நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 32
நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 32
32. இன்னா செய்யாமை
குறள் 311:
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
பெரிய சொத்து கெடைக்கும்னாலும் மத்தவங்களுக்கு கெடுதல் செய்ய நெனைய மாட்டாங்க சுத்த மனசுக்காரங்க.
குறள் 312:
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
கோவப்பட்டு தீம செஞ்சவங்களுக்கும் பதிலுக்குக் கெடுதல் செய்யாம பொறுத்துக்கிடதுதான் குத்தமில்லாத மனசுக்காரங்களோட கொள்க.
குறள் 313:
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்
நாம சும்மா இருக்கையில வம்புக்கு இழுத்து தொந்தரவு செய்யுதவனுக்கு நாம கெடுதல் செஞ்சோம்னா , செஞ்ச பொறவு அது தப்ப முடியாத அளவு துன்பத்த குடுக்கும்.
குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
நமக்கு கெடுதல் செஞ்சவங்கள தண்டிக்கணும்னு நெனச்சா பதிலுக்கு அவங்க கூசுத அளவு நல்லத செய்யணும். பொறவு அவுங்க செஞ்ச கெடுதலயும் நாம செஞ்ச நல்லதயும் மறந்து போடணும்.
குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை
மத்த உசிரு படுத துன்பத்த தன் துன்பம் போல நெனயாதவனுக்கு புத்தி இருந்து என்ன பிரயோசனம்?
குறள் 316:
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்
ஒருத்தன் இது கெடுதல செய்யும் னு வாழ்க்கைல அனுபவிச்சு அறிஞ்சத மத்தவனுக்கு செய்யாம இருக்கணும்.
குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
எவ்வளவு சிறிசுன்னாலும், யாருக்குன்னாலும், எப்பம்னாலும் மனசார கெடுதல் செய்யாம இருக்குதது நல்லது.
குறள் 318:
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்
இது தான் உசிருக்குத் துன்பத்த கொடுக்குததுனு புரிஞ்சுக்கிட்ட பொறவு அத மத்த உசிருக்கு செய்ய நெனக்குதது என்ன காரணத்தாலோ?
குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
காலையில ஒருத்தருக்கு கெடுதல் செஞ்சாம்னா, அவனுக்கு கருக்கல் ல கேடு தானா வந்து சேந்துக்கிடும்.
குறள் 320:
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
செய்யுத எல்லா கெடுதலும் அத செஞ்சவன தான் வந்து சேரும். அதனால துன்பம் இல்லாம வாழ நெனக்கவன் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யக் கூடாது.
(அடுத்தாப்லயும் வரும்….