குறளின் கதிர்களாய்…(255)
செண்பக ஜெகதீசன்…
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு.
-திருக்குறள் -503(தெரிந்து தெளிதல்)
புதுக் கவிதையில்…
அரிய நூற்கள் பல
கற்றறிந்த
குற்றமற்றவர்களையும்
அணுகி ஆராய்ந்தால்,
அவர்களிடமும்
அறியாமை என்பது இல்லாதிருத்தல்
அரிதே…!
குறும்பாவில்…
பலநூல் படித்துத் தேர்ந்த
பண்பாளர்களையும் பரிசீலித்தால் அவர்களிடமும்
அறியாமை இல்லாதிருத்தல் அரிதே…!
மரபுக் கவிதையில்…
அரிய நூல்பல கற்றேதான்
அறிவில் பண்பில் சிறந்தோரெனத்
தெரிந்த சான்றோர் தம்மையுந்தான்
தீர வாய்ந்து பார்த்தாலே,
தெரியும் உண்மை ஒன்றேதான்
தூய பண்புடன் அறிவுடைய
பெரியோர் இவரிடம் அறியாமை
போகா திருத்தல் அரிதாமே…!
லிமரைக்கூ..
பலநூல்கற்ற அறிவு பெரிது
அத்துடன் பண்புநிறைந்தவரையும் ஆராய்தால்
அறியாமையவரிடம் இலாதிருத்தல் அரிது…!
கிராமிய பாணியில்…
தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
மனுசன நல்லாத் தெரிஞ்சிக்கோ,
தெளிவாகத் தெரிஞ்சுக்கோ..
பெரிய படிப்பெல்லாம் படிச்சி
பலநூல் படிச்ச அறிவாளி
நல்ல கொணமுள்ளவனாயிருந்தாலும்,
அவனயும் கொஞ்சம் ஆராஞ்சிபாத்தா
அவங்கிட்டயும்
அறியாம இல்லாமயிருக்கது பெருசுதான்..
அதால
தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
மனுசன நல்லாத் தெரிஞ்சிக்கோ,
தெளிவாகத் தெரிஞ்சுக்கோ…!