கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள்

1

சேசாத்திரி ஸ்ரீதரன்

கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள் 

கொங்கு நாடு கன்னியாகுமரி போலவே தனக்கெனத் தனிவரலாறு கொண்டிருந்ததானது அங்கத்து கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. கொங்கு, சோழர் காலத்தில் இங்கு கோயில் இயக்கம் தொடங்கியது முதல் அவர் உத்தாரம் (support) பெற்று நல்ல முறையில் கோயில் இயக்கம் எடுத்துச் செல்லப்பட்டதைக் கல்வெட்டுகளில் காண முடிகின்றது. இவற்றில் வெள்ளாளர் குழுக்களாக, கூட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப் பொறுப்பில் இருந்த வெள்ளாளரிடம் பறையர் காவற் பணியில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. இப்பறையர்கள் இங்கத்து கோயில்கள் சிலவற்றில் விளக்கேற்றித் திருத்தொண்டு புரிந்தது பதிவாகி உள்ளது. இது இவர்கள் கோயிலுட் சென்று கருவறை மூலவரை எதிர் வணங்கினமைக்குச் சான்றாகின்றது.

இதை ஏன் இங்கே சிறப்பாகக் குறிக்க வேண்டி உள்ளது என்றால் புராணங்கள், மனுதர்மம் ஆகியவற்றின்படி இவர்கள் கோயிலில் நுழைய அனுமதி இல்லாத தீண்டத் தகாதோராக நடத்தப்பட்டனர் என்ற தப்பான, பிழையான கருத்தே மக்கள் பெரும்பாலார் நெஞ்சங்களில் குடிகொண்டு உள்ளது. இப்பிழையான கருத்தை முறியடிக்கும் ஆயுதமாகச் சில கல்வெட்டுகள், கொங்கில் காணக் கிடைக்கின்றன.

ஏன் இங்கே மட்டும் கிடைக்கின்றன? மற்ற இடங்களிள் இவ்வாறான கல்வெட்டுகள் இல்லையா? என்ற கேள்விக்கு முதலாவதாக இங்கே தமிழகத்தின் பிற பகுதிகள் போல் அல்லாமல் பெரிய கோயில்கள் மிகக் குறைவு அதனால் கல்வெட்டுகளும் குறைவு. ஆதலால் இங்கத்துச் சாதி உணர்வுள்ளவரில் தனியார் சிலர், தம் சொந்தச் செலவில் இங்கத்துக் கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்தும், படித்தும் அச்சில் ஏற்றி, நூலாக வெளியிட்டு உள்ளனர். இப்படி மற்ற இடத்தில் பெரிதாக எவரும் செய்யாததால் பறையர் பற்றிய செய்திகள் பிற இடங்களில் அதிகம் வெளியாகவில்லை.

வெளியான அளவிற்கு இவை பறையர் சமூக சமநீதிப் போராட்டத்திற்கான சிறந்த ஆயுதங்களாக உள்ளன. இதை உணர்ந்தால் இவர்களுக்கு நன்மை உண்டாகும். அப்படி அல்லாமல் மீண்டும் மீண்டும் புராணத்தையும் மனுதர்மத்தையும் காட்டி சைவ, வைணவ மதங்களைச் சாடி, பிராமணரைப் பழிப்பார்களானால் இக்கல்வெட்டுகள், பிடியில்லாக் கத்தியாக இவர்களைத்தான் காயப்படுத்தும். கொங்கு கல்வெட்டு போல பிற இடத்துக் கல்வெட்டுகள், கோயில் வாரியாக நூலாக வெளியாவதற்கு நடுவண் தொல்லியல் துறைக்கு அழுத்தம் தர வேண்டும். இனி, சில கல்வெட்டுகளைக் காண்போம்.

கோயம்புத்தூர் மாவட்டம் சங்கமேசுவரர் கோயில் தெற்கு ஜகதி உள்ள 3 வரிக் கல்வெட்டு.    

  1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு பதினேழாவது எதிர் எதிர் பேரூர் நாட்டு கோவன்புத்தூர் உடையார் சங்கீசுரமுடையார் கோயில் பக்கல் வடபரிசார நாட்டி
  2. லிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன் வைத்த சந்தியா தீபமொன்றுக்கு மிக்கோயிலிற் காணியுடைய சிவப்பிராமணனுக்கு ஓரச்சு குடுத்தே _ _ _ _
  3. சந்திராதித்தவரை செல்வதாகவு மிக்கோயிற் குடமுங் குச்சியுங் கொடு புக்கானிவனொருவன் செலுத்தக் கடவேனாகவும் கல்வெட்டுவித்தேநிது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

பக்கல் – for, ஆக; நாட்டுக் காமுண்டன் – ஊர் காவலன்; காணியுடைய பிராமணன் – official priest ; அச்சு – காசு; புக்கான் இவன் ஒருவன்- கருவறையில் புகும் உரிமையுள்ள பிராமணன்; பன்மாகேசுவரர் – சிவனடியார்; ரக்ஷை – காக்கவேண்டும்.

விளக்கம்: கொங்கு சோழர் மூன்றாம் விக்கிரம சோழனுக்கு 17+1+1 = 19 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1292 ) கோயம்புத்தூர் தெற்கு சங்கமேசுவரர் கோயிலில் வடபாரிச நாட்டில் வாழ்கின்றவனும் புல்லிகூட்டத்து வெள்ளாளனிடம் பணியில் உள்ளவனுமான பறையனான பறையன் என்பான், ஊர்க் காவல் செய்து வந்தான். அவன் இக்கோயில் காணியுடைய சிவப் பிராமணனிடம் காசு ஒரு அச்சு கொடுத்து சந்தியா விளக்கு ஒன்று எரிக்கச் செய்தான். இது சந்திர சூரியர் காலம் வரை ஏற்று நடத்தப்படும் என்று குடமும் குச்சியும் கொண்டு கருவறையில் நுழையும் அனுமதி பெற்ற பிராமணன் அப்படியே செய்வதாகக் கல்வெட்டி, அதைச் சிவனடியார் காக்க வேண்டும் என்கிறான்.

இக்கல்வெட்டில் பயிலும் காணியுடைய பிராமணன், புக்கான் இவன் ஒருவன் என்ற சொல்லாட்சிகள் கருவறை பிராமணரைப் பிற கோயில் பிராமணரிடம் இருந்து வேறுபடுத்தி உயர்வாகக் காட்டுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அக்காலத்தே கோயில் சாராத (unofficial) ஆனால் அகவை முதிர்ந்த கோயில் சார்ந்த பிராமணருக்கு சார்பாக (substitute) அவர்களது உறவினரும் கோயில் பூசையில் ஈடுபட்டிருந்தனர். இத்தகையோருக்கு அந்த முதிர்ந்த பிராமணர் தான் தன் உரிமையில் இருந்து ஒரு பங்கைச் சம்பளமாக வழங்குவார்.  இது தான் அந்த வேறுபாடு.

பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 153 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

கோயம்பூத்தூர் வடக்கில் அமைந்த இடிகரை ஊரில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவர் 15 வரிக் கல்வட்டு

ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய / தேவற்கு யாண்டு 8 வது வ / டபரிசார நாட்டுக் கொற்ற / மங்கலத்திலிருக்கும் வெள் / ளாழன் பையரில் பறைய / ன் பறையனேன் ஆளுடை / யார் வில்லீஸ்வரமுடையா / ற்கு வைத்த / சந்தியா தீபவிளக்கு / ஒன்றுக்கு ஒடுக்கின வராகன் பணம் 10 இ / ப் பணம் பத்துங் கைக் கொண்டேன் இக் / கோயிற் காணியுடைய சிவ பிராமணன் / காசிவ கோத்திரத்துத் திருநட்டன் அகத்திஸ்வர / முடையானான சித்தரமேழி பட்டனேன் கு / டங் கொடு கோயில் புகுவார் சந்திராதித்த / வரை செல்வதாக பன்மாஹேஸ்வர ரக்ஷை.

பையர் – கூட்டம், கீழ்ப்படிந்த வீரன், மகன், subordinate warrior; ஆளுடையார் – இறைவர்; ஒடுக்கின – கொடுத்த; வராகன் – ஒரு வகை காசு; சந்தி தீபம் – மாலை விளக்கு.

விளக்கம்: இது 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியனான வீர பாண்டியனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் கொற்ற மங்கலத்தில் இருக்கும் பையர் கூட்டத்தை சேர்ந்த வெள்ளாளனிடம் பணியாற்றும் பறையன் பறையன் என்பான் வில்வீஸ்வரமுடையாருக்கு சந்தி விளக்கு ஒன்றிற்காக 10 வராகன் பணம் கொடுக்கின்றான். இதை பெற்றுக்கொண்ட கோயில் காணியுடைய சிவபிராமணன் காசிபகோத்திரத்தில் பிறந்த திருநட்டன் அகத்தீசுவரன் என்ற சித்திரமேழி பட்டன் அதைச் சந்திர சூரியர் உள்ள காலம் வரை நடத்திச் செல்வதாக உறுதி கூறுகின்றான்.  விளக்கேற்றியவர் கோயிலில் சென்று வழிபடுவது இயல்பு. இதாவது, பறையன் பறையன் உள்ளே சென்று வழிபட்டுள்ளான். இது அவன் தீண்டாமைக்கு ஆட்படவில்லை என்பதற்கு சான்று.

பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 179, மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

ஈரோடு பெருந்துறை வட்டம், ஆதியூர் கண் அமைந்த ஆதீசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு நாலாவது குழப்பு நாட்டு ஆதவூரில் வெள்ளாளன் வண்ணக்கரில் பிள்ளையாழ்வான் கரும்பறையனேன் நாயனார் ஆதீஸ்வரமுடையார் திருக்கோயில் திருநிலைகால் இரண்டு படி இரண்டும் என் தர்மமாகச் செய்வித்தேன் கரும்பறையனேன்.

திருவெழுத்திட்டு – முடிசூட்டி; திருநல்லியாண்டு – ஆட்சி ஆண்டு; பிள்ளையாழ்வான் – கீழ்படிந்த பணியாள்; திருநிலைக்கால் – கதவு நிலை.

விளக்கம்: மதுரை வேந்தன் வீரபாண்டியனின் நான்காம் ஆட்சி ஆண்டான 1269 இல் குழப்பு நாட்டில் அடங்கிய ஆதவூர் வண்ணக்கர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாளான கரும்பறையன் என்பான் ஆதிசுரமுடைய ஈசன் கோயிலில் இரண்டு திருநிலைக் கதவும் இரண்டு படியும் செய்வித்து கொடுத்து திருத்தொண்டு புரிந்தான்.

பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப் பாடலும், பக். 143

கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் கோபுர வாசல் இடது நிலைக்காலில் வெட்டப் பட்ட 11 வரி கல்வெட்டு.

ஸ்வஸ்திஸ்ரீ வீ / ராஜேந்திர தேவற்கு / யாண்டு பத்தாவ / து கடற்றூர் வெ / ள்ளாந் கள்ளந் ப / றையந் நரவீரகே / ரழச் சிலை செட்டி / இட்ட திருநிலை வாய் / முகவணை உ / த்தரமும் திருக்க / தவும் இட்டேந்.

திருநிலைவாய் – கோபுரத்தோடு கூடிய வாயில்; முகவணை – வாயிலை ஒட்டிய கற்சுவர்.

விளக்கம்: கொங்குச் சோழன் வீர ராஜேந்திரனின் 10ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1217) கடத்தூரில் வாழும் வெள்ளாளனுக்குப் பணியாற்றும் கள்ளன் பறையன் என்பான் நரவீரகேரளச் சிலைச் செட்டி சார்பாக இக்கோயில் திருநிலை வாயிலுக்கு முகவணை, உத்தரம், திருக்கதவு ஆகியன செய்து இட்டான். இதை வீரகேரளச்செட்டி நேரில் நின்று கவனிக்க முடியாததால் கள்ளன் பறையன் இத் திருப்பணியை அவன் சார்பில் மேற்பார்வை செய்து இட்டான் என்று கொள்வதே முறையானது. அந்த வகையில் கோயிலில் வழிபாடும் நடத்தி இருக்கின்றான்.

பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக் 190.

கோயம்புத்தூர் வடக்கில் இடிகரை ஊரில் அமைந்த வல்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவரில் பொறித்த 4 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 12 வது வடபரிசார நாட்டு இடிகரையி லிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் ச
  2. டையன் நேரியான் பறையனேன்ஆளுடையார் வில்லீஸ்வர முடையாற்கு வைத்த சந்தியா தீபவிளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின வ
  3. ராகன் பணம் 10. இப்பணம் பத்துங்கைக் கொண்டேன் இக்கோயிற் காணியுடைய சிவபிராமணன் காசிவ கோத்திரத்து திருநட்ட அகத்தீ
  4. ஸ்வரமுடையானான சித்திரமேழிப் பட்டனேன் குடங்கொடு கோயில் புகுவார் சந்திராதித்த வரை செல்வதாக இத்தன்மம். பன்மீயேசுவர ரக்ஷை.

விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியரில் வீரபாண்டியனுக்கு 12 ஆவது ஆட்சி ஆண்டில் இடிகரையில் வாழும் பையர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாள் நேரியான் பறையன் வில்லீசுவரமுடைய இறைவர்க்கு மாலை விளக்கு ஏற்ற 10 வராகன் பணம் கொடுத்தான். இதைக் கோயில் அலுவல பிராமணன் சித்திர மேழிப் பட்டன் பெற்றுக் கொண்டு சந்திர சூரியர் உள்ள வரை நடத்துவதாக உறுதி தந்தான்.

இதே கோவிலில் 8ஆம் ஆட்சி ஆண்டின் இதே போல ஒரு கல்வெட்டு மேலே இடம்பெற்றுள்ளது.

பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 342

கோயம்புத்தூர் அவிநாசி வட்டம் சேவூரில் உள்ள கபாலீசர் கோயியில் முன்மண்டப தெற்கு குமுதத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு இருபத்து நாலாவது _ _ _
  2. பாக்குடியில் இருக்குஞ் சாமந்தரில் குன்றன் _ _ _ _
  3. உடைய பாரசிவரில் வீற்றிருந்த வறியான் _ _ _
  4. இடங்கை நாயகந் நித்தப் பரையன்உள்ளிட்டாரும் வடுக _ _ _
  5. யாரும் இவர் _ _ _ _ பிடாரியாற்கு சந்தியா தீபத்துக்கு _ _ _
  6. இதுபன்மாயேசுவர ரக்ஷை.

பாரசிவர் – அம்மன் கோயில் பூசகர்; சாமந்தன் – அமைச்சன் அல்லது படைத்தலைவன்;  பிடாரி – துர்கை.

விளக்கம்: கொங்கு சோழரில் வீர ராஜேந்திரனுக்கு 24 நாலாவது ஆட்சிஆண்டில் (கி.பி.1230) பாக்குடியில வாழும் சாமந்தன் குன்றன், கோயில் பூசகரான பாரசிவர் வீற்றிருந்த வறியான், இடங்கைப் பிரிவுத் தலைவன் நித்தப் பரையன் உள்ளிட்டோர் ஆன இவர்கள் பிடாரிக்கு மாலை விளக்கு எரிக்க ஆவன செய்துள்ளனர்.

பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 270

திருப்பூர் காங்கேயம் வட்டம் பட்டாலியில் உள்ள பால்வண்ணீசுவரர் கோயில் தெற்கு சுவர் கல்வெட்டு.

1.   ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்

2.    செயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால் 

3.   வெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி

4.   ல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்

5.   பொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக  இச்சந்தியாதீபம் கு

6.   டமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _  

வேளான் – அரசன், அரசமரபினன், ஆட்சியாளன்; மகன் – கீழ்படிந்த வீரன்.

விளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவனுக்கு கீழ்படிந்த வீரன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன் கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ள வரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.

பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 11, 2012,  த.நா.அ. தொல்லியல்துறை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *