நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 31
-நாங்குநேரி வாசஸ்ரீ
31.வெகுளாமை
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
எங்க தன் கோவம் பலிக்குமோ அங்க கோவப்படாம இருக்கவன் தான் கோவத்த கட்டுப்படுத்துதவன். எங்க பலிக்காதோ அங்க கோவத்த தடுத்தா என்ன? தடுக்காம விட்டாதான் என்ன?
குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற
நம்மள விட எளச்சவங்க கிட்ட கோவப்படுதது கெடுதல குடுக்கும். நம்மள விட பலசாலிகிட்ட கோவப்படுதது மாதிரி கேடும் வேற இல்ல.
குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்
யார் கிட்டயும் கோவப்படாம அத மறந்து விட்டுப்போடணும். ஏம்னா அதனால தீம தான் வெளையும்.
குறள் 304:
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற
மொகத்துல சிரிப்பாணியையும் மனசுக்குள்ளார சந்தோசத்தையும் கொல்லுத கோவத்த போல பகையாளி வேற உண்டா?
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
ஒருத்தன் தன்னயத்தானே காக்க நெனச்சாம்னா அவன் கோவம் வராம பாத்துக்கிடணும். இல்லன்னா கோவம் அவன கொன்னு போடும்.
குறள் 306:
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
கோவம் அது இருக்கவன அழிக்குததோட அவனோட சொந்த பந்தத்தையும் சேத்து அழிச்சுப்போடும்.
குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
கையால ஓங்கி தரையில அடிச்சவனுக்கு அவன் கை தான் வலிக்கும் அப்டிதான் கோவப்படுதவங்களோட நெலமயும்.
குறள் 308:
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
கொழுந்து விட்டு எரியுத தீ நம்ம மேல படுதது மாதிரி பெருந் தீமய ஒருத்தன் செஞ்சாலும் கோவப்படாம இருக்க முடியும்னா அது நமக்கு நல்லது.
குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்
மனசுக்குள்ள கோவப்படாம இருக்கணும்னு நெனக்கவனுக்கு அவன் நெனச்சது எல்லாம் கெடச்சு போடும்.
குறள் 310:
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
பெருங்கோவக்காரன் செத்தவனுக்கு சமானம். கோவமே படாதவங்க துறவிக்கு சமானம்.