திணை பாயாசமும் திரு.வி.க குருகுலமும் (3)

0

இன்னம்பூரான்

சான்றோர்கள் வரலாறு படைக்கிறார்கள். நிகழ்வுகளும் அவர்களது


வாழ்க்கையின் படிநிலைகளாக அமைந்து விடுகின்றன. திரு.வி.க. அவர்கள் காந்தி மஹானை முதல் தடவை சந்தித்து தேசபக்தர் சேலம் விஜயராகவாச்சாரியர் அவர்களின் அன்பினால் கிடைத்த அறிமுகம். காந்திஜி சென்னைக்கு வரும் ரயிலில், அரக்கோணமோ, ஜோலார்பேட்டையா என்பது நினைவில் இல்லை. அந்த ஜங்க்ஷனில், சேலம் விஜயராகவாச்சாரியார் கொடுத்தக் கடிதத்துடன், ரயில் வண்டியில் ஏறி, தயக்கத்துடன் காந்திஜியை சந்தித்து அதை கொடுக்கிறார். தன் சொற்பொழிவுகளை தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்த்து அளிப்பதற்கு ஆள் தேடிக்கொண்டு இருக்கிறார். அதற்குத்தான் இந்த சிபாரிசு. காந்திஜி நேராக, சுற்றி வளைக்காமல், விஷயத்துக்கு வருபவர். அவருடைய வினாக்களுக்கு திரு.வி.க. விடையளித்தது என் தாத்தாவை எனக்கு நினைவூட்டுகிறது. தாது வருட பஞ்சத்தில் அடிப்பட்டு, தரிசாக போய்விட்ட அரந்தாங்கியை விட்டு, பிழைப்பு தேடி, செட்டி நாடு வந்த அவரை வேலைக்கு வைக்கப்போகும் செட்டியாரிடம், அவர் ‘ எனக்கு இங்கிலீஷ் தெரியாது; தமிழ் தான் நன்றாகத்தெரியும். உங்கள் வேலைகளை தரமான முறையில் செய்வேன்.’ என்றாராம். செட்டியாருக்கு இவர் வேலை செய்யும் தோரணையும், திட்டமிடுதலும், பிடித்துப்போய்விட்டதாம். கதவுகளில் வெள்ளித்தகடு அடித்த தன் சொந்தக் காரை தான் இவருக்கு அனுப்புவாராம். ஏதோ பழங்கதை. இதே மாதிரி தான், எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்யாததை முன் வைத்து, காந்திஜியின் உரைகளை உடனுக்குடன், தமிழாக்கம் செய்து அளிக்க முடியும் என்று தீர்மானமாக சொல்லி விடுகிறார். அவரும் ஏற்றுக்கொள்கிறார். பிறகு சென்னையில் அந்த ஊழியமும் காந்திஜிக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைகிறது. 

இவரும் தமிழ் காந்தியாகி வருகிறார். அந்த உருக்கமான தொடர் நிகழ்வை எழுத ஒரு தனி புத்தகம் தேவை. இது நிற்க.

இன்று ஏப்ரல் 8, 2019. நூறு ஆண்டுகளுக்கு முன் அதே தேதியில்

[ஏப்ரல் 8, 1919] நடந்ததை கவனிப்போம். அண்ணல் காந்தி நிறுவிய சத்யாக்ரஹா கமிட்டி தற்பொழுது, பத்திரிகை, படைப்புகள் ஆகியவற்றில் தனக்கு சாதகமாக இல்லாததை மட்டுறுத்துவது என்ற விதியை மட்டும் மீறப்போவதாக தீர்மானிக்கிறது. காந்திஜி எழுதிய ஹிண்ட் ஸ்வராஜ்யா இதழ்கள்,சர்வோதயா இதழ்கள், யுனிவெர்ஸல் உதயம், சத்யாக்ரஹியின் கதை, துருக்கி சீர்திருத்தவாதியும், சர்வாதிகாரியும் ஆன முஸ்தாஃபா கெமால் பாஷா அவர்களின் வாழ்க்கை, உரைகள் அடங்கிய நூல் ஆகியவை, தடை செய்யப்பட்டிருந்த்தாலும், அதை மீறி சட்ட விரோதமாக விற்கப்படுகின்றன. அதில் ஈடுபடும் தியாகிகளில், காந்திஜி, சரோஜினி நாயுடு, திரு.சோபானி, திரு லக்ஷ்மிதாஸ் டைஶ்ரீ ஆகியோர் பிரபலம், அவர்கள் துணிவுடன் தன் கையொப்பமிட்டே அவற்றையும், பல சிறிய புத்தகங்கள், போஸ்டர்களை விற்றனர். இந்த செயலை நாம் இன்று உற்று நோக்கும்போது, கருத்துத்தடை இன்றும் செயல்படுகிறது என்று புலப்படுகிறது. அதனால் தான் நான் எழுதிய திரு.வி.க. சரிதம் பிரசுரம் செய்ய முடியவில்லை. அதில் ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ என்று ஒரு அத்தியாயம் தலைப்புடன் மட்டும் நிற்கிறது.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *