-சேஷாத்ரி ஸ்ரீதரன்

1. கல்வெட்டுகளில் அணைகள், நீர்நிலைகள்

நீர் உயிர்வாழ்க்கைக்கு மட்டுமல்லாது பாசனத்திற்கும் இன்றியமையாததாக இருந்தது. பண்டு ஏரிகள், குளங்கள், அணைகள் கட்டி நீர்த்தேக்கிப் பாசனம் மேற்கொண்டனர். நீர்ப்பாசனத்தால் வேண்டிய உணவுத் தேவைகளை அவ்வவ்வூரிலே நிறைவு செய்து கொண்டனர். நாகரிகம் வளர்த்தனர். இதற்கென்று தனி வரிகளும் தண்டப்பட்டன. நீர்நிலைகளைஅவ்வப்போது செப்பனிட்டுப் பேணியும் வந்தனர். சில கல்வெட்டில் அவை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் நான்கனைப் பற்றி கீழே காண்போம்.

கல்வெட்டுப் பாடம்:

  1. ஸ்வஸ்திஸ்ரீ  திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை
  2. கொண்டான் பேரூர் நாட்டுப் புகலிடங்கொடுத்த சோ
  3. ழச்சதுர்வேதி மங்கலத்துச் சபையார்க்கும்
  4. பேரூர் ஊரார்க்கும் நம்மோலை குடுத்தபடியா
  5. வது, இவர்கள் தங்களுக்கு நீர்தட்டப் பெறவே என
  6. க்கு வந்து அறிவித்தமையில் இவர்கள் தங்களூர் எல்
  7. லையில் தேவிசிறை என்கிற அணையடைத்து வாய்க்காலும்
  8. வெட்டிக் கோளூர்அணைக்குச் சேதம் வாராதபடி  அவ்வணைக்கு
  9. பின்பாக நீர்விட்டுக் கொள்ளப் பெறுபவராகவும் இவர்கள் தங்
  10. கள் ஊர் எல்லையில் மாளிகைப் பழநத்தம் என்கிற நத்தத்திலே
  11. புகலிடங்கொடுத்த சோழநல்லூர் என்று ஊரேற்றிக் கொள்வார்
  12. களாகவும், இவ்வூர்க்கு மன்றாட்டு பேரூர் மன்றாடிகளும்
  13. இவ்வூரில் ஆறில் ஒன்று _ _ _ _ கில் குணியன் புத்தூர்
  14. மன்றாடிகளும் மன்றாட்டாவதாகவும் இப்படிக் கீழ்வேண்
  15. டும் குடியிட்டுக் கொள்வார்களாகவும் இவ்வூர்க்கு இ
  16. றையாவது குடி ஒன்றுக்கு கொங்கு கலக் கண்பாகவும் குடி
  17. ஒன்றுக்குப் பொன் காலாகவும் ஆண்டுவரையும் இறுத்து
  18. வருவார்களாகவும், இறுத்துமிடத்து இவ்வூர் மன்றாடிகளும்
  19. புகலிடங்கொடுத்த சோழ சதுர்வேதி மங்கலத்துச் சபையா
  20. ர் _  _ _ _ _ _ _ _ _ _ _ _
  21. ன்று இவ்வூர் குடியேற்றின ஆண்டுமுதல் மூவாண்டு கழிந்தால்
  22. நாலாமாண்டு முதல் ஆண்டு வரையிலும் இறுப்பார்களாகவும் இவ்வொட்டின
  23. கண்பும் இப்பொன்னுமல்லது எலவை உகவை நம் கன்மிகள்
  24. பேறு சாமந்தப்பேறு மற்றும் எப்பேர்ப்பட்ட அந்தராயங்
  25. களும் இவ்வூர்க்கு இறுக்கக்கடவன அல்லவாகவும் இவ்வூர்க்கும் இவ்வணைக்கும்
  26. காவலாக இரண்டு ஊர்கள் _ _ _ _  வேண்டும் பூலுவன்
  27. _ _ _ _ _  பூலுவற்குக்கா _ _ _ _ _ _ ற்கு
  28. இவ்வூரில் மூன்றத்தொரு புன்செய் பூலுவர் இறையிலி _ _ _  மு
  29. டிவாலேவாகவும் இப்படிசெம்பிலும் சிலையிலும் வெ
  30. ட்டிக் கொள்ளப் பெறுவார்களாக யாண்டு பதினேழாவது
  31. முதல் நம் ஓலை குடுத்தோம். இவை இராசேந்திர
  32. சோழப் பிரமராயன் எழுத்து. யாண்டு 17 நாள் 55.
  33. இவை சீபாதப் பிரியன் எழுத்து.

சொற்பொருள்: 

தட்டம் – தட்டுப்பாடு; சிறை – அணைக்கட்டு; நத்தம் –குடிஇருப்பு நிலம்; கண்பு – ஒருவகைக் கூலம், தானியம். கம்பாக இருக்கலாம்; சபையார் – கோயிற் கருவறை பிராமணர்; மன்றாட்டு – மேய்ச்சல் நிலம்; இவ்ஒட்டின  – செலுத்திய; எலவை –  தண்டம்? உகவை – பொன், காசாக தரும் வரி; கன்மிப்பேறு – கோயிற் காணிக்கை வரி; சாமந்தப் பேறு – குறுநில ஆட்சியர்/படைத்தலைவர் வரி; அந்தராயம் – உள்நாட்டு வரி; பிரமராயர் – கோயில், சதுர்வேதி மங்கல செயற்பாட்டை கண்காணிக்கும் பிராமண அரசஅதிகாரி

கல்வெட்டு விளக்கம்:

இது கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் உள்ள பட்டீசுவரர் கோவில் மகாமண்டப வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு.  13 ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழன் கோனேரின்மை கொண்டான் வீரராஜேந்திரனின் 17 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1224) வெட்டுவித்த 33 வரிக் கல்வெட்டு.

இதில் இராசேந்திர சோழப் பிரமராயன் என்ற கோவில் செயற்பாட்டை கண்காணிக்கும் பிராமண அரசஅதிகாரி கோனேரின்மை கொண்டானின் 17 ஆம்ஆண்டு ஆட்சியில் 55 ஆம் நாளில் (மே மாத இறுதி) ஓலைஆணை ஒன்றை சோழச் சதுர்வேதி மங்கலத்து கருவறை பிராமணர்களுக்கும், பேரூர் ஊரவர்க்கும் பிறப்பிக்கின்றான். அதில் பேரூர் ஊரவர் தங்களுக்கு பாசன நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை எனக்கு அறியத் தந்தார்கள். அதனால் இவர்தம் ஊரின் எல்லையில் அமைந்த தேவிசிறை என்ற அணைக்கட்டை அடைத்து வாய்க்கால் வெட்டி அந்நீரை கோளூர் அணைக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் அவ்வணைக்கு பின்புறமாக தேவிசிறை கால்வாய் நீரை எடுத்துச் செல்லவேண்டும் என்று அறிவுறுத்துகின்றான். அதோடு ஊர் எல்லையில் அமைந்து இருந்த மாளிகைப் பழந்நத்தம் என்ற இடத்தை “புகலிடங்கொடுத்த சோழநல்லூர்” எனப் பெயரிட்டு அதில் மக்களை குடியேற்றிக் கொள்ளலாம் என உரிமை தருகின்றான். இவ்வூரின் மேய்ச்சல் நிலத்தில் மேய்குக்கும் பேரூர் மன்றாடிகளான இடையர்கள் அதில் தம் பங்காக ஆறில் ஒரு பகுதியை குணியன் புத்தூர் மன்றாடிகளோடு இணைந்து மேய்க்கப் பெற்றுக்கொள்வார்கள் என்கிறான். இந்தப் புது ஊரார் வரியாக குடும்பம் ஒன்றுக்கு ஒரு கொங்கு கலத்தில் கண்பும், கால் பொன்னும் கட்ட வேண்டும். கட்டும் இடத்து இவ்வூர் மன்றாடிகளும் சோழச் சதுர்வேதி மங்கல சபையோரும் முதல் மூன்று ஆண்டுகள் தவிர்த்து நாலாம் ஆண்டுமுதல் ஒரு முழு ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு கொங்கு கலம் கண்பு கூலமும், கால் பொன்னும் வரியாகத் திரட்ட வேண்டும். இவை தவிர வேறு எந்த வகை வரியும் செலுத்த வேண்டாம் என்று வரிவிலக்கு தந்தான். இவ்வூருக்கும் இவ்வணைக்கும் காவலராக பூலுவர் என்ற வேட்டுவர் அமர்த்தப்பட்டனர். இப்புது ஊரில் குடியேற்றிய மக்களில் வேட்டுவரான பூலுவரும் இருந்தனர். இவர்கள் ஆற்றும் காவலுக்குக் கூலியாக அவர்களுக்கு புன்செய் நிலத்தில் மூன்றில் ஒருபகுதி இறையிலியாக ஒதுக்கப்பட்டது.

இவ்வகையில் அணைகள், கால்வாய்கள் பேணிக் காக்கப்பட்டன என்பது தெரிகின்றது. பிரமராயர் சதுர்வேதி மங்கலம், கோவில் தொடர்பான மேற்பார்வை அதிகாரி என்பதால் அங்கு செய்யப்பட வேண்டிய செயலுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றிருப்பது இக்கல்வெட்டின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது, அதோடு பூலுவ வேட்டுவர் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டில் வேட்டுவர் பூலுவர்க்கு இறையிலி நிலம் பற்றிய செய்தி மட்டுமல்லாது அணைக் கால்வாய், புதுஊர் குடியேற்றம், ஊரார்க்கு வரியும் வரிச்சலுகையும், இடையர்க்கு மேய்ச்சல் நில உரிமை ஆகிய செய்திகளும் கூடுதலாக உள்ளன.

பார்வை நூல்: வேட்டுவர் சமூக ஆவணங்கள், புலவர் செ. ராசு, ஈரோடு, 2008 வெளியீடு. பக். 90

2. சேலம் வட்டம் மல்லூர் அருகே மூக்குத்தி பாளையம் மோழப்பாறையில் வெட்டப்பட்ட 13 ஆம் நூற்றாண்டு 8 வரிக் கல்வெட்டு.

கல்வெட்டுப் பாடம்:  

  1. ஸ்வஸ்திஸ்ரீ எழுகரை நாட்டு அக்கை
  2. சாலை கங்கை என்று பேரிட்டு இக்கு
  3. ளம் அட்டினேன் பெரியவிலங்கி
  4. ஊராளியாகிய சுண்டை வேட்டுவன்
  5. சிலம்பன் சிறியர் ஆன எழுக
  6. ரை நாட்டு அக்கசாலைகள் மாத்
  7. த ஆராத பிள்ளையேன் பெருமலை
  8. க்கு எல்லை _ _ _ _ _

சொற்பொருள்:  

அட்டினேன் – தானாமாக கொடுத்தேன்; சிறியர் – இறையவர், junior; ஆராத – பொறுக்காத

கல்வெட்டு விளக்கம்:  

நான்காம் அதிகார அடுக்கைச் சேர்ந்த பெரியவிலங்கி எனும் ஊரின் ஊராளியான எழுகரை நாட்டின் சுண்டை வேட்டுவர் இனம் சார்ந்த சிலம்பன் இளையவர் என்பார் குளம் ஒன்றை அக்கை சாலை என்னும் இடத்தில் வெட்டி அதற்கு “அக்கைசாலை கங்கை” எனப் பெயரிட்டு தானாமாக வழங்கினார். இவர் தன்னை அக்கசாலைகள் மாற்ற ஆராத பிள்ளை என்கின்றார். இதில் அக்கைசாலைகள் என்பது காசு உருவாக்கும் பொற்கூடத்தை குறிக்கும். இந்தக் குளத்தின் எல்லைகளில் ஒன்றாகப் பெருமலை குறிக்கப்பெறுகின்றது. கல்வெட்டு முற்றாக இல்லை.

இங்கிருக்கும் அக்கசாலைகள் இடம்மாற்றம் பெறுவதை பொறாத பிள்ளை என்று தம்மை கூறிக் கொள்வதில் இருந்து அங்குள்ள அக்க சாலைகள் நீர்தட்டுப்பாட்டின் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட இருந்ததையும் அவை இடம்மாறினால் தனக்கு வரி வருவாய் குறைந்துவிடும் என்பதையும் உணர்ந்துதான் இவர் ஒரு குளத்தை வெட்டி தானமாக கொடுத்துள்ளார் என்று புரிந்துகொள்ள முடிகின்றது. மேலுள்ள இரு கல்வெட்டுகளும் வேட்டுவர் சமூகங்கள் பற்றி அறிவதற்கு தொகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் இருந்து நாம் கூடுதல் செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

பார்வை நூல்: வேட்டுவர் சமூக ஆவணங்கள், புலவர் செ. ராசு, ஈரோடு, 2008 வெளியீடு.

கீழே உள்ள கல்வெட்டு திருக்காஞ்சி என்ற ஊரின் கோயிலில் வெட்டப்பட்டுள்ளது.  29 வரிகள் கொண்ட  இக்கல்வெட்டு  முதற் குலோத்துங்கனின் 40 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி.1110) வெட்டப்பட்டது.

கல்வெட்டுப் பாடம்:  

  1. வ த ஸ்ரீ வீரமேய் துணையாகவு
  2. ம் தியாக மேய் அணியாகவும் செங்
  3. கோலோச்சிக் கருங்கலி கடிந்து
  4. புகழ்மாது விளங்க ஜய மாது விரும்
  5. ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர
  6. உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி
  7. மீனவர் நிலை கெட வில்லவர் கு
  8. லை தர ஏனை மந்னவர் இரியலுற்
  9. றிழிதர கனைத்தும் தந்சக்கரந
  10. டாத்தி வீரசிம்மாசனத்து அவநி
  11. முழு துடையாளோடும் வீற்றிருந்த
  12. ருளிய கோவிராஜ கேசரி பந்மரான
  13. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோ
  14. த்துங்க சோழ தேவற்கு யாண்
  15. டு 40 தாவது திரிபுவனமாதே
  16. விச் சருப்பேதி மங்கலத்து ஏரி
  17. நிறை யேரியிலே பெருங்காற்றடி
  18. த்துக் குலையழிந்து கெட்டமையில்
  19. இக்கரையும் அட்டுவித்துக் குலோத்
  20. துங்க சோழநேந்து திருநாமத்தால் க
  21. ற் படையுஞ் செய்து இத்தன்மம் சந்திராதித்த
  22. வற் நிற்கச்  செய்தாந் பூதமங்கலமுடை
  23. யாந் ஒற்றியூரன் பூபாலசுந்திரநான சோழ
  24. கோநார். இவற்க்காக இக்கற்படை செய்வி
  25. தாந் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை
  26. வள நாட்டுச் சேவகலூருடையாந் அரை
  27. யந் திருமழ பாடியுடையாநான மலைய
  28. ப்பியராஜந். இத்தன்மம் மகாசபையார் ர
  29. ன கூடி

சொற்பொருள்:  

நிறைஏரி – பக்கக் கரைகளை கொண்ட ஏரி, பெருங்காற்று – சூராவளி, கடுங்காற்று; குலைஅழிந்து – செய்கரை, artificial bank, பாலம்  ; அட்டுவித்து – கட்டிக் கொடுத்து கற்படை – கருங்கல் சுவர்; மகாசபையார் – கருவறை பிராமணர் உள்ளிட்ட நிர்வாகத்தார்.

கல்வெட்டு விளக்கம்:  

11 ஆம் வரி வரை குலோத்துங்கனின் மெய்கீர்த்திகளைச் சொல்லும் இக்கல்வெட்டு திரிபுவன மாதேவிச் சருப்பேதி மங்கலத்து ஏரியின் நிறையேரிக் கரை கடுங்காற்று வீச்சினால் செய்கரை அழிந்து உடைப்பெடுத்து நீரவெளியேறி அழிவை உண்டாக்கியது. அதற்கு வலுவான கரையைகட்டிக் கொடுத்து அதையொட்டி குலோத்துங்க சோழனென்ற பெயரில் கல்சுவரும் எழுப்பி தானமாகக் கொடுத்தான் பூதமங்கலத்தை சேர்ந்த ஒற்றியூரன் பூபாலசுந்தரனான சோழகோனார் என்று உரைக்கின்றது. இந்த கற்சுவர் அமைப்பதில் பூபாலசுந்தரனுக்கு உறுதுணையாக இருந்து அதை கட்டுவித்தவன் இராசேந்திர சோழவளநாட்டின் இடைவளநாடான சேவகலூரின் அரையன் திருமழப்பாடியுடையானான மலையப்பிராஜன். இந்த தானம் கருவறைப் பிராமணர் உள்ளிட்டாரின் காப்பில் விடப்பட்டது.

பார்வை நூல்: வரலற்றில வில்லியனூர் கல்வெட்டுகள், பக். 67-68, புலவர் ந.வேங்கடேசன், சூன் 1979, சேகர் பதிப்பகம், எம்ஜிஆர் நகர், சென்னை -78

இக்கல்வெட்டு, திருவக்கரை சந்திரமௌலீசுவரர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வெட்டப்பட்டு உள்ளது (S.I.I. 12:246). 

கல்வெட்டுப் பாடம்:  

ஸ்வஸ்திஸ்ரீ சகலபுவன சக்கரவர்த்தி காடவன் அவனி ஆளப்பிறந்தான்  கோப் பெருஞ்சிங்கன்  ஒழுகரை ஏரிக்கு மதகுஞ் செய்வித்து இந்த ஏரிக்கு  நீர்புகிரக் காலும் கல்லுவித்தபடி

சொற்பொருள்:  

ஒழுகரை ஏரி – நீர்கசியும் கரை உடைய ஏரி அல்லது பெயர்; மதகு – நீர்பாயும் மடை, sluice; கால் – கால்வாய்; கல்லுவித்து – தோண்டி, வெட்டி.

கல்வெட்டு விளக்கம்:  

காடவப் பல்லவன் கோப்பெருஞ் சிங்கன் (1243-1273)  ஒழுகரை ஏரிக்கு மதகு செய்ததோடு இந்த ஏரியின் பிற சுற்றிடங்களில் திரண்டு சேர்ந்த நீரை ஏரியில் சேமிக்க அந்நீர் ஏரிக்குள் புகுவதற்கு கால்வாய் வெட்டினான் என்று கூறுகின்றது.

பார்வை நூல்: வரலாற்றில் வில்லியனூர் கல்வெட்டுகள், பக். 70, புலவர் ந.வேங்கடேசன், சூன் 1979

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கல்வெட்டுகளில் அணைகள், நீர்நிலைகள்

Leave a Reply to seshadri s.

Your email address will not be published. Required fields are marked *