசிங்குத கெட்ட நோவு சுளுவா அண்டாது.
குறள் 228:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
ஏழ பாழங்களுக்கு கொடுக்காம தன் சம்பாத்தியத்த வம்பா தொலச்சுபோடுத ஈரங்கெட்ட மனசுக்காரங்க மத்தவங்களுக்கு கொடுக்குததனால வர சந்தோசத்த புரிஞ்சுக்கிடமாட்டாங்களோ?.
குறள் 229:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்
சொத்து கொறஞ்சுபோயிடும் னு யாருக்கும் குடுக்காம தனியா திங்குதது மத்தவங்க கிட்ட கை ஏந்துத விட கொடும.
குறள் 230:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை
சாவுதது விட துக்கம் வேற ஒண்ணுமில்ல. ஆனா இல்லாதவங்களுக்கு ஒண்ணும் குடுக்கமுடியாமப் போகுத நெலம வந்துச்சின்னா அதவிட சாவுததே நல்லது.