-மேகலா இராமமூர்த்தி

பகலவனும் பனித்துளியும் பார்வையால் பேசிக்கொள்ளும் அழகைத் தன் நிழற்படத்தில் பதிவுசெய்திருப்பவர் திரு. சந்தோஷ்குமார். இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 207க்கு அளித்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். படமெடுத்தவர், தேர்வாளர் இருவருக்கும் என் நனிநன்றியை நவில்கின்றேன்.

கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பை வாரி வழங்கும் இயற்கைக் காட்சிகள் காணக் காணத் தெவிட்டாதவை. நேரெதிர் குணங்களைக் கொண்ட குளிர்ந்த பனித்துளியும் கொதிக்கும் சூரியனும் ஒன்றையொன்று சந்திக்கும் இக்காட்சிக்குப் பொருத்தமான கருத்துக்களைத் தம் கவிதையில் பொதிந்துதரக் கவிஞர்களை அழைக்கின்றேன்!

*****

உலகுக்கு உதயம் எப்போது? ஆதவன் உதிப்பதிலா, அன்பை விதைப்பதிலா, அகிம்சை நிலைப்பதிலா, பண்பை வளர்ப்பதிலா, பண்பிலாது அரசியல் செய்வோர் அரியணை இழப்பதிலா என்று தன் உள்ளத்தெழுந்த நியாயமான ஐயங்களையெல்லாம் அடுக்கடுக்கான வினாக்களாய்ப் பட்டியலிட்டிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

உலகமே.. உதயம் எதனில்…?

மனிதனை மனிதன் தாக்கி அழிக்கும் கொடுஞ்செயல் அழிவதிலா..?
மனிதர்தம் மனதில் மாறாது நிலைத்த வன்மம் தொலைவதிலா..?
தன்னலம் ஒன்றே பெரிதெனக் கருதும் மனநிலை மடிவதிலா..?
கண்களைப் போன்று பணத்தினைப் போற்றும் பண்பு ஒழிவதிலா..?

ஆயுதப் போட்டிகள் அடங்கி உலகு அமைதியை அடைவதிலா..?
இயற்கையைச் சிதைத்து இன்பம் நுகரும் போக்கு மறைவதிலா..?
கயவரை யொத்த அரசியல் செய்வோர் அரியணை இழப்பதிலா..?
இயலாதவர்க்கு இயன்றதைச் செய்து இன்பம் துய்ப்பதிலா..?

அமைதியை இழந்துத் தவிக்கும் மக்கள் நிம்மதி பெறுவதிலா..?
சுமைகள் நிறைந்த கல்வியைத் தவிர்த்து பண்பை வளர்ப்பதிலா..?
இமைய மலையின் அளவினைப் போன்று ஆசை கொள்வதிலா..?
இமைப் பொழுதேனும் மறைபொருளே உன்னை நினைப்பதிலா..?

உலகமே உணர்த்திடு உதயம் என்பது ஆதவன் உதிப்பதிலா..?
உலகமே உணர்த்திடு உதயம் என்பது அன்பை விதைப்பதிலா..?
உலகமே உணர்த்திடு உதயம் என்பது அகிம்சை நிலைப்பதிலா..?
உலகமே உணர்த்திடு உதயம் என்பது சத்தியம் தழைப்பதிலா..?

*****

இரவென்னும் போர்வை போர்த்தி, பூமித்தாயின் மடியில் கண்ணுறங்கும் பனித்துளிக்கு அண்ணனாய்க் கதிரவனைக் கற்பனைசெய்து, தாயின் அன்புக்கு அண்ணனும் தம்பியும் தம்முள் போட்டியிடும் அழகைக் கவிநயத்தோடு தன் பாட்டில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

அன்னையின் மடியில்…  

பகலவன் மேற்கில் 
பதுங்கியதும்
 
இரவெனும் போர்வை
இருளாய்
 
இப்புவியைப் போர்த்தியதோ?

நடுங்கும் குளிர்தனில்
இதமாய்க் குளிர்காய
 
அன்னை மடிதேடி
 
வெண்பனியாய்
பூமித்தாய் அவள் மடிமீது
 
படர்ந்தாயோ?

அதிகாலைக் கதிரவனாய் 
மூத்தவன் முதலில்
 
விழித்துக்கொள்ள
 
அன்னை மடிமீது
 
இளம்பனியாய் இளையவன்
 
உறங்கக் கண்டு
 
நெருப்பாய்க் கொதித்திட
 
விலக மனம் இன்றி
 
உறுகியதோ பனித்துளி?
 

கதிர்மீது உருகும் பனி
அழுகின்ற முகமாய்த் தோன்ற
 
கண்டு கதிரவன் தடுமாற
 
அன்னையின் அரவணைப்பு
இன்னும் சற்று அதிகம்
 
இளம்பனிக்குக் கிடைத்திட
 
மேகத்திற்குள் ஒளிந்ததோ சூரியன்?
 

பூத்துக் குலுங்கும் பூமித் தாய் அவள்
புன்னகைக்குத் துணையாய் கதிரவன் இருக்க
 
முத்தாய் முகத்தில் பூத்து
முத்தங்கள் பதித்துச் சென்றதோ பனித்துளி?
 

***** 

சமூக அக்கறையை, சுவைமிகு கற்பனையைக் கவிதைகளாக்கித் தந்திருக்கும் வல்லமைமிகு கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது இனி…

விடியும் வேளை…

விடியும்வரை
வியாபித்திருந்தது
பனிநீரின் அரசாங்கம்..

பச்சைப் புல்நுனிமுதல்
பரந்துயர்ந்த மரங்கள்
பட்ட மரங்கள்,
விட்டுவிடவில்லை எதையும்
எட்டும் தூரம்வரை..

ஆட்சி மாறுகிறது
அதிகாலையில்,
பகலவன் வருகிறான்
பதவி ஏற்க..

பதறி ஓடும்
பழைய ஆட்சியாளர்கள்-
பனித்துளிகள்…!

இருட்டிலே அரசாட்சி செய்த பனிநீர், பகலவனின் வெளிச்சம் வந்ததும் அகலுவதை, புதிய ஆட்சியாளர்கள் பதவி ஏற்கையில் பழையவர்கள் பதறி ஓடும் அரசியல் நிகழ்வுக்குச் சுவையாக ஒப்பிட்டிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *