-சேஷாத்ரி ஸ்ரீதரன்

கோவில் இயக்கம் தந்திவர்மன், அவன் மகன் கம்ப வர்மன் காலத்தில் கருங்கல் கட்டடமான கற்றளி இயக்கமாக உருப்பெற்று ஆகமமாக முறைப்படுத்தப்பட்ட போது கோவில்களில் ஆடல், பாடல், பூசனை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கெனத் தம்மைத் தாமே மனமுவந்து ஒப்புக் கொடுப்போர் கோவில்களில் ஏற்கபட்டு அவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகளும் ஆட்சியாளர்களால் செய்துதரப்பட்டன. தம்மை இறைவனுக்கு அடியவராக ஒப்புக் கொடுத்ததால் இவர்கள் தேவரடியார் எனப்பட்டனர். இதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர். இவருள் அரசகுலத்தாரும் இருந்தனர். கோவில்களில் பெண்களுக்குத் தரப்பட்ட மிக உயர்ந்த பதவி இது என்பதே உண்மை மற்றபடி பலரும் எண்ணுவது போல இந்த தேவரடியார் பாலியற் பெண்டிர் அல்லர்.

பல்லவர் காலத்தை அடுத்து வந்த சோழப் பேரரசு காலத்தில் கோவில் கற்றளி இயக்கம் அவர் ஆட்சிப் பரப்பு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இராசராசன் ஆட்சியின் போது தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள்ளே மாடித் தளத்தில் தேவரடியார்க்கு என்றே இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தேவரடியாருக்கு தனி வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவர்கள் ஆடல், பாடல், கல்வி, கேள்விகளில் சிறந்தோராக இருந்ததால் வேந்தர் முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் நன்கு மதிக்கப் பட்டனர்.  இவர்கள் சிறந்த கொடையாளிகளாகவும் இருந்துள்ளனர். கோவில்களுக்கு பல நிவந்தங்கள், கொடைகள் வழங்கி உள்ளனர். இவர்களின் சிறந்த குணங்களுக்காக இவருள் சிலரை வேந்தரும், மன்னவரும், அரையரும் மணந்தனர். இதில் குறிப்பிடத்த தக்கவர் மதுரை ஆண்ட  வேந்தர் வீரபாண்டியன் ஆவார். இவர் திருவானைக்காவில் சாந்தி கூத்து ஆடும் சொக்கத்தாண்டாள் என்ற தேவரடியாளை மணந்தார். வேந்தனை மணந்ததால் அவள் உலகமுழுதுடையாள் எனப்பட்டாள். இவளைப் பற்றிய கல்வெட்டுகள் குமரி மாவட்டம் சுசீந்திரம், நெல்லை வள்ளியூர் ஆகிய இடங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றை இனி நாமும் காண்போம்.  

சுசீந்திரம் கோவில் மேற்கு பிரகாரத்தில் உள்ள வாகனப் புரைச் சுவரில் பொறித்த கல்வெட்டு.

  1. கொல்லம் – 432  மாண்டை(த்) தனு ஞாயிறு 19 சென்ற வி(யாழ) வாட்டையும் வி
  2. சாகமும் ஏகாதேசியும் பெற்ற இந்நாளால் நாஞ்சி நாட்டூர் சுவீந்த்ர சுந்தர சோழச் சதுர்வேதி
  3. தி மங்கலமுடையார் சுவீந்தரம் உடைய நயினார் சீ கோயிலில் திருச்சுற்று மண்டபத்திலிருந்து
  4. சபையும் ஸ்ரீகாரியஞ் செய்வாரும் இருந்தெழுதின செய்கட ஓலை(க்) கரணமாவது உடையார் சுவீந்தர
  5. முடையார்க்கு பெருமாள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர் நம்பிராட்டியார் சொக்கத்தாண்டாளான
  6. உலக முழுதுடையார் நித்தல் செல்வதாக திருவமுதுக்கு கற்பிச்ச அரிகுறுணி இருநாழிக்கும் அஞ்சிரண்டால்
  7. நெல் முக்குறுணி ஒரு நாழியும் பூஜாகாலத்து அமுது செய்யும் பிராமணர் மூவர்க்கு வெஞ்ச
  8. நமுட்பட நெல் முக்குறுணியுங்கூட _ _ _ _ க்குங் கல்பிச்ச புதுப்பொன் அச்சு இருநூறு
  9. இவ்வச்சு இருநூற்றிலும் இவ்வூர் தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி கைக்கொ
  10. ண்ட அச்சு 155 க்கும் நாளொன்றுக்குச் செலுத்தும் அரிகுறுணி யிதில் பெரிய நாயனார்(க்)கு திரு
  11. வமுதுக்கு அரி அஞ்ஞாழியும் திருவேங்கடத்துக்கு திருவமுது செய்விச்சு சோறுதான் கொண்டுவரும்
  12. அரி முந்நாழியும் பிராமண போஜனத்துக்கு ஓராண்டில் இவள் செலுத்தும் மாசம் ஒன்பது
  13. ம் இப்படி செலுத்துவாளாகவும் செலுத்துமிடத்து முட்டுகில் இவள் கைக்கொண்ட அச்சு 155
  14. க்கும் ஓன்றொன்றே காலாக வரக் கண்ட அச்சு 39 ங்கூட அச்சு 194 க்குஞ் செலுத்தின  நில
  15. ங்கள் வேட்கைக் குளத்தின் கீழ் அமரபுயங்க வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ _ _ _ _
  16. கீழ் மருதுறை தடி 1 நில _ _ _ _ _ _ பள்ள மடை தடி _ _ _ _ _ _ யும் இந்திர வீரவாய்க்காலுக்கு தெற்கு _ _ _ _
  17. _ _ _ _ _ _ யும் ஆகத்தடி மூன்று _ _ _ _ _ _ ன் மேல் அச்சு _ _ _ _ _மேல் அச்சு _ _ _ _ மேல்படியாள்  _ _ _ _ _ _ _
  18. _ _ _ _ _ அமரபுயங்க வாய்க்காலுக்கு தெக்கு _ _ _ _ கேசவநாராய _ _ _ _ _ _
  19. _ _ _ _ _ _ பனையறைதடி ஒன்று நிலம் வாய்க்கால் _ _ _ _ _ கு வடக்கு
  20. றைதடி 1 நில _ _ _ _ _ _ ஆக _ _ _ _ _ யின் மேலும் ஓ _ _ _ _ _ _
  21. _ _ _ _ _ _ _ _ _ யின் மேலும் ஒள்ள _ _ __ _ _ _ __
  22. அச்சு _ _ _ _  பிரம்ம சுவமில் 5 ஆம் கண்ணாற்றில் குளத்தில் பெரு _ _ _ _ _
  23. அச்சு 90 கொடுத்து விலை கொண்டுடைய _ _ _ _ _ றொன்றாலும் ஆன இந்நில _ _ _
  24. தொண்ணூற்று நாலும் மேல்படியில் செல்லாண்டி சேகராண்டாள் கைக் கொண்ட _ _ _

வியாழவாட்டை – வியாழ ஆழ்ச்சை(கிழமை); செய்கட ஓலை – செய்யக்கடவது பற்றிய ஓலை; சபை – கருவறை பிராமணர்; ஸ்ரீகாரியம் – கோவில் திருப்பணியாளர்; கரணம் –ஆவணம்; நம்பிராட்டி – துணைவி, தேவி, மனைவி;  நித்தல் – எப்பொழுதும்;  கற்பிச்ச – பிடிபாடு, வழிகாட்டுநெறி,  guidelines; வெஞ்சனம் – சமையல்; அச்சு – காசு; முட்டுகில் – நின்றுபோனால். 

கொல்லம் ஆண்டு 432 (கி.பி. 1257) தனுர் ராசி நேரும் ஞாயிற்றுக்கிழமை 19 நாள் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டது. கடந்த வியாழக்கிழமை விசாக நட்சத்திரமும் ஏகாதேசியும் கூடிய நாளில் நாஞ்சில் நாட்டூரான சுசீந்திரம் என்னும் சுந்தரச்சோழ சதுர்வேதி மங்கலத்தில் சுசீந்திரமுடைய ஈசனின்  கோவில் திருச்சுற்று மண்டபத்தில் கருவறைப் பிராமணரும் கோவிற் பணியாளர்களும் அமர்ந்து எழுதிய செய்யக்கடவதான ஓலை ஆவணம் யாதெனில் இறைவர் சுசீந்திர ஈசனுக்கு வேந்தன் வீரபாண்டியனின் தேவியான சொக்கத்தாண்டாள் என்னும் உலகமுழுதுடையாள் எப்பொழுதும் இறைவனுக்கு திருவமுது நடந்துவர வேண்டும் என்று வழிகாட்டுநெறி தந்து அரிசிகுறுணி அளவில் இருநாழிக்கும் 10ன் அளவு நெல்லை ஒரு நாழி அளவிற்கு அதற்குத் தரவேண்டும். பூசனை காலத்தில்  சோறு உண்பிக்க மூன்று பிராமணருக்கான சமையல் செலவு உட்பட நெல் முக்குறுணி அளவிற்கு கொடுக்க வழிகாட்டுநெறி தந்து இவற்றுக்கு அவள் தந்த புதுப்பொன்னாலான காசு இருநூறு ஆகும். இந்த இருநூறு பொற்காசில் 155 ஐ சுசீந்திரத்து தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி என்பாள் கடனாகப் பெற்றுக் கொண்டாள். இதற்கான வட்டியை  இவள் ஒவ்வொரு நாளும் குறுணி அளவு அரிசி தரவேண்டும். இந்த குறுணி அரிசியில் ஐந்துநாழி ஈசன் திருவமுதுக்கும்  எஞ்சியவற்றில் திருமாலுக்கு திருவமுது சோறும் ஆக்க வேண்டும்.  இவள்  மூன்று நாழி அளவில் கொண்டு வரும் அரிசி பிராமணர் உணவிற்கு ஆகும். ஓராண்டில் இவள் மாதாமாதம் செலுத்த வேண்டிய பணம் ஒன்பது ஆகும். இவற்றை எல்லாம் செய்ய முடியாது நின்று போனால் 155 பொற்காசுகளுக்கு  ஒரு காசிற்கு கால் பொற் காசு என்ற கணக்கில் 39 பொற்காசையும் கூட்டி 155 + 39 = 194 பொற்காசிற்கு செலுத்த வேண்டிய அடமான நிலங்கள் வேட்கைக் குளத்திற்கு கிழக்கே உள்ள அமரபுயங்கன் வாய்க்காலுக்கு வடக்கேயும், இந்திர வீரவாய்க்கால்க்கு தெற்கேயும் உள்ளன என்று நில எல்லைகள் குறிக்கப்படுகின்றன. இவளோடு வேறு ஒரு தேவரடியார் செல்லாண்டி சேகராண்டாள் வாங்கிய பணதிற்கு என்ன செய்யவேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் கல்வெட்டு பெரிது என்பதால் இங்கே தரப்படவில்லை. இணைப்பில் அதைக் காணலாம்.

உலகுமுழுதுடையாள் தந்த காசு உடனடியாக வட்டிக்கு விடப்பட்டு அதன் மூலம் வட்டியாக குன்றாண்டி திருவாண்டியிடம் அரிசி பெறப்பட்டு  உலக முழுதுடையாளின் திருவமுதப்படிக்கான வழிகாட்டுநெறி நிறைவேற்றப்படுகின்றது. இது ஏனெனில் பண்டு காசு புழக்கம் செல்வரிடம் மட்டுமே நிலவியது. பொது மக்கள் பண்டமாற்றில் வாழ்க்கையை நடாத்தினர். அதனால் இப்படி ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் கோவில் பணியாளருக்கு ஏற்பட்டது. கோவில் பணியாளருக்கும் குன்றாண்டிக்கும் ஏற்பட்ட உடன்பாடே கல்வெட்டாகக் காட்சிப்படுகின்றது. பிற்பகுதியில் கல்வெட்டு பல்லிடங்களில் சிதைந்துள்ளதால் செய்தியை முழுவதுமாக அறிய முடியவில்லை. கல்வெட்டில் சேரநாட்டு வழக்குச்சொல் ஆங்காங்கே புழங்குகின்றது. கி.பி.

1257 இல் ஜடவர்ம சுந்தர பாண்டியன் தான் ஆட்சியில் இருந்தான், வீரபாண்டியன் 1309 இல் தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறான். ஆண்டுக் கணக்கு வாசிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது. அல்லது சுந்தர பாண்டியனுக்கு வீரபாண்டியன் என இன்னொரு பெயர் இருந்துள்ளது எனக் கொள்ள வேண்டும்.

பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக். 45 & 46, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் Travancore archaeological series, Vol 5.  

இனி, திருநெல்வேலி வள்ளியூரில் உள்ள மூன்றுமுக அம்மன் கோவிலில் பொறித்த கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ கோசடைய பன்மரான திரி
  2. புவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ வீர பாண்டிய
  3. தேவர் (க்)கு யாண்டு 4 வது (ராஜகம்பீ)
  4. ர வளநாட்டு திருவானைக்காவில்
  5. திருப்பதியில் சாந்திக் கூத்திகளில்
  6. சொக்கத் தாண்டாரான உலகமு
  7. ழுதுடையார் வள்ளியூர் வடக்கு வா
  8. சலில் தேவி கோயிலுக்கு உபான (ஜெ
  9. கதி குமுதோபரி பட்டிகையந்த மகா) 
  10. தேவியையும் வர்திச்சுத் தங்கள் பேத்தி(யா
  11. ரா) சிறிய பிள்ளை (யை உலகத் தாண்டாளுக்)
  12. கும் _ _ _ _ _ ல அவ _ _ _ _ _ _ _ _ யு
  13. ருளு _ _ _ _ _ _ _ கோயில் _ _ _ _ _ _ _ _
  14. ஞ்செ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _  உலகமுழுதுடையா
  15. த _ _ _ _ _ _ _ _ க்கு _ _ _ _ _

சாந்தி கூத்தி – சாந்தி கூத்தாடும் ஆட்டத்தி; உபான ஜகதி – கருவறைப் புறச் சுவர் கீழ் பகுதி;  குமுதோபரி – விமான உறுப்புள் ஒன்று; பட்டிகை – கருவறை புறச் சுவர் உறுப்பு; வர்திச்சு – எழுந்துருளவித்து

வேந்தன் வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1313)  ராஜகம்பீர வளநாட்டில் அமைந்த திருவானைக்காவல் கோவிலில் சாந்தி கூத்தாடும் கூத்திகளில் சொக்கத் தாண்டாள் எனும்  உலக முழுதுடையாள் வள்ளியூர் வடக்குவாசலில் அமைந்த அம்மன் கோவில் கருவறை புறச்சுவருக்கு உபான ஜகதி, குமுதம், முப்பட்டை ஆகியவற்றை கட்டிக் கொடுத்து அந்த அம்மனை எழுந்தருளச் செய்தாள். தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள். பிற செய்தி கொண்ட கல்வெட்டுப் பகுதி சிதைந்ததால் அச்செய்திகளை அறிய முடியவில்லை.

வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் சொக்கத் தாண்டாள் தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள் என்றால் வீரபாண்டியன் முதுமையில் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் எனத் தெரிகின்றது. இளமையில் இவன் அவளை மணந்தான் என்பது புலனாகின்றது. சொக்கத் தாண்டாள் ஒரே காலத்தில் சுசீந்திரம் மற்றும் வள்ளியூருக்கு திருச்செலவு சென்றாள் என அறியலாகின்றது.

பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக்.  48 & 49, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் A.R.E. 1929-30 No 364 P 37.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வீரபாண்டியன் மணந்த தேவரடியாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *